Friday, December 22, 2006

ஆற்றில் இறங்கிய பிறகு..

புல்லில் பனித்துளி
துளி - 9

[அழகிகள் உலகில் - தொடர்ச்சி..]

நட்ட நடுவில் இருந்த மேடையில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் அந்த பெண் நின்றிருந்தாள். அழகென்றால் அவ்வளவு அழகு! அந்த அழகை மறைக்க விரும்பவில்லையோ என்னவோ சிக்கனமாக இரண்டே இரண்டு இடங்களை மட்டும் 'போனால் போகிறதென்று' மறைத்திருந்தாள்.

ஒயிலாக நடந்து வந்து, தூணில் சாய்ந்து நின்று தன் வலது காலால் இடது காலில் மேலிருந்து கீழாகத் தடவ, என்னவோ பெரிய சாதனை செய்தது போல் முழுக் கூட்டமும் விசிலடித்து ஆர்ப்பரித்தது.

இப்போது மெல்ல மேடையிலிருந்து இறங்கி ஒவ்வொரு மேசையாக செல்கிறாள். அந்த அறையின் பல பகுதிகளிலிருந்தும் 'இங்கே. இங்கே..' என்று குரல்கள் எழுகின்றன.

மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்க, அவரருகே சென்று அந்தக் கிண்ணத்தைப் பிடுங்கி கிடுகிடுவென்று ஒரே மடக்கில் குடிக்க, கூட்டம் ஹோவென்று ஆர்ப்பரிக்கிறது. மைக்கில் 'நோ கிக் யா!" என்று அவள் சொல்ல, திரும்ப 'ஹோ!'

அவள் செல்லுமிடமெல்லாம் ஒளி வெள்ளம் தொடர்ந்து வருகிறது. கதவருகில் இருட்டைத் துணையாக வைத்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.

இப்போது அந்த பெண் எனக்கு நேர் எதிரே இருந்த வரிசை நோக்கி வர ஆரம்பிக்க, ஒளி வெள்ளம் என்னைத் தாண்டிச் சென்றது.

என்னைக் கடந்து சென்ற அந்தப் பெண் ஒரு விநாடி தயங்கி நின்று, என்னைத் திரும்பிப் பார்த்தாள். ஒரு விநாடி தான். சட்டென்று தோள்களைக் குலுக்கியபடி நடக்க ஆரம்பிக்க, ஒளி வட்டம் அவளை விழுங்குவது போல் தொடர்ந்தது.

அவளுக்கு முன்னமேயே என்னைத் தெரிந்திருக்குமா என்ன? சார்லஸ் சொன்ன ஸ்டெல்லாவாக இருக்குமோ? நான் இண்டியன் செஷனில் வாசிக்கும் போது என்னைப் பார்த்திருக்க வேண்டும். நான் மிக நல்லவன் என்று நினைத்திருந்ததற்கு மாறாக இப்போது கேபரே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டிருப்பாளோ என்றெல்லாம் மனதில் மாய்ந்து போனேன்.

அல்லது, இந்த மாதிரி வயதில் இளையவர்களின் முன் இப்படி நிற்க வேண்டியிருக்கிறதே என்று கூட வருத்தப் பட்டிருக்கலாம். எனக்கு உடுக்கை இழந்து போன தடுமாற்றம் ஒரு விநாடி ஏற்பட்டது.

அடுத்த காட்சி தொடங்கும் நேரம் ரொம்ப நல்ல பிள்ளை போல், காங்கோ ட்ரம் பக்கம் போன நான், யாரோ என்னையே உற்று நோக்குவது போல் தோன்றத் திரும்பினேன். பாபு மாஸ்டர் தான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"வணக்கம் சார்" என்றார்.

நான் தடுமாறினேன்.

"கேபரே பார்க்கிறீங்களா சார்? வர்றேன் சார். உங்க சித்தப்பா கிட்டே சொல்றேன் சார்" என்றார்.

நான் தலை குனிய, என் முதுகில் ஒங்கித் தட்டி விட்டு, சிரித்தார். நான் தப்பிவிட்ட மகிழ்ச்சியில் மெல்ல புன்னகைத்தேன்.

"வேலை பண்ண வந்திருக்கோம். நம்ம வேலை உண்டு, நாம உண்டு அப்படின்னு இருக்கணும். புரியுதா?" என்றார்.

புரியவில்லை என்றாலும் தலையாட்டினேன்.

"நான் இப்ப தான் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னே வந்தேன்!" என்றேன்.

"ரெண்டு நிமிஷமானா என்ன? ஒரு மணியானா என்ன? எல்லாம் ஒண்ணு தான்!" என்றார் சார்லஸ் சிரித்து விட்டு.

என்னவோ ஒரு பெரிய தவறு செய்து விட்டது போல் அன்று என்னால் ஒன்றி வாசிக்க முடியவில்லை.

அடுத்த நாள் இண்டியன் செஷன் முடிந்த பிறகு, நான் வெளியே போகவில்லை. கதவருகே போடப் பட்டிருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.

'ஆற்றில் இறங்கியாகி விட்டது. சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?' என்று எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

இது ஒரு காரணம் என்றால், இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது. அந்த வயதிற்கேயுரிய சொல்ல முடியாத ஒரு எதிர்பார்ப்பு மனதில் இருந்தது.

கேபரே என்றால் நான் என்னவோ ஏதோ என்று நினைத்திருந்தேன். சிற்றாடைகள் இரண்டு தரித்து சுற்றி சுற்றி வருவது தான் கேபரேயா என்ன? ஒரு வேளை, நான் வருவதற்கு முன் முக்கிய காட்சி முடிந்திருக்குமோ என்று ஐயம் ஏற்பட இன்றைக்கு தவற விடாமல் முதலிலிருந்து கடைசி வரை பார்த்து விடுவது என்று முடிவு செய்து அங்கேயே இருந்து விட்டேன்.

ஐந்து பெண்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஐந்தைந்து நிமிடங்கள் ஒவ்வொரு வகையாக நேர்த்தியாக நடனமாடிச் சென்றார்கள். நான் நினைத்த மாதிரி எல்லாம் எதுவும் ஏடாகூடமாக ஆகவில்லை. எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றமாக இருந்தாலும், நான் இன்னும் நல்லவன் தான் என்று மனசுக்குள் மகிழ்ச்சியடைந்தேன்.

டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

புது வருடத்தை வரவேற்க எல்லோரும் காத்திருந்தனர். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் மது வெள்ளத்தில் மூழ்கி நீந்திக் கொண்டிருக்க முயன்று கொண்டிருந்தனர். அப்போது தான் அது நடந்தது.

இரண்டு பேர் ஏதோ ஒரு உப்புசப்பில்லா காரணத்துக்கு வாக்குவாதத்தில் இறங்கப் போக, அதில் ஒருவர் பக்கத்திலிருந்த பாட்டிலை எடுத்து மேசையில் உடைத்து வீசும் வரை போனது. சிலீர் என்று கண்ணாடிச் சிதறல்கள் அறையெங்கும் பரவ, 'வீல்' என்று அலறியபடி கேபரே ஆடிக் கொண்டிருந்த பெண் உள்ளே ஓடி விட்டாள்.

பயந்து போன அந்த பெண் அதிர்ச்சி மிகுதியில் மயங்கிச் சாய, சார்லஸ் சட்டென்று அந்தப் பெண்ணைப் பிடித்து, கைத்தாங்கலாக மெள்ளப் படுக்க வைத்தார்.

"தண்ணி கொண்டாங்கப்பா!" என்று சார்லஸ் சொல்ல, நான் ஓடினேன். நான் கொண்டு வந்த தண்ணீரைத் தெளித்தவுடன், அந்த பெண் மெல்ல கண் திறந்து எழுந்து உட்கார்ந்தாள்.

தண்ணீரைக் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், சார்லஸைப் பார்த்து "பயந்தே போயிட்டேன் அண்ணே!" என்றாள்.


நான் திடுக்கிட்டேன். இதே பெண் சில நிமிடங்களுக்கு முன் அந்த மேடையில் என்னவெல்லாம் செய்தாள்! சார்லஸ் அதி வேகத்துடன் கிடார் வாசிக்க அதே வேகத்துக்கு ஈடு கொடுத்து அவர் முன் நின்று ஆடிய அந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. சார்லஸை சுற்றி வந்து அவர் முதுகில் தன் முதுகு வைத்து ஆட, சார்லஸ் குனிந்து அவளை இன்னும் அழகாக அனுமதித்தது எல்லாம் மனசுக்குள் காட்சிகளாக ஓடின.

"அந்த பாட்டில் எனக்கு பக்கத்தில் வந்து விழுந்ததும் ஒரு நிமிஷத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அண்ணே!" என்றாள். தோள்களைக் குலுக்கி அழகாக பயப்பட்டாள்.

தம்ளரை என்னிடம் திரும்பக் கொடுத்து விட்டு, "தேங்க்ஸ் பிரதர்!" என்றாள். நான் புன்னகைத்து விட்டு நடந்தேன்.

'வேலை பண்ண வந்திருக்கோம். நம்ம வேலை உண்டு, நாம உண்டு அப்படின்னு இருக்கணும்' என்று பாபு மாஸ்டர் சொன்னதற்கு அர்த்தம் இப்போது புரிகிற மாதிரி இருந்தது.

[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, November 08, 2006

அழகிகள் உலகில்..

புல்லில் பனித் துளி
துளி - 8



பெங்களூருக்கு வந்த புதிதில் அந்த மாதிரி இக்கட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சும்மாவா? பதினைந்து நாட்கள்! தொடர்ந்து பதினைந்து நாட்கள்!

பெங்களூரின் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கும் அந்த பிரபலமான இரவு விடுதியில் பதினைந்து நாட்கள் தொடர்ந்து கேபரே பார்க்கும் இக்கட்டு தான் அது.

'இக்கட்டா?' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது. 'அருமையான உடற்கட்டைப் பார்த்து விட்டு வெளியே இக்கட்டு என்று சொல்கிறான் பார்' என்று ஒருவர் கேலி செய்வதும் கேட்கத் தான் செய்கிறது. இட்டுக் கட்டுதல் என்று நீங்கள் நினைத்தாலும் அது எனக்கு இக்கட்டு தான்.

கல்லூரி படிப்பை முடித்து விட்டு பெங்களூரில் அருமையான ஒரு அலுவலகத்தில் காலாட்டிக் கொண்டே செய்யும் ஒரு வேலையில் சேர்ந்து கை நிறைய நோட்டுகளைப் பார்க்கப் போகிறேன் என்று கண்களை மூடிக் கொண்டு வந்தவனுக்கு 'வேலை செய்து அனுபவம் பெற்று வா' என்று அலுவலகங்கள் எல்லாம் கையை விரித்து அனுப்பிய காலம் -

கல்லூரி நாட்களில் இசைக் குழுவில் இருந்த அனுபவத்தில் ஒரு பிரபல இசைக் குழுவில் சேர்ந்திருந்தேன். அங்கு இருந்த இசை தாதாக்கள் முன்னர் நான் கடுகு மாதிரி தான் தெரிந்தேன். ஆனாலும் என்னை ஊக்குவித்தார்கள். தாள லயம் எனக்கு அருமையாகத் தெரிகிறது என்று பாராட்டி இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வாய்ப்பு தந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் பற்பல ஊர்களுக்கும் செல்கிற வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மனம் வருமா என்ன? உதவித் தொகை மாதிரி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் தந்தார்கள். மூன்று மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க காங்கோ ட்ரம் வாசித்து விட்டு அதை வாங்கும் போது மனது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டதென்னவோ உண்மை தான். ஆனாலும் வேலை இல்லாமல் இருந்த இந்த பட்டதாரிக்கு அந்தத் தொகையே பெரிதாகத் தெரிந்தது.

அந்த மாதிரி பெரிய இசைக் குழுவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய அதிர்ஷ்டம். ஊர் ஊராக சுற்றும் வாய்ப்பு. எனக்குப் பிடித்த இசையுடன் உறவு. மாதத்தில் பதினைந்து நாட்களாவது இசை நிகழ்ச்சிகள். இவையெல்லாம் சேர்ந்து என்னை மௌனமாக அந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள வைத்தன.

90 சதவிகிதம் கன்னடப் படப் பாடல்கள் தான் நிகழ்ச்சியில் இருக்கும். .மற்றவை இந்தி பாடல்கள். போனால் போகிறதென்று இரண்டு மூன்று தமிழ் தெலுங்கு படப் பாடல்களும் இருக்கும். முதல் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் ரொம்பத் திணறிப் போனேன். எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த பாபு மாஸ்டர் தான் ரொம்ப உதவினார். கன்னடப் பட கேஸட்டுகள் கொடுத்துக் கேட்கச் செய்தார். ஓரிரு வாரங்களில் தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டேன்.

கல்யாணக் கச்சேரிகள் என்றால் தமிழ்ப் பாடல்கள் நிச்சயம் பாடுவார்கள். அதுவும் நிச்சயம் 'இளைய நிலா பொழியும்'. தமிழ் என்றால் கொஞ்சம் உற்சாகம் கூட்டி வாசிப்பதாக எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். தமிழ்ப் படப் பாடல் என்று தொகுப்பாளர் அறிவிக்கும் போது எல்லோரும் ஒரு சேர என்னைப் பார்ப்பார்கள். 'கணேஷன ஹாடு பந்த்தப்பா' (கணேஷுடைய பாடல் வந்து விட்டது} என்று கிண்டலடிப்பார்கள்.

இந்தக் குழுவில் இருந்ததால் பெங்களூரில் நடக்கும் மிக முக்கியமான ரெக்கார்டிங் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இளையராஜா ரெக்கார்டிங் நிகழ்ச்சியில் ஒரு முறையாவது பங்கேற்று விட வேண்டும் என்றெல்லாம் ஆசைப் பட ஆரம்பித்தேன்.

ஒரு முறை எங்கள் குழுவின் பிரதான அங்கத்தினரான பாலி ஒரு துண்டு சீட்டில் ஒரு தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தார். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் இடைப் பட்ட நேரத்தில் தான் அதைச் செய்தார்.

"இது ஹாலிடே இன் நம்பர். ரூம் நம்பர் 105. பாலு வந்திருக்காரான்னு கேட்டுட்டு வந்துடு" என்றார். நான் தலையாட்டி விட்டு அசிரத்தையாகக் கிளம்ப, திரும்பக் கூப்பிட்டார்.

" யார் தெரியும் தானே? எஸ்.பி. பாலசுப்ரமணியன்!" என்றார்.

எனக்கு அப்போதே கை நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நா..ன் எஸ்பிபி.யுடன் பேசப் போகிறேனா?!' என்று குதூகலித்தேன். ஏறக்குறைய ஓட ஆரம்பித்தேன்.

"கேன் ஐ ஸ்பீக் டூ மிஸ்டர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் ரூம் நம்பர் ஒன் நாட் ஃபைவ்" என்று கேட்டுவிட்டு என் இதயத் துடிப்பைக் கேட்டபடி காத்திருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

"சாரி சார், நோ ரெஸ்பான்ஸ் ஃப்ரம் த ரூம், எனி மெஸ்ஸேஜ்?"

'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி விடுங்கள்' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு இணைப்பைத் துண்டித்தேன்.

இந்த மாதிரி எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள், எப்போதும் மறக்கவே கூடாத நண்பர்கள், என் வாழ்க்கையில் நான் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்த முக்கிய காலகட்டத்தில் நான் சோர்ந்து போகாமல் காத்தவர்கள்.

அந்த அனுபவங்களில் முக்கியமானது எப்போதுமே என் உதட்டில் ஒரு புன்முறுவலைத் தேக்கி வைக்கும் அந்த நிகழ்வு.

பதினைந்து நாட்கள் - டிசம்பர் 16ஆம் தேதி முதல் புத்தாண்டு வரை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை சிபாரிசு செய்தார் பாபு மாஸ்டர். சுளையாக ஆயிரத்தைநூறு ரூபாய் என்று ஆசை காட்டி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார். கேபரே என்றதும் என் கற்பு பறி போன மாதிரி அலறி வேண்டாம் என்றேன். 'நீ ஒண்ணும் கேபரே ஆட்டத்துக்கு வாசிக்கப் போறதில்லை. அதுக்கு முன் அரை மணி நேரம் இண்டியன் செஷன் இருக்கும். அதுக்கு தான் வாசிக்கப் போறே!' என்றார்.

ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள். அரை மணி நேரம் இண்டியன் செஷன் அதை அடுத்து அரை மணி நேரம் கேபரே. அரை மணி நேர இடைவெளியில் அடுத்த காட்சி. இரண்டு காட்சிகளிலும் முதல் அரை மணி நேரம் இண்டியன் செஷன் என்று இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு பாடல்கள் பாடுவார்கள். யாரும் அதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. எப்படா கேபரே ஆரம்பிக்கும் என்று எல்லோருடைய கண்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்!

ஒரு மணி நேர வாசிப்புக்கு நூறு ரூபாய். ஆஹா, ஒப்புக் கொண்டேன். 'ஆனா, கேபரே...' என்று இழுத்தேன். 'அந்த சமயத்தில் நீ அங்கே இருக்கவே வேண்டாம். மெஜஸ்டிக்கை சுத்திப் பாரு. ஒரு மணி நேரம் கழிச்சு வா. போதும்' என்றார்.

முதல் நாள் இண்டியன் செஷன் முடிந்த அடுத்த விநாடி வெளியே தெருவில் இருந்தேன். எங்கே கேபரே தொடங்கி விடுவார்களோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

நான் இரண்டாவது காட்சிக்கு வந்த போது கிட்டாரிஸ்ட் சார்லஸ் என்னைப் பார்த்து மர்மமாக சிரித்த மாதிரி இருந்தது.

அடுத்த நாளும் நான் நல்ல பிள்ளையாக இரண்டாவது காட்சி தொடங்கும் நேரத்துக்கு உள்ளே நுழைந்தேன். சார்லஸ் அவசரமாக என்னிடம் வந்தார்.

"ஸ்டெல்லா உன்னைத் தேடிகிட்டிருந்தது. போய் பாரு" என்றார்.

"யா...ரு? ஸ்..டெல்லா?" என்றேன்.

பாபு அதற்குள் வந்தார்.

"யா...ரு? ஸ்..டெல்லா?" என்றேன் அவரிடமும். "எதுக்கு என்னைத் தேடணும்?" என்றேன்.

"ஸ்டெல்லா? அது கேபரே ஆர்ட்டிஸ்ட்" என்று சொல்லி விட்டு பாபு சார்லஸைப் பார்க்க, சார்லஸ் கண்ணடித்தார்.

"ஏம்ப்பா அந்த பையனை இப்படி கிண்டல் அடிக்கறீங்க?" என்று கடிந்து கொண்டார் பாபு. என் பக்கம் திரும்பி "சும்மா சொல்றாங்க" என்றார்.

பாபு அந்தப் பக்கம் போகிற வரை காத்திருந்த சார்லஸ் என் முதுகைத் தட்டினார்.

"ஏன் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்கு பயமா?" என்று பகபகவென்று சிரித்தார்.

"என்ன வயசு உனக்கு?" என்றார் சிகரெட்டைப் பற்ற வைத்து.

"இருபத்தி ஒண்ணு" என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அவனவன் நூத்தம்பது ரூபா கொடுத்துட்டு வர்றானுங்க. ஃப்ரீயா கொடுத்தாக் கூட வேணாங்கிறியே? அம்மா திட்டுவாங்களா?" என்று சொல்லி விட்டு திரும்ப பகபகபக!

அதற்குள் செஷன் ஆரம்பித்து விட, கண்களில் திரண்ட கண்ணீரைக் கட்டுப் படுத்த நிரம்ப சிரமப் பட்ட படி நடந்தேன். அன்றைக்கு எக்கச்சக்க தவறுகள்! இசை நின்ற பிறகும் நான் காங்கோ வாசித்துக் கொண்டே இருந்தேன். பாபு கண்களால் எரித்தார். "சாரி" என்று வார்த்தையில்லாமல் உதட்டசைத்தேன்.

அடுத்த நாள் இண்டியன் செஷன் முடிந்து வெளியே போகும் போது நான் திரும்பி சார்லஸைப் பார்க்க, அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 'வெளியே போகாமல் இருந்து விடலாமா?' என்று யோசித்தேன்.


'இருக்கிறதைப் பத்தி ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. கண்ணை மூடிக் கிட்டு உட்காரு' என்று அப்பா, அம்மா, தாத்தா, பெரிய தாத்தா, சித்தப்பா, மாமா எல்லோரும் எதிரொலிகளுடன் பேச.. வெளியே வந்து விட்டேன்.

அரை மணி நேரம் கழித்து திரும்பினேன். உள்ளே அதிரடியாக கிடாரும் ட்ரம்ஸும் முழங்கிக் கொண்டிருக்க.. மணியைப் பார்த்தேன் குழம்பி.

கவுண்ட்டரில் இருந்தவர் என்னைப் பார்த்து புன்னகைத்து "இன்னைக்கு கொஞ்சம் லேட்! இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்றார்.

நான் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து சாய்ந்து கொண்டேன்.

"இங்க உட்கார வேண்டாம்" என்றார் அவசரமாக. "பாஸ் வர்ற நேரம். பார்த்தா என்னைத் திட்டுவாரு. உள்ளே போயிடு. இல்லை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா" என்றார்.

நான் எழுந்து கதவு நோக்கி நடந்தேன். திறந்தேன்.

கிடாரும் ட்ரம்ஸும் சட்டென்று வெளியேறி என்னைத் தழுவிக் கொண்டன.

[தொடரும்..]

[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, November 01, 2006

இன்னாபா இது?!



இன்னாபா இது?!

Tuesday, October 31, 2006

அந்த விபரீத ஆசை

புல்லில் பனித் துளி
துளி 7

எனக்கு எப்போது அந்த விபரீத ஆசை மனதில் உதித்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!

தயவு செய்து நாக்கை உள்ளே இழுத்துக் கொள்ளவும். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் விவாதிக்கப் போகிற கட்டுரை இது அல்ல. நூறு சதவிகிதம் சைவக் கட்டுரை!

என்னுடைய பெயர் பத்திரிக்கையில் வர வேண்டும் என்கிற விபரீத ஆசை எப்போது எனக்கு ஏற்பட்டது? அதுவும் படு விபரீதமாக எல்லா பத்திரிக்கைகளிலும் என் பெயர் வர வேண்டும் என்று தான் நான் ஆசைப் பட்டேன்/ படுகிறேன்/ படுவேன். எதிரில் வருகிறவர்கள் கைகளில் என் கதை வந்த பத்திரிக்கை இருப்பது போலவும் அவர்கள் ரொம்ப சுவாரசியமாக அதைப் படிப்பது போலவும் கற்பனை செய்து கொள்வேன்.

எழுத்தாளராக ஆசைப் படுகிற அனைவருக்குமே இந்த எண்ணம் வரத் தான் வேண்டும். அது இல்லையெனில் அவர் எழுத்தாளராக முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. கனவு காண்பதற்கு யார் அனுமதி வேண்டும்? காசா? பணமா? கனவு காணுங்கள். அந்த கனவு இல்லையெனில் நிச்சயம் நனவு இல்லை.

என் கனவு முதலில் இப்படி இருந்தது. திருச்சி, சென்னை, இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒரு நிமிடத்துக்கு ஒரு தடவை வர வேண்டும் என்று. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேனா என்றால் அது தானில்லை. என் பெயர் வருகிற நேரம் நான் வானொலியைக் கேட்பேனோ மாட்டேனோ என்று நினைத்து பயந்து எந்தக் கடிதமும் அனுப்பவில்லை!

மூன்று முறை சிறுவர் நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒலிபரப்பானது. நிகழ்ச்சி பற்றி கருத்து அனுப்பி வைத்தேன். கடிதத்தைப் படித்து விட்டு, எழுதியனுப்பிய தம்பி கண்ணுக்குடி மேற்கைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்று சொன்னார்கள்.

என் பெயரைக் கேட்பதற்காக ஒரு மணி நேரம் வானொலி முன் தவமிருந்தது இப்போது கூட சிலிர்ப்பை என்னுள் ஏற்படுத்துகிறது. கடிதங்களைக் கடைசியில் தான் படிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும் எனக்கு பொறுமை இல்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் சத்தம் போடக் கூடாது என்று உத்தரவு போட்டு விட்டு, வானொலியின் ஒலியைக் கூட்டி வைத்து, ஒரு வேளை கரண்ட் போய் விடுமோ என்று கூடுதலாக பயந்து... அட, அட!

அடுத்த நாள் ரொம்பத் திமிராக நடை போட்டேன். வகுப்பில் இருந்த எல்லோரையும் அமைதிப் படுத்தி விட்டு, என் பெயர் சென்னை வானொலியில் வந்த விஷயத்தை சொன்னேன். 'அப்படியா?' 'நிஜமாவாடா?' இப்படியெல்லாம் சிலர் கேட்க, சிலர் அசுவாரசியமாக இருக்க, யாரும் அந்த நிகழ்ச்சியைக் கேட்காதது என் மனதில் மிக ஆற்றாமையை உண்டாக்கியது. அதற்கப்புறம் தான் பத்திரிக்கையில் பெயர் வர வேண்டும் என்று என் ஆசை மாறிப் போனது.

"அன்புடையீர், வணக்கம். தங்கள் 28.10.1977 தேதியிட்ட இதழில் வந்த 'பூட்டு' கதையை
கிட்டத் தட்ட பத்து முறை திரும்பத் திரும்பப் படித்தேன். [அப்பவும் புரியலையா?] அவ்வளவு அருமையாக இருந்தது கதை. இந்தக் கதையை அடுத்த இதழிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதை எழுதிய திருச்சி ராஜனுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவும். அவரது முகவரியை தயவு செய்து அனுப்பி வைக்கவும்' என்றெல்லாம் கடிதம் அனுப்ப ஆரம்பித்தேன்.

'கடிதம் வெளியானால் அதை நண்பர்களிடம் காண்பித்து காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப நம் பெயரைப் பார்க்க முடியும்' என்றெல்லாம் எனக்குள் சொல்லிக் கொள்வேன். கடிதம் தான் வரும் வழியைக் காணோம்.

இந்தப் பத்திரிக்கைகள் யாவும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை - ஒரே வழி நாம் பத்திரிக்கை தொடங்குவது தான் என்று முடிவு செய்தேன். ஆரம்பித்து விட்டேன். மல்லிகை - கையெழுத்து பத்திரிக்கை. ஆசிரியர் - கணேச மூர்த்தி என்று எழுதும் போது இதயம் பெருமிதத்தில் விம்மியது.

நான்கு பக்கங்கள் வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி ஒப்பேற்றி விட்டேன். முதல் இதழ் தயார்!
ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணங்கள் சேர்த்தேன். வகுப்பிற்கு ஆசிரியர் வரும் முன்னர் கிடைக்கும் நிமிடங்களைப் பயன் படுத்திக் கொண்டேன். இதையெல்லாம் வீட்டில் செய்தால் உதை விழும் என்பது நான் அறிந்ததே.

மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் [அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்லவன்!] டெஸ்க்குக்கு கீழ் மறைத்து வைத்து என் பத்திரிக்கையைப் படித்தார்கள். அவர்கள் மறைத்து வைத்துப் படிப்பதை தெரியாத மாதிரி நான் பார்த்து மனம் மகிழ்வேன்.

என் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதி முக்கிய இடம் வகித்தது. குமுதம் அரசு பதில்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். மாய்ந்து மாய்ந்து படிப்பேன். அதனால் என் பத்திரிக்கையில் நான் முதலில் சேர்த்தது கேள்வி-பதில் பகுதியைத் தான்.

முதல் இதழுக்கு கேள்வியும் நானே, பதிலும் நானே! அடுத்த இதழ் முதல் கேள்விகள் வந்து குவிந்தன. துண்டு சீட்டுகளில் கேள்விகள். கேள்வியைக் கொடுத்ததும் பதில் கேட்பார்கள். 'அடுத்த இதழைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வைப்பேன்.

இரண்டு இதழ்கள் வெளியானதும் எல்லோருக்கும் நான் பத்திரிக்கையை அனுப்பவில்லை. சந்தா தாரர்கள் மட்டும் தான் என் இதழைப் படிக்க முடியும். சந்தா எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெள்ளைத் தாள்கள் நான்கு பக்கங்கள். அது தான் சந்தா! என்னுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து தொடர்ந்து எல்லா இதழ்களுக்கும் கிழித்துக் கொண்டிருந்தால் வீட்டில் கிழித்து விடுவார்கள் என்பதால் இந்த வழியைக் கடைபிடிக்க வேண்டியதாயிற்று.

சந்தா கேட்டவுடன் யாரும் 'உன் பத்திரிக்கையே வேண்டாம்!' என்றெல்லாம் சொல்லவில்லை. தமிழ் வாத்தியார், கணக்கு வாத்தியார் அறுவையிலிருந்து தப்பிக்க இது அவர்களுக்கு தேவையாக இருந்தது போலும். தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எந்த ஆசிரியருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த என் பத்திரிக்கை ஒரு நாள் மாட்டிக் கொண்டது. தமிழாசிரியர் ஏதோ கேள்வி கேட்க - என் இதழில் கேள்வி-பதிலில் மூழ்கியிருந்த இளவழகன் அதை கவனிக்கவில்லை.

'என்ன அது?' என்று விரைந்து வந்து பிடுங்கிக் கொண்டார். பார்த்தவுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். கையெழுத்து காட்டிக் கொடுத்து விட்டது. இளவழகனை முறைத்து விட்டு பத்திரிக்கையை எடுத்து தன் புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டார். எனக்கு திக்கென்றது. எனது அப்பாவிடம் வத்தி வைத்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்பா தான் அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்!

வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா 'நில்லு!' என்று சொல்வார் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டே போனேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இரவு சாப்பாட்டின் போது அப்பா மெல்ல ஆரம்பித்தார்.

'என்னவோ பத்திரிக்கை எல்லாம் நடத்தறியாமே?'

கேட்டதும் 'ஆ,,மா!' என்று சாதத்தோடு வார்த்தைகளையும் மென்று விழுங்கினேன்.

'ரொம்ப நல்லா இருக்குன்னு மீனாட்சி சுந்தரம் பாராட்டிகிட்டே இருந்தார். கேள்வி பதில் பகுதிக்கு நீ தான் பதில் எழுதறியா?'

'ம்..'

'நல்லா இருந்ததுன்னு சொன்னார்.'

'முழு பத்திரிக்கையும் நான் தான் எழுதறேன்ப்பா!' என்றேன் மகிழ்ச்சி தாளாமல்.

'இதெல்லாம் இப்ப வேண்டாம். ஒழுங்கா படிச்சு உருப்படறதைப் பாரு. எஸ்.எஸ்.எல்.சி. முடிச்ச பிறகு இதையெல்லாம் வச்சுக்கோ!' என்று சொல்லி விட்டு 'ரசம் இன்னும் கொஞ்சம்' என்றார் அம்மாவிடம்.

என் பத்திரிக்கை நின்று போனது. எல்லோருக்கும் இரண்டு பக்கங்கள் சந்தாவைத் திரும்பக் கொடுத்து விட்டேன்!

[நன்றி: http://tamil.sify.com]

Thursday, October 19, 2006

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!



அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு
அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க
வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.


மேலும்..

Friday, October 06, 2006

இந்த மீனு போதுமா?



"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்.

"சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.

இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.


மேலும்..

Thursday, October 05, 2006

மறந்த முகங்கள்

புல்லில் பனித்துளி
துளி - 6



லுவலகத்தில் மிக முக்கியமான ஒரு கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் இருக்கும் போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத செய்தி அந்த அழைப்பில் இருந்தது.

நான் சொல்லப் போகும் முடிவுக்காக என் எதிர்க்க என் குழுவினர் காத்திருந்தனர். மிக முக்கியமான முடிவு. கூடுதல் இரண்டு மணி நேரம் எல்லோரும் ஒத்துழைத்தால் இந்தப் பணியை செவ்வனே முடித்து விடலாம். இந்த இக்கட்டான கட்டத்தைத் தாண்டி விட்டால், இன்னும் அருமையான பணிகள் தேடி வரும். எல்லோருமே கொஞ்சம் சோர்ந்திருந்தார்கள். அவர்களை உற்சாகப் படுத்தி இன்றைய பொழுதை நன்றாகக் கொண்டு சென்றாக வேண்டும். யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று குறித்து விட்டு அதைச் சொல்ல நிமிரும் போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு.

என் மொபைலை எடுத்து யார் என்று பார்த்தேன். புதிய எண். யாராக இருக்கும் என்று நெற்றி சுருக்கி விட்டு 'எக்ஸ்க்யூஸ் மீ' சொல்லி விட்டு 'ஹலோ' என்றேன்.

"அங்க்கிள், நல்லா இருக்கீங்களா?" என்றது மறுமுனை.

அங்க்கிள்.. புரிபடாத குரல். எங்கேயோ கேட்ட குரல் தான். ஆனால் சட்டென்று ஞாபகத்துக்கு வர மறுத்த குரல். யார் யார் என்னை அங்க்கிள் என்று அழைப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் அயற்சியாக இருந்தது. நான் ஐந்து விநாடிகளுக்கு மேல் மௌனம் காத்து விட்டேனோ?

"அங்க்கிள், யார்னு தெரியலை இல்லியா? நான் தான் ரமேஷ். நான் உங்க கிட்டே இதுக்கு முன் ஃபோன்ல பேசினதே இல்லியே, அதனால உங்களாலே அடையாளம் கண்டு பிடிக்க முடியலை. இப்ப ஞாபகம் வந்ததா?"

"ர..மேஷ்? ஓ, நல்லா இருக்கியா?"

இன்னும் அந்த ரமேஷின் முகம் என் மூளைத் திரைக்கு வர தயங்கிக் கொண்டிருந்தது. யார் இந்த ரமேஷ்?! அந்த வார்த்தைகள்.. அதில் இருந்த வேகம்.. இதெல்லாம் எனக்கு பரிச்சயமான ஒன்றாகத் தான் தெரிகிறது. ஆனால் மறந்து விட்டிருக்கிறேன்.

"ஆண்ட்டி எப்படி இருக்காங்க அங்க்கிள்? அப்புறம் ராஜி?"

"ம்ம். எல்லோரும் சௌக்கியம். அ..து.. ரமேஷ், நான் ரொம்ப முக்கியமான மீட்டிங்லே இருக்கேன். நான் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போன் பண்ணட்டுமா?"

இந்த அழைப்பிற்கான நேரம் இதுவல்ல! இதை எப்படியாவது தட்டிக் கழித்தாக வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது.

"வச்சுடாதீங்க அங்க்கிள்" அவசர அவசரமாக சொன்னான் ரமேஷ். "நான் பப்ளிக் பூத்ல இருந்து பேசுறேன். நீங்க திரும்ப போன் பண்ண முடியாது."

"ஓ! சாரி! சொல்லு ரமேஷ்."

நான் கடிகாரத்தைப் பார்த்தபடி கூறினேன். இந்த அழைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று என்னை நானே திட்டிக் கொண்டேன். என் குழுவினருக்கு கொஞ்சம் காத்திருக்கும் படி சைகையிலேயே சொன்னேன்.

"அங்க்கிள், அங்க்கிள், ப்ரஷாந்தை ஞாபகம் இருக்கா அங்க்கிள்?"

பாவி, உன்னையே எனக்கு ஞாபகம் இல்லை. யார் ப்ரஷாந்த்? முகம் தெரியாத அந்த ரமேஷ் மேல் கோபம் வந்தது. யார் ரமேஷ் என்பது போய் யார் ப்ரஷாந்த் என்று மனதைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்தேன்.

"அங்க்கிள் மறந்தே போயிட்டீங்களா எங்களை?" இப்போது அந்த குரலில் இனம் புரியாத சோகத்தைக் காண முடிந்தது.

"உங்க எதிர் வீட்டில் இருந்தோமே? அப்புறம் நாங்க மைசூர் பேங்க் காலனிக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்துட்டோம். நான், ப்ரஷாந்த், ராம், சுதாகர், பிரேமா.. மறந்துட்டீங்களா அங்க்கிள்?"

சே! இவர்களை எப்படி மறந்தேன்? ரமேஷ்! வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்கு வந்ததும் கண்களைக் கொஞ்சம் பழக்கப் படுத்திக் கொண்ட பின்னர் மெல்ல தெரிய ஆரம்பிக்கிற உருவம் போல் ரமேஷ் என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தான்.

"ரொம்ப நாள் ஆச்சு இல்லியா பேசி. உடனே கண்டுபிடிக்க முடியலை. அப்புறம் எனக்கு ஒரு அஞ்சாறு பேர் ரமேஷ் தெரியும். குழம்பிட்டேன். சொல்லு. அப்பா அம்மா எப்படி இருக்காங்க? ப்ரேமா இப்ப ஒன்பதாவது இல்லையா? சுதாகர் ராம் ரெண்டு பேரும் நல்லா படிக்கிறாங்களா? இல்லை இப்பவும் சண்டை போட்டுகிட்டிருக்காங்களா? அப்புறம் குட்டி ப்ரஷாந்த் எப்படி இருக்கான்?" மூச்சு விடாமல் பேசினேன். என்னவோ என் உறவினர்களை நிரம்ப நாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி என் வார்த்தைகளில் தெரிந்தது.

"ப்ரஷாந்த் இப்ப இல்லை அங்க்கிள்." அவன் குரல் உடைந்தது.

"செ.. செ.. செத்துப் போயிட்டான் அங்க்கிள்"

"என்ன?"

"பஸ் மேலே ஏறிடுச்சு அங்க்கிள்."

"ஐயோ! எப்படி ஆச்சு? ரோட் க்ராஸ் பண்ணும் போதா?"

"இல்லை அங்க்கிள், அப்பாவோட பஸ்ஸில் தான். இவன் பின்னால் இருக்கிறது தெரியாமல் ரிவர்ஸ் எடுக்கப் போய், அடிபட்டு செத்துப் போயிட்டான் அங்க்கிள். ஒரு மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருந்தோம். இப்ப தான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாலே போயிட்டான்."

"ச்ச்ச்ச்ச்"

"எங்களுக்கு இந்த ஊர்ல யாரைத் தெரியும்? உங்க ஞாபகம் தான் உடனே வந்தது. அதான் உங்களுக்கு போன் பண்ணினேன். ஆண்ட்டிக்கும் சொல்லிடுங்க அங்க்கிள். என்னாலே பேச முடியலை அங்க்கிள். நான் வச்சுடறேன் அங்க்கிள். ப்ரஷாந்த்!" என்று அவன் விக்கி விக்கி அழுவதைக் கேட்க முடிந்தது. சட்டென்று தொடர்பு அறுபட்டது.

அலுவலகத்தில் வேலை அதற்கப்புறம் ஓடவில்லை. அந்த துரு துரு ப்ரஷாந்த் என் மனது முழுக்க ஓடி ஓடி விளையாட ஆரம்பித்தான். என் குழுவினருக்கு சில முக்கியக் குறிப்புகள் கொடுத்து விட்டு நான் கிளம்பினேன்.

'அங்க்கிள், நல்லா இருக்கீங்களா?'

அந்த சோக நேரத்திலும் என் நல விசாரிப்பை செய்த அந்த ரமேஷ் ரொம்ப உயரத்தில் ஏறி நின்றிருப்பதாக உணர்ந்தேன். வீடு.. அலுவலகம்.. திரும்ப வீடு! வாழ்க்கை இப்படி இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்க.. முக்கியமான இந்த மாதிரி மனிதர்களை நாம் மறந்தே போய் விடுகிறோம். சொல்லப் போனால் நம் உற்றார் உறவினரை விட அதிகமாக மதிக்கப் பட வேண்டியவர்கள் இவர்கள் தான் என்று சொல்ல வேண்டும்.

மங்களூரில் இருந்து பிழைப்புக்காக பெங்களூர் வந்த குடும்பம் அது. அப்பா பஸ் டிரைவர். மாதத்தில் பாதி நாட்கள் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் முழுக்கக் குடித்து விட்டு சுருண்டு விடுவார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கேட்ட கேள்விக்கு இரண்டு வார்த்தைகளில் பதில் வரும். அவ்வளவே.

மனைவியும் அந்தக் குழந்தைகளும் நேரெதிர். நிறுத்தவே முடியாத பேச்சு. பேச்சு, சிரிப்பு. சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வறுமை.. சோகம் கலந்த வாழ்க்கை இதை மறைக்க அவர்கள் வெளியே சிரிக்கிறார்களோ என்று சில சமயம் நான் நினைத்திருக்கிறேன்.

புத்தாண்டை வரவேற்க வீடு முழுக்க விளக்குகள் ஏற்றி விட்டு அந்த சிறிய வீட்டில் நடக்க முடியாமல் அடி மேல் அடி வைத்து நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ஹோலி தினத்தன்று காலையில் சீக்கிரமே நான் அலுவலகம் சென்று விட, என்னை வண்ணத்தில் குளிப்பாட்ட திட்டம் போட்டுக் கொண்டு, மாலை நான் அலுவலகத்தில் இருந்து வருவதற்காக காத்திருந்தன அந்த வாண்டுகள். மாலை நான் வீடு திரும்பவும் 'ஓ...' வென்று கூக்குரலிட்டுக் கொண்டு வந்தவர்கள் நின்று சற்று தயங்கினார்கள்.

"பளிச்சுன்னு இப்படியா வெள்ளை சட்டை போட்டுக்கிட்டிருக்கிறது அங்க்கிள்? போங்க, போய் கழட்டிட்டு வாங்க!" என்று சொல்லி பெரிய மனது பண்ணி பனியன் லுங்கிக்கு மாறியவுடன் ஹோலி கொண்டாடிய காட்சி கண்களில் கண்ணீரில் அமிழ்ந்து போனது.

"என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?" என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் மனைவி.

ப்ரஷாந்தைக் கண்டால் மிக மிகப் பிரியம் அவளுக்கு. அதனால் தான் நான் செய்தியை தொலை பேசியில் தெரிவிக்கவில்லை.

இந்த செய்தியை எப்படி அவளிடம் சொல்லப் போகிறேன்?

[நன்றி: http://tamil.sify.com]

Tuesday, September 19, 2006



ஒரு நிமிடம் யோசித்தேன்.
உதவி செய்வதில் என்ன தவறு?
அதுவும் ஒரு பெண்ணுக்கு!!

மேலும்..

Monday, September 18, 2006

தலை மேல் பலன்

புல்லில் பனித்துளி
துளி: 5

ரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்.

இடி விழுந்திருந்தால் கூட அவ்வளவாக குழம்பிப் போய் இருக்க மாட்டேன்.

விழுந்தது பல்லி!

எங்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் பல்லிகள் இருந்தாலும் கூட, கழிப்பிடத்தில் எக்கச்சக்கமாக குவிந்திருக்கும். எப்போதும் உள்ளே நுழையும் போதே, இடது பக்க, வலது பக்க சுவர்களில் பலமாக தட்டி விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. எதற்கு வம்பு? அது எங்காவது விழுந்து வைக்கும். அப்புறம் பஞ்சாங்கத்தை எடுத்து அதற்கு பலன் பார்க்க வேண்டியிருக்கும்.

பலன் பார்க்கிற வரைக்கும் அம்மா விட மாட்டார்கள். அது நல்ல பலனாக இருந்து விட்டால் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் அதற்கு தலை மீது கை வைத்து உட்கார்ந்து விடுவார்கள். கோபிச்செட்டிப் பாளையம் பக்கம் இருக்கும் ஒரு கோவிலுக்கு நேர்ந்து கொண்டு ஒரு இருபத்தைந்து காசு மஞ்சள் துணியில் கட்டி வைத்து விடுவார்கள்.

காலில் விழுந்தது என்றால் நோண்டி நோண்டி கேள்வி கேட்பார்கள். வலது காலா இடது காலா என்று அடுத்த கேள்வி. வலது கால் என்றால் முழங்காலுக்கு மேலா இல்லை கீழா என்பார்கள். 'போமா நீ' என்று அலுத்துக் கொண்டால், பலன் சரியானதாக இருக்க வேண்டும் இல்லையா என்று கடிந்து கொள்வார்கள்.

இந்த குழப்பங்களே வேண்டாம் என்று நான் அந்த முடிவுக்கு வந்தேன். கழிப்பறைக்குள் நுழையும் முன்னர் ஏதாவது பல்லி கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். ஏதாவது இளைப்பாறிக் கொண்டிருந்தால் அதன் பக்கத்தில் தட்டி விரட்டப் பார்ப்பேன். சில பல்லிகள் உடனே போய் விடும். சில 'அட போடா' என்கிற மாதிரி கொஞ்ச தூரம் நகர்ந்து விட்டு அங்கேயே 'அக்கடா' என்று இருக்கும். அதை விரட்டத் தட்டித் தட்டி, பல்லி போய் விடும். ஆனால் 'வந்து கொண்டிருந்தது'
நின்று போய் விடும்!

ஒரு நாள் வீறு கொண்டு எழுந்தேன். இருக்கிற ஒவ்வொரு பல்லியாகத் தேடி விளக்குமாற்றால் தள்ளித் தள்ளி வெளியேற்றினேன். அம்மா வீட்டில் இல்லை. ஒரு பல்லி கீழே விழும் போது, அதன் வால் துண்டிக்கப் பட்டு விட, அந்த வால் மட்டும் தனியே துடித்துத் துடித்து அடங்கிப் போனது. அதைப் பார்க்க கொஞ்சம் மனசு என்னவோ செய்தது. அடுத்த பிறப்பில் தப்பித் தவறி கூட பல்லியாகப் பிறந்து விடக்கூடாது என்று கடவுளிடம் சிறப்பு வேண்டுதல் செய்து கொண்டேன். ஏனெனில், இந்த பல்லி நிச்சயம் மனிதனாகப் பிறந்து பழி தீர்க்க வாய்ப்பிருக்கிறது.

மாலை அம்மா கண்டு பிடித்து விட்டார்கள். ஒரு பல்லி கூட இல்லையே என்று துருவித் துருவிக் கேட்க ஒப்புக் கொண்டு விட்டேன். அம்மா கூட அம்மம்மாவும் [பாட்டி!] அய்யய்யய்யய்யோ... என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். 'பல்லியை யாராவது வீட்டை விட்டு தள்ளுவார்களோ, அதுவும் விளக்குமாற்றால்?' என்று கடுங் கோபத்தில் திட்டினார்கள். உடனே அவசர அவசரமாக குளித்து விட்டு வந்து, நனைந்த உடையுடனேயே பூஜையறைக்குள் நுழைந்து, மஞ்சள் துணி எடுத்து இரண்டு இருபத்தைந்து காசுகளை முடிந்து வைத்தார்கள். என்னை மன்னித்து விடும் படி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். கழிப்பறையில் திரும்ப பல்லிகள் அதிகரித்து விட்டன. நான் வெளியே அனுப்பிய பல்லிகள் தான் திரும்ப வந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அங்கிருந்த ஒரு பல்லிக்கு வால் இல்லை! அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பக் பக் என்றது.

என் நண்பன் ஒருவன் மயிலிறகு இருந்தால் பல்லி பக்கம் கூட வராது என்றான். எல்லோரும் நோட்டு புத்தகத்தில் மயிலிறகு வைத்து குட்டி போடுகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, நான் மயிலிறகை கழிப்பறையில் ஒரு இருட்டு சந்தில் மறைத்து வைத்திருந்தேன். பல்லி ஒன்று கூட குறையவில்லை. மாறாக ஒரு பல்லி அந்த மயிலிறகு மேலேயே படுத்திருந்ததைக் காண முடிந்தது.

வருடங்கள் உருண்டோடி விட்டன. ஊர் விட்டு ஊர் வந்து திருமணம் முடித்து புதிய வீட்டுக்கு வந்தாயிற்று. வீட்டில் அங்கே இங்கே என சில பல்லிகள் இருந்தன. பல்லிகள் குறைவாக இருக்கும் போதே விரட்டி விட்டால் நல்லது என்று தோன்றியது. மனைவியிடம் கேட்டேன். 'பாவங்க, அது பாட்டுக்கும் இருந்துட்டுப் போகட்டும்!' என்றாள்.

நான் கழிப்பறைக்குள் நுழையாமல் உள்ளே ஏதாவது பல்லிகள் தெரிகிறதா என்று உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'என்ன சரியா தண்ணி ஊத்தலையா?' என்று பின்னால் இருந்து மனைவியின் குரல். 'இல்லை, எனக்கு பல்லி என்றால் ஒருவித அலர்ஜி!' என்றேன். இடது பக்க, வலது பக்க சுவர்களில் தட்டி விட்டு உள்ளே நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

ஒரு முறை என் மனைவியும் அவளது நண்பியும் பேசிக் கொண்டிருந்தது காதில் லேசாக விழுந்தது.

'என்னது, அப்படி சத்தம்? டொப் டொப்னு யாரோ சுவத்துலே அடிக்கிற மாதிரி?'
'என்னோட கணவர் தான். டாய்லெட்லே இருக்கார். அவருக்கு அந்த மாதிரி தட்டினா தான் வரும்!'

சிலருக்கு சிகரெட், சிலருக்கு பீடி, எனக்கு இப்படி என்று அந்தத் தோழி நினைத்திருக்கக் கூடும். அன்று அவர் வீட்டை விட்டுப் போகும் வரை நான் கழிப்பறையை விட்டு வெளியே வரவில்லை!

நான் எதை நினைத்து பயந்திருந்தேனோ அது நடந்தே விட்டது. பல்லி ஒன்று சரியாக என் தலையில் விழுந்தே விட்டது. வேறு எந்த பாகமும் அதன் கண்களில் விழவில்லையா? சரியாக தலையிலா விழ வேண்டும்?

ஏற்கனவே நான் பஞ்சாங்கத்தில் எக்கச்சக்க தடவை பார்த்திருந்ததால் அது மனப்பாடமாகவே ஆகி விட்டிருந்தது. அதுவும் தலையில் விழுந்தால் மரணம் என்பது நன்றாக ஞாபகம் இருந்தது.

இருந்தாலும் மனது கேட்கவில்லை. 'அப்படியே' கழிவறையிலிருந்து வெளியேறி, வேகவேகமாக அறைக்கு வந்து, பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து, பல்லி விழுந்தால் பலன்கள் பக்கத்தைப் புரட்டினேன். ஆமாம், மரணம் தான்! கை கால்கள் செயலிழந்தது போல் தோன்ற, சட்டென்று மூச்சு விடவே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

'என்னங்க..'

சட்டென்று பஞ்சாங்கத்தை பரண் மீது எறிந்தேன். கணவனின் மரணத்தை எந்தப் பெண் தான் சகித்துக் கொள்வாள்? அவளுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருப்பதே நல்லது என்று முடிவெடுத்தேன். அறைக்குள் நுழைந்த அவளைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தேன்.

'டாய்லெட்டுக்கு போனா தண்ணி கூட ஊத்தாம வர்றீங்க. ஏங்க இப்படி பண்றீங்க?' என்றாள்.

தண்ணி கூட ஊத்தாம என்றவுடன் தான் அது ஞாபகத்துக்கு வந்தது. 'ஃபோன் அடிச்சதுன்னு வந்தேன். அவசரத்துலே கவனிக்கலை, சாரிம்மா!' என்று சொல்லி விட்டு காலை அகலப் போட்டு நடந்தேன்.

'இதென்ன ஸ்டைல்?' என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

டாய்லெட்டுக்குள் நுழைந்ததும் திரும்ப மரணபயம் மனதில் வந்தமர்ந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அந்த பல்லி கண்ணில் படுகிறதா என்று தேடிப் பார்த்தேன். வலது பக்க சுவரின் மீது தான் இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. 'இன்னைக்கு நீ செத்தே!' என்று சொல்கிற மாதிரி தோன்றியது.

இறந்தவுடன் என்ன ஆகும்? சட்டென்று ஒரு இருட்டு குகைக்குள் அதள பாதாளத்தில் விழுகிற மாதிரி தோன்றுமோ? பிடித்துக் கொள்வதற்குக் கையில் எதுவும் கிடைக்காமல் கீழே.. கீழே என்று கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்க.. எப்போது சித்ரகுப்தன் எதிரே வருவார்? நான் செய்த குற்றங்கள் எல்லாம் அவருடைய கம்ப்யூட்டரில் இருக்கும். 'கணக்கிடு' பொத்தானைத் தட்ட எல்லா குற்றங்களுக்கும் நான் செய்த சில நல்ல காரியங்களுக்கும் மதிப்பீடு செய்து சொர்க்கமா இல்லை நரகமா என்று தேர்ந்தெடுத்து அங்கிருக்கும் ப்ரிண்ட்டரில் ப்ரிண்ட் செய்து கொடுத்து விடும். குற்றங்கள் பகுதியில் 'ஒரு பல்லியின் வாலைத் துண்டித்து விட்டான்' என்று நிச்சயம் இருக்கும்!

'என்னங்க? இன்னும் வரலையா? ரெண்டாவது ஆட்டமா?' என்று வெளியே மனைவி 'க்ளுக்' என சிரிக்க, 'சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

*** *** ***

அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக மேனேஜர் என்னைத் தேடி வந்தார்.

'அந்த மன்த்லி ரிப்போர்ட்..' என்று இழுத்தார்.

'எஸ் சார், மதியத்துக்குள்ளே ரெடி பண்ணித் தந்திடுறேன்!' என்றேன். 'மதியம் வரைக்கும் நீ இருந்தா' என்று மனது சொன்ன மாதிரி இருந்தது.

'அடுத்த மாசத்தில் இருந்து கரெக்டா நான்காம் தேதிக்குள்ளே இந்த ரிப்போர்ட் ரெடியா இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. ஓகே?' என்றார்.

'அடுத்த மாசம் நான் இருந்தாத் தானே?' என்றேன். நான் கொஞ்சம் உரக்க சொல்லி விட்டேனோ?
'வாட்?' என்றார். 'உள்ளே வாங்க' என்று சொல்லி அறையில் புகுந்து கொண்டார்.

நான் உள்ளே நுழையக் காத்திருந்தவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்து, 'உங்க ஆதங்கம் புரியுது. நான் உங்களுக்காக கிட்டத்தட்ட சண்டையே போட்டிருக்கிறேன். உங்களை ப்ரொமோட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு மதியம் உங்களுக்கு லெட்டர் கிடைக்கும். ஆர் யூ ஹாப்பி?' என்று சொல்லி கையைப் பிடித்து குலுக்கினார். 'அணைந்து போகும் மெழுகுத் திரி தான் நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது.


*** *** ***

மதியம் மூர்த்தி என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்தமர்ந்து கொண்டான்.

'எனி ப்ராப்ளம்? வீட்டிலே ஏதாவது சண்டையா? காலையில் இருந்து ஒரு மாதிரியே இருக்கியே?' என்றான்.

'சரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்................... சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்' வரைக்கும் சொல்லி முடித்தேன். 'அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக..... நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது' மாத்திரம் சொல்லவில்லை!

'இதையெல்லாம் நீ நம்புறியா என்ன?' என்றான் மூர்த்தி. மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
'எனி ஹவ், உன் தலையில் பல்லி விழுந்திருக்கு. பார்க்கலாம், உனக்கு ஏதாவது ஆகுதா இல்லையான்னு. இப்ப தெரிஞ்சு போயிடும். பல்லி விழுந்தால் பலன்கள் உண்மையா இல்லையான்னு!' என்று சொல்லி விட்டுப் போனான்.
அடப் பாவி!

*** *** ***


மாலை நான் கொடுத்த பதவி உயர்வு கடிதத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் நடனமே ஆடி விட்டாள் மனைவி. பட்ஜெட்டில் விழுந்த துண்டுகள் இனி இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னாள். 'இன்னைக்கு படத்துக்குப் போறோம். படம் முடிச்சுட்டு அப்படியே ஹோட்டலுக்கு போறோம்! ஓகே?' என்றாள் உரத்த குரலில்.

'நீ பார்க்கிற கடைசிப் படம்!' என்று மனசுக்குள் இருந்து பல்லி சொன்னது.

படம் எனக்கு ரொம்ப போரடித்தது. ஹோட்டலில் எதைப் பார்த்தாலும் வாந்தி வருகிற மாதிரி தோன்றியது. 'சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்!' என்றேன். 'ஏங்க, உடம்பு சரியில்லையா? வரும் போதே ஒரு மாதிரி இருந்தீங்க. ரொம்ப வேலையா? சொல்லியிருந்தா இன்னொரு நாள் படத்துக்கு வந்திருக்கலாம்!' என்றாள். இந்த அழகான அன்பான மனைவியை விட்டு இன்று நான் பிரியப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டேன்.

படுக்கையில் விழுந்ததும் உறங்கிப் போனேன். தலை மேல் மிருதுவான கரம் அமிர்தாஞ்சன் தடவியது. சொர்க்கம் என்று தோன்றியது. அப்படி என்றால் நான் நரகத்துக்கு வரவில்லை என்று சொல்லிக் கொண்டேன்.

திரைப் படம் ஓடிக் கொண்டிருக்க 'எனக்கு படம் பிடிக்கவில்லை' என்று எழுந்து நடக்க, சில்க் ஸ்மிதா நடனமாடிக் கொண்டு எதிர்க்க வர, 'ஓ, நீங்களும் சொர்க்கமா?' என்று நான் சொல்ல, படம் முடிந்து லைட் போட்டு விட்டார்கள். கண்கள் கூச எழுந்தேன். சூரிய வெளிச்சம் அறை முழுக்க ஜம்மென்று பரவியிருந்தது.

'இன்னைக்கு வேணா ஆபீசுக்கு லீவ் போட்டுடுங்க.' மனைவி சொல்ல மறுத்து விட்டு எழுந்தேன்.

கழிப்பறையில் நுழையும் முன் இடது பக்க, வலது பக்க சுவரை நான் இன்று ஏனோ தட்டவில்லை.

நன்றி: http://tamil.sify.com

Wednesday, September 13, 2006

உப்பு ஏரி நகரத்திலே...

புல்லில் பனித் துளி

துளி: 4

கடந்த வாரம் கண்ட (கண்ட) கனவுகளில் அமெரிக்கக் கனவைப் பற்றி எழுதி விட்டு கண்களை மூடித் திறப்பதற்குள் அமெரிக்காவுக்கு வர வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் பற்றி இப்போது கனவு காணலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த வாரக் கட்டுரையை அமெரிக்காவின் அதி அற்புத, அதி நவீன, அதி அழகு, அதி.. அதி.. அதிகமாகக் கையைக் கடிக்கும் தங்குமிடத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வந்த இரண்டு நாட்களுக்குள் மனைவி, மகள் மீது அன்பு கூடி இருக்கிறது. 'செலவு பற்றி யோசிக்க வேண்டாம். இன்னும் பேசு!' என்று சொல்லித் திரும்பத் திரும்ப அதே 'எப்படி இருக்கிறாய்?' 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'

என்னவோ ஒரு இருபது நாட்கள் ஓடிப் போனது போல் தடுமாற்றம். புரிந்து கொள்ளவே முடியாத இயற்கை இங்கும் விளையாட்டைக் காண்பிக்கிறது. இரவு ஒன்பது மணியானாலும் சூரியன் மறையாமல் அடம் பிடிக்கிறது.

'டிபன் சாப்பிட்டாச்சா?' என்று மனைவி கேட்க, 'இங்கே ராத்திரி. சாப்பாடே ஆயிடுச்சி!' என்று சொல்ல, 'ஐயோ, மறந்தே போயிடுது!' என்று சின்னச் சின்னக் குழப்பங்கள்.

சான்ஃப்ரான்சிஸ்கோ விமான நிலையத்தில் சோதனை செய்யும் பகுதியில், போட்டிருக்கும் ஜெர்க்கினைக் கழற்ற சொன்னார்கள். கழற்றி அதை கன்வேயரில் போட்டேன். 'செல் ஃபோன்?' என்றார்கள். எடுத்து அதையும் வைத்தேன். 'பெல்ட்டைக் கழற்றுங்கள்' என்றார்கள். அடுத்து பேண்ட்டோ என்று யோசித்துக் கொண்டே அதையும் கழற்றி வைத்தேன். 'ஷூவைக் கழற்றுங்கள்' என்றார்கள். 'ஷூ??' என்று ஒரு முறைக்கு இருமுறை நான் கேட்க, 'ஆமாம்' என்று ஒரு முறைக்கு இரு முறை அவரும் கூறி, 'நாம் அருமையான அமெரிக்க தேசத்தில் இருக்கிறோம்!' என்று சொல்லிச் சிரித்தார். திருப்பதி கோவிலுக்குள் போகிற மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்!

சால்ட் லேக் சிடி விமான நிலையத்தில் இருந்து காரில் முப்பது நிமிடப் பயணம். கார் வழுக்கிக் கொண்டு போகிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான பிரதேசம். அருமையான சாலைகள். ஒவ்வொரு சாலையிலும் ஆங்காங்கே பிரிந்து போகும் கிளை சாலைகள். எங்கு பார்த்தாலும் விநாடிக்கு ஒரு தடவை நம்மை கடக்கும் கார்கள். கார்கள். கார்கள்! மிகக் குறைந்த பேர் தான் பேருந்துக்காகக் காத்திருப்பதைக் காண முடிகிறது. நான் அலுவலகத்துக்கு செல்கிற குளிரூட்டப் பட்ட பேருந்தில் மொத்தம் பத்து பேர் தான் இருக்கிறார்கள். மிகச் சிறிய ஊர் என்று ஒதுக்கி வைக்கப் படாமல் எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் மக்களைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது. எல்லாம் இருந்தும் என்னவோ ஒன்று குறைவது போல் தான் எனக்குத் தோன்றுகிறது. உயிரில்லாத வாழ்க்கை! ஒருவேளை, எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதோ? அது தெரியவில்லை!

ஊருக்கு வந்து சேர்ந்த உடனேயே எக்கச்சக்க அறிவுரைகள் கொடுக்கப் பட்டு விட்டன. 'இரவு சூரியன் இருக்கிறது என்பதற்காக ஒன்பது மணிக்கு வெளியே போக வேண்டாம். அதுவும் தனியாக செல்வது மிக மிக ஆபத்து. வழிப்பறிக் கொள்ளைகள் அதிகம் நடக்கும் ஊர். கையில் பத்து டாலருக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டாம். ஜாக்கிரதை' என்று நண்பர் எச்சரிக்கை செய்து விட்டு கொஞ்ச தூரம் நடந்தவர் நின்று, திரும்பி வந்து, 'அப்படி யாராவது வழி மறித்துக் கேட்டால், எதுவும் பேசாமல் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ஒரு டாலருக்காகக் கூட கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்!' என்று டய்ய்ய்ங்ங்ங்க்க்க்க்க்.... என்று இசை சேர்க்காத குறையாக வசனம் உதிர்த்து விட்டுப் போனார்.

நன்றி: http://tamil.sify.com

Tuesday, September 12, 2006

இரண்டு மணி நேரத் திட்டங்கள்


எஸ்-2 பெட்டியில் ஏறி, பக்கத்து பயணியைப் பார்த்து விட்டு, தன் கடிகாரத்தையும் பார்த்து விட்டு, 'எட்டு மணிக்கு ஃப்ளைட்!" என்றிருக்கிறார்.

"நீங்க போன மாதிரி தான்!" என்று அந்த பக்கத்து சீட்டு வழுக்கைத் தலை ஆசாமி சொல்லி விட, மீசையை முறுக்கிக் கொண்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார்.


மேலும்..

Thursday, September 07, 2006

ஜி போஸ்ட் செய்த மாயம்!

ஜி போஸ்ட் கௌதம் ஒரு பதிவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் 124 பின்னூட்டங்களைப் பெற்று அசத்தியிருக்கிறார். வாழ்த்துகள்!

இந்த மாதிரி போட்டி கீட்டி என்று சொன்னால் தான் நம் மக்கள் பின்னூட்டப் பெட்டி பக்கம் எட்டிப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது ;-)

உண்மையாகவே எல்லோரும் அசத்தியிருந்தார்கள்.

நாவல் எழுதுவது எளிது. ஒரு சிறுகதை எழுதுவது கொஞ்சம் கடினம். நான்கு வரிகளுக்குள் ஒரு சிரிப்புத் துணுக்கு எழுதுவது மிக மிகக் கடினம். அப்படியானால் ஒரு வரிக்குள் ஒரு கதை/கவிதை சொல்வது என்பது எவ்வளவு கடினம் என்பதை சொல்லத் தேவையில்லை.

என்னைக் கவர்ந்த சில வரிகள்..


நிலவு நண்பன்
எந்த திருவள்ளுவனின் படைப்பு நீ?

மதுமிதா
கேமராவுக்கே போதையா?

luckylook
பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்.....


துளசி கோபால்
ஐய்யோ ரெண்டு


Vignesh
பார்வை ஒன்றே போதுமே !!!!

luckylook
ஐ ஐ லவ் லவ் யூ யூ

விழியன்
"பெண் என்றாலே தலைவலி தானோ?"

ஜெஸிலா
தலைவலி மருந்தே தலைவலியானால்?

- - - - - - - - - - - - - - -

இது கூட நன்றாக இருந்தது.

>>
மின்னுது மின்னல்
Error 404!
>>

ஆனால் 'Too many rows' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
404: The page cannot be found!
- - - - - - - - - - - - - - -


புன்னகைக்க வைத்த இன்னொரு வரி:


Dev
வேணாம் தலைவலிக்குது அழுதுருவேன்...அவ்வ்வ்வ்வ்வ்

- - - - - - - - - - - - - - -

வெற்றி வாய்ப்பை தவற விட்டாரா? தெரியவில்லை.. இதுவும் நன்று..

Dubukku
"நல்லவேளை மூக்குத்தி ஒன்னு வாங்கினா போதும்..."
- - - - - - - - - - - - - - -

முத்தாய்ப்பாக ..

ஜி கௌதம்
ஆஆஆஆட்டம் முடிஞ்சது!!!!!!

ஓ, இது போட்டிக்கு அனுப்பப் பட்டதில்லையா? போட்டி முடிந்தது என்று கொடுக்கப் பட்ட அறிவிப்பா? :-))

நிரம்ப ரசிக்க வைத்த போட்டி. அனைவருக்கும் பாராட்டுகள்.

Wednesday, September 06, 2006

ஆற்றில் இறங்கிய பிறகு..

மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்க, அவரருகே சென்று அந்தக் கிண்ணத்தைப் பிடுங்கி கிடுகிடுவென்று ஒரே மடக்கில் குடிக்க, கூட்டம் ஹோவென்று ஆர்ப்பரிக்கிறது. மைக்கில் 'நோ கிக் யா!" என்று அவள் சொல்ல, திரும்ப 'ஹோ!'


மேலும்..

Tuesday, September 05, 2006

கண்ட [கண்ட] கனவுகள்

புல்லில் பனித்துளி
துளி: 3


பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாண்டமான ஒரு கட்டிடம். தலையை உய்ர்த்தி பார்த்துவிட்டு. பேண்ட்
பாக்கெட்டில் இருந்து அமிர்தாஞ்சன் பாட்டிலை எடுத்து விரல் பதித்து கழுத்தில் தடவிக்
கொள்கிறேன். கொஞ்சம் தலை சுற்றுகிற மாதிரி தோன்றுகிறது.

உள்ளே அழகான ஒரு ரிசப்ஷனிஸ்ட் நுனி நாக்கில் ஆங்கிலத்தை நடனமாட வைத்துக்
கொண்டிருக்க அவளை நெருங்கி ஏதோ கேட்கிறேன். அவள் கம்ப்யூட்டரைக் கேட்டு விட்டு,
'105ஆவது மாடி' என்கிறாள். லிஃப்ட் நோக்கி விரல் காட்டுகிறாள்.

என்னுடன் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் லிஃப்டுக்குள் புகுந்து கொள்கிறார்கள். நான் '105' என்று
பதிவு செய்ய, மற்றவர்களும் பதிவு செய்கிறார்கள். '25', '38', '62', '178' .....

லிஃப்ட் புறப்படவே ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகிவிட எல்லோரும் 'ச்' 'ச்' 'ச்' என்று வெறுப்பைப்
பறிமாறிக் கொள்கிறார்கள். விர்ரென்று புறப்படுகிற லிஃப்ட் பத்து பத்து மாடிகளையும்
அநாயாச வேகத்தில் சிற்சில விநாடிகளில் கடக்கிறது. தலைக்குள் பத்து புறாக்கள் பறக்கிற
மாதிரி தோன்றுகிறது.

105ஆவது மாடியில் இறங்கும் போதே அங்கு நிலவிய கூச்சல் குழப்பங்களைப் பார்த்து நெற்றியை
சுருக்கினேன். 'சீக்கிரம்.. சீக்கிரம்..' என்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நான்
வரவேற்பில் பார்த்த அதே ரிசப்ஷனிஸ்ட் எதிரில் ஓடி வருகிறாள். அவளது முகத்தில்
முழுக்க பயம் நிரம்பியிருந்தாலும், அவள் ஓடி வரும் போது லயத்துடன் நடனமாடும் முன்
அழகுகளைத் தான் நான் பார்த்தேன்!

'மிஸ்டர் கணேஷ், உங்களைத் தான் தேடி வந்தேன். ஒரு விமானம் இந்த கட்டிடத்தைத்
தகர்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் தப்பி ஓடுங்கள்' என்று சொல்லி விட்டு
என் பதிலைக் கூட எதிர்பாராமல் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள்.

அந்த வெண்மையான கரம்.. அதன் மென்மை என்னைக் கிரங்கடிக்கிறது. கண் மண் தெரியாமல்
ஓடுகிறேன். எங்கே படிகள் என்று தேடுகிறோம். 'படிகளுக்கு செல்லும் வழி' என்கிற பலகை
கண்களில் படுகிறது. ஆனால் அது கீழே விழுந்து கிடக்கிறது! 'ஐயோ!' என்று கத்தி விட்டு
நாங்களே ஒவ்வொரு பக்கமும் ஓடித் தேடுகிறோம். 'ஆ, அதோ, படிகள்..' என்று குதூகலித்து
படிகளில் இறங்க ஆரம்பிக்கிறோம்.

சட்டென்று எல்லா விளக்குகளும் அணைந்து விட, இருட்டு! முன்னே என்ன இருக்கிறது என்றே
தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. முழுக்க மௌனம்.. 'எங்கே போனார்கள் இங்கு
இருந்தவர்கள்?' என்று நான் கேட்க, 'எல்லோரும் இறந்து விட்டார்கள். நாம் இருவர் தான்
இங்கிருந்து தப்பி இருக்கிறோம்' என்று உரக்கக் கூவுகிறாள்.

படிகள் முடியாமல் போய்க் கொண்டேயிருக்கின்றன. 104, 103, 102, 101, 100.. என
அறிவிப்புப் பலகைகளைப் பார்த்த போது ஆயாசமாக இருந்தது. இன்னும் 99 மாடிகள்
இறங்க வேண்டுமா?

மேலே பார்த்த போது உறைந்து போனேன். இடிந்து போன கட்டிடம் ஒரு பெரிய சிமெண்ட்
குவியலாக என்னைக் குறிபார்த்து வந்து கொண்டிருக்க, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
அந்த ரிசப்ஷனிஸ்ட் திடீரென்று வீல் என்று கத்த, 'என்ன? என்ன?' என்றேன். என் கையிலிருந்து
அவளது கை வேகமாக விலகி போனது. நான் அடுத்த அடி எடுத்து வைக்க காலை எடுக்கும்
போது தான் கவனித்தேன். அடுத்த படியே இல்லை. ஆனால் நான் மிக தாமதமாகத் தான்
அதை கவனித்தேன். என் கால் அடுத்த படி எங்கே என்று தேடி நகர..கீழே.. கீழே.. என்று
இலக்கேயில்லாமல் என் உடல் பறக்க ஆரம்பிக்க..

திடுக்கிட்டு கண் விழிக்கிறேன்.

இது அடிக்கடி நான் காண்கிற கனவு! அமெரிக்காவில் நடந்த அந்தத் தாக்குதலுக்கு முன்னரே
எனக்கு இந்த கனவு வந்திருக்கிறது என்று சொன்னால் 'ஓவர் அலட்டல்!' என்று நீங்கள் சொல்ல
வாய்ப்பிருக்கிறது. மாதம் ஒருமுறையோ இல்லை இரு முறையோ ஒரு பத்திரிகை மாதிரி இந்தக்
கனவு எனக்கு வரும். ரிசப்ஷனிஸ்ட் முகம் மற்றும் 'அங்க' அடையாளங்கள் சிறிது மாறியிருக்கும்.
அவ்வளவே! மற்றபடி அதே 98வது மாடியில் தான் படி இல்லாமல் கீழே விழ ஆரம்பிப்பேன்.

'சும்மா படுக்க மாட்டீங்களே, காலாலே படுக்கையை உதை உதைன்னு உதைச்சு என்
தூக்கத்தையும் கெடுத்துகிட்டு, சே!' என்று அதே ரிசப்ஷனிஸ்ட் குரல் கேட்கும். எழுந்து
உட்கார்ந்தால் மனைவி! 'நீயா? சாரி!' என்று சொல்லிவிட்டு ஒரு முறை படுத்து விட அடுத்த
நாள் வீடு இரண்டு பட்டது!

தேர்வறை! விடைத் தாளில் பெயர் மற்றும் பதிவு எண் எழுதி விட்டுக் காத்திருக்க, கேள்வித்
தாள் கொடுக்கப் படுகிறது. முதல் கேள்வியைப் படிக்க திக்! ஐயோ! இரண்டாவது கேள்வியைப்
படிக்க ஐயையோ! மூன்றாவது கேள்விக்கும் பதில் தெரியவில்லை. கடவுளே,
உனக்கே இது நியாயமாக இருக்கிறதா? என்று மேல் நோக்கி கை நீட்ட, கண்காணிப்பாளர்
கிட்டே வந்து 'என்ன? அதுக்குள்ளே அடிஷனல் ஷீட் வேணுமா?' என்று கேட்பார்.
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து விழிப்பேன். கல்லூரி முடித்து இத்தனை வருடங்கள்
ஆனாலும் இந்தக் கனவு மட்டும் என்றும் மார்க்கண்டேயனாக வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கனவு தந்த பயத்தால் தான் நான் மேல் படிப்புக்கே போகவில்லை!

அதிகாலைப் பொழுதில் வரக்கூடிய பிரசித்தமான கனவு - இயற்கை அழைப்பை உடனடியாக
ஏற்க முடியாமல் அங்கு இங்கு என்று இடம் தேடி அலையும் கனவு. நான் சிறு வயதில்
தஞ்சை மாவட்டத்தின் இண்டு இடுக்கு கிராமங்களில் இருந்த போது காலைக் கடன்களை
முடிக்க ஆற்றங்கரைகளை நாட வேண்டியிருந்தது. ஆற்றின் இருபுறமும் பெரிய பெரிய செடிகள்
நிழல்களுடன் காத்திருக்கும். குளுகுளு வசதி செய்யப்பட்ட இயற்கையான கழிவிடங்கள்!
அதுவும் இலவசமாக! ஒரே ஒரு குறை.. அடிக்கடி பெண்கள் வந்து விடுவார்கள். அப்போது
மாத்திரம் எழுந்து நின்று பக்கத்து செடியில் இருக்கும் இலையைப் பறித்து மிஸ்டர் பீன் மாதிரி
அதை ஆராய வேண்டியிருக்கும். அந்த பசுமை நினைவுகள் விலகாமல் இன்னும் என் மனதில்
இருப்பதால் தான் அந்த கனவு அடிக்கடி வருகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

சில சமயம் இந்த கனவு நீடிக்கப் பட்டு விடும். அந்த சமயம் எல்லாம் நான் ஒரு மணி நேரம்
தாமதமாக எழ வேண்டியிருக்கும். இடம் தேடி அலையும் கனவு நிரம்ப சுவாரசியமாக
இரண்டாம் பாகத்துக்கு முன்னேறும். தேடித் தேடி இடம் கிடைக்காமல் பெரிய ஒரு
காட்டுக்கு நான் வந்து விடுவேன். அடர்ந்த காடு. எக்கச்சக்க மரங்கள் கூடி நின்று
சூரிய வெளிச்சமே உள்ளே வரவிடாதபடி இருள வைத்திருக்கும். கடனே என்று கடனை
முடித்து விட்டு எழும் போது, எதிர்க்க இரண்டு கண்கள். பளிச்சென்று மின்னலடிக்கும்
கண்கள். அந்த கண்கள் உறுமும் போது தான் அது புலி என்று தெரிந்து தலை தெறிக்க
ஓட ஆரம்பிப்பேன். நேராக ஓடினால் பிடித்து விடும் என்று கோணல் மாணலாக எல்லாம்
ஓடுவேன். திரும்பிப் பார்த்தால் சிங்கம் வந்து கொண்டிருக்கும். இன்னும் விரைவாக
ஓடுவேன். பூமி அதிர்கிற மாதிரி தெரிய திரும்பிப் பார்த்தால் யானை வந்து கொண்டிருக்கும்.
அதற்குள் சிங்கார சென்னைக்குள் வந்து விட்டிருப்பேன். இப்போது திரும்பிப் பார்த்தால்
ஒரு எருமை துரத்திக் கொண்டு வரும். இதோ எங்கள் தெரு வந்து விட்டது. திரும்பிப்
பார்த்தால் ஒரு நாய் துரத்திக் கொண்டிருக்கும். ஆனால் அது வெற்றி பெற்று விடும். என்
கிட்டே வந்து விட்ட அந்த நாய் என் மீது பாய்ந்து என் கழுத்தைக் குறி வைத்துக் கடிக்க ..

திடுக்கிட்டு எழுந்து கழுத்தில் இருந்து அந்த நாயைத் தள்ளி விட, ஒரு எறும்பு வீல் வீல்
என்று கத்திக் கொண்டு கழுத்திலிருந்து விழும்!

கிழக்கே போகும் ரயில் படம் திரையிட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. பெரிய க்யூ! இன்று
எப்படியும் படம் பார்த்தே விட வேண்டும் என்று இருக்கிற கடவுள்களை எல்லாம்
வேண்டியபடி காத்திருந்தோம். க்யூவில் எத்தனை பேர் நம் முன் இருக்கிறார்கள் என்று
கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்து டிக்கெட் கிடைக்குமா இல்லையா என்று விவாதித்துக்
கொண்டிருந்தோம். க்யூ நகர்ந்தது. எங்களுக்கு பின்னால் ஒரு நூறு பேராவது இருப்பார்கள்.
அதில் ஒரு விபரீத திருப்தி!

கவுண்ட்டரை நெருங்க நெருங்க மாரடைப்பே வந்து விடுமோ என்கிற மாதிரி டென்ஷன்!
இதோ இன்னும் ஐந்தே பேர் தான்! நான்கு தான். மூன்று, அட, இரண்டு, ஆ, ஒன்று. நான்
டிக்கெட்டுக்காக பணத்தை நீட்ட கவுண்ட்டர் மூடப்பட்டது! எப்படி இருக்கும்?! கண்களில்
கண்ணீர் திரண்டு விட்டது. நண்பர்கள் தான் சமாதானப் படுத்தி கூட்டி வந்தார்கள்.

'நான் படம் பார்த்தே ஆக வேண்டும்' என்று நிரம்பப் பிடிவாதம் பிடித்தேன். அது தான் அந்த நாளின்
கடைசி காட்சி. இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டும் - சனி, ஞாயிறு வர! மற்ற நாட்களில்
கல்லூரிக்கு மட்டம் தட்டி எல்லாம் படம் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை! ப்ளாக்கில்
வாங்கலாம் என்று நண்பர்கள் திட்டம் தீட்டினார்கள். யானை விலை குதிரை விலை
சொன்னதால் நண்பர்கள் தயங்கினார்கள். ஓரிரு விநாடிகள் தயக்கத்துக்கு பின் பர்ஸை
எடுத்து விட்டார்கள். 'இன்னும் ஒருவாரம் காத்திருக்க முடியாதுடா' என்று சமாதானம்
சொன்னார்கள். அவன் நீட்டிய அந்த டிக்கெட்டைப் பார்த்தேன். நட்ட நடுவில் அப்பாவின்
முகம் கறுப்பு வெள்ளையில் தெரிந்தது! மறுத்து விட்டு நடந்தேன். பின்னால் வந்த நண்பர்கள்
திட்டிக் கொண்டே வந்தார்கள்.

இரவு படுக்கப் போகும் போது திரும்ப கிழக்கே போகும் ரயில் 'கூ..' என்றது. வருத்தத்துடன்
போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.

ஐந்து நிமிடங்கள் சென்றது. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.... என்று மணியடித்தது. வெண்திரையில்
கோடுகள் அங்கும் இங்கும் தோன்றி மறைய.. தூரத்து மலையில் சூரியன் உதித்துக்
கொண்டிருந்தது. அப்படியே காட்சி நகர.. இருப்புப் பாதை ஓட ஆரம்பித்தது. வேகம்
மெல்ல குறைந்து, அங்கே எதிர்க்க ஒரு ரயிலைக் காண முடிந்தது.

இஞ்சினில் தொடங்கி ஒவ்வொரு பெட்டியாக காண முடிகிறது. கட்டித் தொங்க விடப்பட்ட
தண்டவாளத் துண்டு.. டங் டங் டங் என்று அதில் அடிக்கவும்.. 'கூ..' என்று கூவிப் புறப்படுகிறது
ரயில். கிழக்கு நோக்கி புறப்படுகிறது ரயில்! சட்டென்று காட்சி உறைந்து போக..
'கிழக்கே போகும் ரயில்' என்று டைட்டில் கார்டு போடப் படுகிறது. நான் என்னை மறந்து
கை தட்டுகிறேன்.

ஒவ்வொரு பேராக போடப் பட்டு கடைசியில் பாரதிராஜா பெயர் வரும் போது விசில் அடிக்கிறேன்.
ஒவ்வொரு காட்சியாக படம் அழகாக நகர்கிறது. சிரிப்பு காட்சிகளில் விழுந்து விழுந்து
சிரிக்கிறேன். நாயகன் நாயகி பிரிகிற காட்சிகளில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல்
தடுமாறுகிறேன்.

படத்தில் இடைவேளை கார்டு வந்த போது, எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து திரும்பப்
படுத்துக் கொண்டேன். படம் தொடர்ந்தது! கடைசி காட்சியில் படம் முடிகிற போது கொடுக்கும்
அதே இசை ஒலிக்க 'வணக்கம்' கார்டும் பார்க்கிறேன்.

காலை எழுந்ததும் மனது முழுக்க ரம்மியமாக இருந்தது. ஒரு காசு செலவில்லாமல் முழுப்
படமும் பார்த்து விட்டேன். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று துடித்தேன்.

இளவழகன் பல் துலக்கிக் கொண்டிருந்தவன் வாயைக் கொப்பளித்து விட்டு 'என்னடா, ராத்திரி
முழுக்க சிரிச்சுகிட்டே இருந்தே? ஏதாவது கனவா?' என்றான். ஆகா!

ஆத்மராம் 'என்ன உன் முகத்திலே கறை? அழுதியா என்ன?' என்றான். ஆகா, ஆகா!

கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் அழகாக அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
நண்பர்களுக்கு அதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, நான் பார்த்த காட்சிகளை
திரும்ப நினைத்துப் பார்த்தேன். அநியாயத்துக்கு ஒரு காட்சி கூட ஞாபகத்துக்கு வரவில்லை!

ஆனாலும் ஒரு அருமையான திரைக் கதையுடன் கூடிய ஒரு படத்தைப் பார்த்த திருப்தி
கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு குறை - கதை, திரைக்கதை, வசனம்,
இசை, இயக்கம் - சுபமூகா என்று ஒரு கூடுதல் கார்ட் போட்டிருக்கலாம்!

நன்றி: http://tamil.sify.com

Friday, September 01, 2006

முதல் வாசகி

புல்லில் பனித்துளி
துளி: 2

"ப்ச்" என்று சொல்லிவிட்டு கதையைத் திருப்பிக் கொடுத்தார் உஷா.

'தேறாது!' என்று அதற்கு அர்த்தம்.

கடவுளே என்று என் மனது உரக்கக் கூவியது உங்களுக்குக் கேட்டிருக்கலாம். எவ்வளவு
கஷ்டப்பட்டு இந்தக் கதையை எழுதினேன்! நேற்று இரவு இதை எழுதி முடிக்கையில் மணி
இரண்டைத் தாண்டியிருந்தது. தூக்கம் கண்களில் சிவப்பு பூசியிருந்தாலும் கூட, அதையும்
மீறிய ஒரு ஆத்ம திருப்தி மனதை நிறைத்திருந்தது.

நான் ஒவ்வொரு கதையை எழுதும் போதும் இதே மாதிரி தோன்றுவதுண்டு தான். ஆனாலும், இந்தக்
கதையில் எனக்கே தெரியாமல் ஒருவித அதிகப் படியான ஈர்ப்பு இருப்பதாகத் தோன்றியது.
ஒரு பெண்ணின் மனதில் தோன்றிய புரட்சிகரமான எண்ணத்தைப் பற்றிய கதை. கதையை
ஆரம்பிக்கும்போது இதை எப்படி முடிக்கப் போகிறேன் என்பதே மனதில் புரிபடாமல் இருந்தது.
எழுத ஆரம்பித்த பிறகு, கிடுகிடுவென்று பக்கங்கள் போன மாயம் தெரியவிலை!
என மனதில் ஒரு தேவதை வந்தமர்ந்து என் கைக்கு கட்டளை இட்டுக் கொண்டிருப்பது போல் வார்த்தைகள் தானாக தாளில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அப்படிப் பட்ட அருமையான கதையை ஒரே ஒரு 'ப்ச்' தூக்கி எறிந்து காயப் படுத்தி விட்டது
போல் உணர்ந்தேன். 'அவசர அவசரமாக படித்து விட்டு முடிவை எடுத்து விட்டாரோ!' என்று
கூட நினைத்துக் கொண்டேன்.

என் முகத்தில் என் ஏமாற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டேனோ என்னவோ..உஷா
"சாரி" என்றார்.

"என்னங்க கதை நல்லா இல்லியா?" என்றேன். எனது குரலின் மீது எனக்கே பரிதாபமாக
இருந்தது. 'கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க' என்று ஒருவித வியாபாரத் தனம் அதில்
எட்டிப் பார்த்தது.

உஷா தான் எனக்கு முதல் வாசகி. [பெயர் மாற்றப் பட்டிருக்கிறது, காரணம் - இந்தக்
கட்டுரையைப் படித்து முடிக்கும் போது தெரிய வரலாம்!]

எனது கதைகள் பத்திரிகைகளில் பவனி வர ஆரம்பித்திருக்கையில் கிடைத்த அரிய நட்பு
இது! என் கதை பத்திரிகையில் வருவதற்கு முன் படிக்கக் கூடிய அருமையான வாய்ப்பு
என்கிற மாதிரி மனதில் நிரம்ப உன்னதமாக நினைத்தபடி என் கதையை அனுப்பும் முன்னர்
அவருக்குக் கொடுத்தேன். அபரிமிதமான இறுமாப்பு மனதில் இருந்ததை ஒப்புக் கொள்ளத்
தான் வேண்டும்.

'ஐயோ, நான் தான் உங்க கதையை முதலில் படிக்கப் போகிறேனா?
அடடா, என் வீட்டில் இதை சொல்லியே ஆகணும்' என்றெல்லாம் வியாக்கியானம் செய்து
படிக்கப் போகிறார் என்று நினைக்கப் போக, அவர் அப்படியெல்லாம் செய்யவே இல்லை.

"நான் கதை ஒழுங்கா இருந்தாலே ரொம்ப விமர்சனம் செய்ற பேர்வழி. என் கிட்டே கதையைக்
கொடுக்காதீங்க. வெறுத்துப் போயிடுவீங்க!" என்று சிரித்த போது நொந்து போனேன்.

அப்புறம் தான் தெரிந்தது. உஷா கல்லூரியில் படிக்கும் போது சிறுகதைகள் எழுதியவர் என்பது.
கல்லூரி நடத்திய மாத இதழில் இவரது கதைகள் நிறைய வந்திருக்கிறதாம்.

"அதுக்கப்புறம் எழுதவில்லையா?" என்று கேட்க, "கல்யாணம் ஆயிடுச்சி, அப்புறம் குடும்பப்
பத்திரிகை நடத்திகிட்டிருக்கேன்!" என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்.

விகடன், கல்கியில் கூட கதை வந்து விடும், இவரிடம் ஒரு கதைக்கு பாராட்டு என்பது மட்டும்
கிடைப்பது மிக அரிது என்றே சொல்ல வேண்டும். கதையைப் படித்து விட்டு அலசு அலசு என்று
அலசி விடுவார். ரொம்ப நுணுக்கமாக ஆய்ந்து சொன்னதாக அந்த கருத்துகள் இருக்கும்.
நான் கதை எழுதுவதை ரொம்ப நேசிக்க ஆரம்பித்தேன். இந்தக் கதைக்கு உஷா நல்ல மாதிரி
கருத்து சொல்ல வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து என் மூளையை வருத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.
சொல்லப் போனால் உஷாவுடன் ஒரு விவாதத்தைத் ் தொடங்கினால் அது அடுத்த கதைக்கு ஒரு
நல்ல கருவைக் கொடுத்து விடும்.

மதிய உணவு இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்து என் கதைப் பிரதியைக்
கொடுப்பேன். ஒரு ஸ்பூன் உணவு, ஒரு பாரா கதை, திரும்ப ஒரு ஸ்பூன் உணவு என்று என்
கதைக்கு உணவைத் தொட்டுக் கொள்வார். என்னுடைய ஒரே ஒரு கதைக்கு மட்டும் தான்
உணவை தூர வைத்து விட்டு முழுக் கதையையும் படித்து முடித்தார். "வாவ்!" என்று சொல்லி
விட்டு தலையை உதறிக் கொண்டார். இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் எனக்கு அது
இனிமையாகத் தெரிந்தது. அது ஒரு மர்மக் கதை! அந்த கதை நினைத்த மாதிரியே மிக
வரவேற்பைப் பெற்றது. அதற்கப்புறம் அந்த மாதிரி முழுக் கதையையும் ஒரே மூச்சில் படிக்க
வைக்க முடியவில்லை! அதில் எனக்கு வருத்தமே!

"என்ன பெரிய புதுமை செஞ்சுட்டதா நினைப்பா?"

நான் மௌனம் காத்தேன்.

"தாலியைக் கழட்டி வச்சுட்டா எல்லாம் முடிஞ்சு போயிடுமா? கண்ட கண்ட சினிமா பார்த்து
இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு. குடும்பம் அப்படீங்கிறது அவ்வளவு
சுலபமான விஷயம் இல்லை. அது ஒரு யாகம். வெறும் மோகம் இலலை. அதை சரியா தெரிஞ்சு
கிட்டா அது ஒரு யோகம்."

சொல்லியவர் எழுந்து கை கழுவ சென்று விட்டார். இது என்ன? யாகம், யோகம், மோகம் என்று!
உஷாவுக்கு திடீரென்று தாடி முளைத்து விட டி.ராஜேந்தர் மாதிரி கற்பனை செய்து பார்த்து
சிரித்துக் கொண்டேன்.

"என்னது? எதுக்கு சிரிச்சீங்க?" சட்டென்று திரும்பியவர் நான் சிரிப்பதை கவனித்து விட்டார்
போல!

"ஒண்ணுமில்லை, கதை தேர்ந்தெடுக்கப் படாததால் சந்தோஷத்தில் சிரிச்சுகிட்டிருக்கேன்!"
என்று சொல்லி சிரித்தேன்.

"எல்லா விஷயத்திலும் குற்றம் கண்டு பிடிக்கும் கணவன். சந்தேகக் கண் கொண்ட கணவன்,
அதுக்கு ஒரே தீர்வு - தாலியைக் கழட்டி வைச்சுட்டு வீட்டை விட்டு வெளியேறி விடு! அது
தானே நீங்க சொல்றது? வந்துட்டாயா அவ. அப்புறம் என்ன ஆகும்? அந்தக் கேள்விக்கு
விடை உங்க கிட்டே இருக்கா? கணவனைப் புறக்கணித்து விட்டு வருகிற ஒரு பெண்ணை
சமுதாயம் எந்த மாதிரி நடத்தும் அப்படீன்னு உங்களுக்கு தெரியுமா? அதை பகுதி இரண்டா
எழுதுவீங்களா?"

படபடவென்று பொரிந்து தள்ளிய அந்த உஷா எனக்கு இன்று தான் பரிச்சயம்!

"என்னோட திக் ஃப்ரண்ட் ஒருத்தி.. இவ்வளவுக்கும் அவங்களது லவ் மேரேஜ். அவங்க மாதிரி
ஜோடியைப் பார்த்ததில்லை அப்படீன்னு நாங்க எல்லோரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசியிருக்கோம்.
அவனை விட்டு இவ இருந்ததில்லை. இவ எங்க போனாலும் பின்னாலேயே நாய் மாதிரி
திரிஞ்சான் அவன். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆன பிறகு என்ன ஆச்சு?"

நான் அவரையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த கதை தயாராகிக்
கொண்டிருக்கிறது!!

"எங்கேயிருந்து வந்ததோ அந்த சந்தேகம்? யார் என்ன சொன்னாங்களோ என்ன எழவோ
அவளைப் பார்க்கிற ஒவ்வொரு பார்வையிலும் ஒரு ஓரத்தில் சந்தேகம்! அவ சிரிச்சாலும்
சந்தேகம். அழுதாலும் சந்தேகம். அட, சும்மா இருந்தாலும் சந்தேகம்! அவ என்ன தாலியைக்
கழட்டி வச்சுட்டுக் கிளம்பிட்டாளா? இரண்டு வருடத்துக்கு முந்தைய கணவனை - அந்தக்
காதலனை மனசில் நினைச்சுகிட்டு மனசை சமாதானப் படுத்திக்கிறா! இவளும்
சாக்கடையில் இறங்கி சண்டை போடவா முடியும்? ஒருத்தன் சாக்கடை சகதியோட
இருக்கிறது போதும்! இல்லையா?"

நான் குறுக்கிட விரும்பவில்லை. மௌனமாக அவரையே பார்த்தபடி இருந்தேன்.

"உங்க கிட்டே சொல்லக்கூடாது தான். இருந்தாலும் சொல்றேன். ஒரு நாள் பஸ் நெரிசலில்
முந்தானை கொஞ்சம் விலகிடுச்சு. அவ அதை கவனிக்கலை. வீட்டு வாசலில் புருஷன்
காத்துகிட்டிருந்தார். இவளை இழுக்காத குறையா உள்ளே கூட்டிட்டு போய் முந்தானையை
சரி பண்ணி விட்டிருக்கார். 'நான் சரியா பார்க்கிறது இல்லையா என்ன? ஏன் இப்படி தொறந்து
போட்டுகிட்டு வர்றே?' அப்படீன்னு கேட்டிருக்கார்"

சொல்லி முடித்த போது அவர் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். அவரது கோபம் அதில்
நன்கு தெரிந்தது.

"அவ என்ன தாலியைக் கழட்டவா முடியும்? ஒவ்வொரு தடவை பஸ்ஸில் இருந்து இறங்கும்
போதும் தன்னிச்சையா அவ கை முந்தானையை சரி பண்ணி விடும். அவ்வளவு தான் அவளால்
செய்ய முடியும்! ஏட்டு சுரைக்காயை அழகா புது மாதிரி காய்க்க எல்லாம் வைக்க முடியும் ஆனா
அது கறிக்கு உதவாது!" என்று சொல்லி புன்னகைத்தார்.

அடுத்த நாள் உஷா ஆபீஸ் வரவில்லை. அதற்கடுத்த நாளும்!

மூன்றாம் நாள் தலையில் கட்டுடன் வந்தார். வலது கண்ணில் வீக்கம்!

"ஐயோ என்ன இது?" என்று பதறிப் போனேன்.

"ஒரு சின்ன ஆக்ஸிடண்ட். ஸ்கூட்டரில் போகும் போது ஒரு நாய் குறுக்க வந்ததுன்னு அவர்
அவாய்ட் பண்ணப் போக கீழே விழுந்து.. நல்ல வேளை கண்ணுக்கு ஒண்ணும் ஆகலை!"
என்றார். சட்டென்று என் கண்களுக்குள் சுடுநீர் உணர்ந்தேன்.

மாலை கிளம்பும் போது நண்பன் சந்துரு வந்து அந்த செய்தியை சொன்னான்.

உஷாவுக்கு நேர்ந்தது விபத்தல்ல. அவளுக்கும் அவளது கணவனுக்கும் இடையே நடந்த
ஒரு வாக்குவாதத்தில் கணவன் கையில் கிடைத்த அரிவாள் மணையை எடுத்து தலையில்
அடிக்கப் போக அதனால் தான் அந்தக் கட்டு!

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

இன்று மாலையும் உஷா பேருந்தில் இருந்து இறங்கும் போது அவரது கை முந்தானையை
சரி செய்து கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன்!

[தொடரும்]

நன்றி: http://tamil.sify.com

Thursday, August 31, 2006

காலை வணக்கங்கள்

புல்லில் பனித்துளி
துளி - 1

ள்ளியில் முதன் முதலாகக் காலடி வைத்திருக்கும் சின்னச் சின்னக் குழந்தைகளைக் கூப்பிட்டு
இன்று என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள். ராகம் போட்டு
'குட் மார்னிங் மேம்!' என்று அழகாக சொல்வார்கள். பெற்றோர் முகத்தில் வந்தமரும் அந்தப்
பெருமையைப் பார்க்க வேண்டுமே!

குழந்தையாக இருக்கும் போதே இந்தக் காலை வணக்கம் சொல்லும் பண்பு விதைக்கப் பட்டு
விடுகிறது. முன்பின் தெரியாத யாரை எதிர்கொள்ளும் போதும் கூட பேச்சை ஆரம்பித்து வைக்க
இந்த வணக்கம் மிக உதவி புரிகிறது என்பது எனது கருத்து. அவர் யாரோ, இன்று தான்
பார்க்கிறேன், ஆனாலும் அவரது இன்றைய பொழுது அருமையாக அமைய என்னால் இயன்ற
அளவிலான இரண்டு வார்த்தைகளை நான் அளிக்கிறேன். மேன்மேலும் அவருடன் வார்த்தைப்
பரிமாற்றங்கள் ஏற்பட இதை விட சுலபமான வழி இல்லை என்றே சொல்லலாம். ஆனால்,
இந்த இரண்டு வார்த்தைகள் கூட சுருங்கி ஒரு 'Hi' அல்லது ஒரு சிறு கையசைப்பில் முடிந்து
விடுகிறது. பேச எல்லாம் நேரம் இல்லை. மிக மிக இயந்திரத் தனமான வாழ்க்கை!

எங்கள் அலுவலகப் பேருந்தில் ஏறும் ஒரு நபரைப் பார்க்கும் போது எனக்கு எப்போதும்
பொறாமையாகத் தான் இருக்கும். முதல் இருக்கை நபரைத் தட்டி 'குட் மார்னிங்' என்பார்.
முந்தைய தினத்தின் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஏதோ கேள்வி கேட்டு
பதிலுக்கு காத்திருப்பார். அவருக்கு அடுத்து ஏறியவர் சிறிது தயங்கி பின்
'எக்ஸ்க்யூஸ் மீ' சொல்வார். "நீங்க போங்க" என்று சொல்லி இவர் வழி விட்டு விடுவார்.
"என்ன அவ்வளவு அவசரம்? ஆபீஸ் போனபிறகு கேட்டால் என்ன குறைந்து விடும்?" என்று
கூட நான் நினைத்ததுண்டு. அவர் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அந்த பேருந்தின் ஆட்டத்திற்கு
ஈடு கொடுத்தபடி நின்று அந்த பதிலைப் பெற்றுக் கொண்டு புன்சிரிப்புடன் அடுத்த சீட்டுக்கு
முன்னேறி, அங்கிருந்து ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கும் 'குட் மார்னிங்' சொல்லிக்
கொண்டே வருவார். நடுவில் யாராவது ஒருவரிடம் "நேற்று அங்கு இறங்கினாயே? போன காரியம்
என்ன ஆச்சு?" என்று விசாரிப்பு நிச்சயம் இருக்கும். கடைசி இருக்கைக்குத் தான் சென்று
அமர்வார். அவர் அங்கு போய் சேர நிச்சயம் பத்து நிமிட நேரம் ஆகியிருக்கும்!

எத்தனை நண்பர்களைப் பெற்றிருக்கிறார் இவர் என்று நான் அதிசயப் பட்டதுண்டு. இவர் இந்த
மாதிரி செய்வதற்கு எப்படி இவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்று கூட ஆச்சரியப்
பட்டதுண்டு! யாராவது அவரிடம் முகம் கொடுத்து பேசவில்லையெனில் அவ்வளவு தான். இன்னும்
ஒரு ஐந்து நிமிடம் அவரிடம் நின்று அவர் சரியாகப் பேசுகிற வரைக்கும் விடாமல் வெற்றி பெற்று
விடுவார்! அவர் ஒரு நாள் அந்த பேருந்தில் வரவில்லை என்றால் எனக்கு ஏதோ ஒரு இழப்பு ஏற்பட்ட மாதிரி தோன்றும்.

நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரி வலியப் போய் பேசுகிறோம்?

நானும் அந்தப் பேருந்தில் ஏறும் போது நான் பணிபுரியும் அதே பிரிவில் இருக்கும் நண்பர்
ஒருவருக்கு வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில்!
தினந்தோறும் அவர் பக்கத்தில் அமர்ந்து ஏதாவது பேசிக் கொண்டு வருவது வழக்கம்.
பேச்சு எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கும். பேருந்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்
பயணம் புரிகையில் இந்த மாதிரி பேசிக் கொண்டே செல்வதால் நேரம் போவதே தெரியாது.

அலுவலகத்தில் எனக்கு கொஞ்சம் மதிப்பு கூடியது. என்னுடைய பணியில் நான் காட்டும்
சுறுசுறுப்பு பற்றி ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன. அப்போது தான் எதேச்சையாக அதை
கவனித்தேன். ஒரு நாள் நான் வணக்கம் சொல்லி அமர்கையில் அந்த பேருந்து நண்பர் கண்டு
கொள்ளாமல் ஜன்னல் வழியாக என்னவோ நிரம்ப உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பது
போல் காட்டிக் கொண்டிருந்தார். நான் திரும்ப வணக்கம் சொல்ல, ஒரு தலையசைப்பு மாத்திரம் பதிலாக வந்தது!

அதற்கடுத்த நாள், அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர்
பக்கத்தில் அமர்ந்தேன். அலுவலகம் வந்த போது தான் எழுந்தார். ஒரே ஒரு புன்னகை. "நேற்று
ரொம்ப லேட்டாத் தான் தூங்கினேன்!" என்றார். "குட் மார்னிங்" என்றேன். "ம்ம்.. மார்னிங்!"
என்றார்.

அடுத்த நாள் நான் அமர்வதைக் கூட கவனிக்காத மாதிரி ஆங்கில பேப்பரில் மூழ்கியிருந்தார்.
"குட் மார்னிங்" என்றேன். "சாரி, நான் பேப்பர் படிக்கலை, அங்க உட்கார்ந்துக்கிறேன்" என்று
சட்டென்று எழுந்து பின்னால் வேறு இருக்கைக்கு சென்று விட்டார்!

அடுத்த நாள் அவர் பேப்பரில் மூழ்கியிருக்க "குட் மார்னிங்" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக்
காத்திருக்காமல் வேறு இருக்கைக்கு சென்றேன்! நான் அமர்ந்தவுடன் என்னைப் பார்த்து
'தேங்க்ஸ்" என்றார். எனது இதயத்தில் குண்டூசி வைத்துக் குத்திய மாதிரி உணர்ந்தேன்.
அதற்கப்புறம் அவரைக் காணும் போதெல்லாம் ஒரு புன்னகை மாத்திரம் உதட்டில்
தோன்றி உறைகிறது!

அதே பேருந்தில் வேறு எவரையேனும் நட்பு வட்டத்தில் சிக்கி வைக்க ஆசை தான். தினம்
தினம் குட் மார்னிங் சொல்ல விருப்பம் தான். திரும்ப ஒரு குண்டூசி என் இதயத்தை
நெருங்குவதை நான் விரும்பவில்லை.

காலை வணக்கம் சொல்வது ஒரு விருப்பமான விஷயமாக, ஒரு கடமையாக இல்லாமல், கடனே
என்று ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பயத்துடன் காலை வணக்கம் சொன்னதே
நன்றாக இருந்ததோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அது என்ன? பயத்துடன்?!

பெங்களூரின் வேலை இல்லா பட்டதாரிகள் கூட்டத்தில் புதிய வரவாக நான் வந்த அந்த நேரம்!
என்னையும் மதித்து 'பிழைத்துப் போ!' என்று வேலை கொடுத்தது ஒரு டிராவல் ஏஜென்சி!

நான் இந்த அளவுக்கு முன்னேற்றம் பெற முதல் முக்கிய காரணமாக எனக்கு வேலை கொடுத்த
அந்தப் புண்ணியவானைத் தான் சொல்ல வேண்டும். திருவாளர் பாண்டுரங்கன்!

நான் சிவாஜி படம் பார்ப்பதையே விட்டுவிட்டிருந்தேன். தினமும் எதிர்க்க ஒரு சிவாஜியைப்
பார்க்கும் போது எதற்கு தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்?! அவர் மிடுக்காக ஆபீசுக்குள்
நுழையும் அந்த அழகைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் குட்
மார்னிங் சொல்லி விட்டுத் தான்! அவர் உள்ளே வரும் போது "குட் மார்னிங் சார்" "குட் மார்னிங்
சார்" "குட் மார்னிங் சார்" "குட் மார்னிங் சார்" "குட் மார்னிங் சார்" என்று ஒவ்வொருவரும்
கீ கொடுத்த பொம்மை போல் எழுந்து நின்று சொல்லிவிட்டு திரும்ப உட்காருவார்கள். ஏதோ
ஒத்திகை எடுத்து செய்த ஒரு நாடகக் காட்சி மாதிரி இருக்கும்.

யாராவது குட் மார்னிங் சொல்லவில்லை என்றால் உண்மையாகவே அவருக்கு குட் மார்னிங்
இல்லை என்று அர்த்தம்!

குட் மார்னிங் குறித்து நிறைய கதைகள் இருந்தாலும் ராம் மோகன் கதை ரொம்ப பிரசித்தம்.
அவன் சேர்ந்து ஒரு வார காலம் ஆகியிருந்தது. பாண்டு ரங்கன் பற்றி எல்லோரும் மாய்ந்து
மாய்ந்து சொல்லி வைத்திருந்தோம். அவன் அதைப் பற்றிக் கண்டுகொண்டதாகவே
தோன்றவில்லை.

ரொம்ப சீரியஸாக இரண்டு ஸ்டேட்மெண்ட்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.

"செக் பண்ணிகிட்டிருக்கேன் மச்சி!" என்பான். பின்னர் கண்ணடிப்பான்.
"இது ஒரிஜினல் ஸ்டேட்மெண்ட்! இது ஃபோட்டோ காப்பி! செக் பண்ணிகிட்டிருக்கேன்!"
என்று சொல்லி சிரிப்பான்.

"என்ன எழவு ஆபிஸ்டா இது! ஒரு வேலையும் குடுக்கலைன்னா இப்படித் தான் பாவ்லா
காட்ட வேண்டியிருக்கு!" என்பான். பாவி!

இந்த மாதிரி தகிடுதத்தம் செய்யும் போது மாட்டாமல், உண்மையாகவே வேலை செய்து
கொண்டிருக்கும் போது மாட்டிக் கொண்டான்!

பாண்டுரங்கன் ஆபீசுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

"குட் மார்னிங் சார்!" "குட் மார்னிங் சார்!" "குட் மார்னிங் சார்!" "குட் மார்னிங் சார்!"

ராம் மோகன் இருக்கை பக்கத்தில் வந்தவர் ஒரு நொடி தயங்கினார். ராம் மோகன் நிரம்ப
உன்னிப்பாக வேலையில் மூழ்கிப் போயிருந்தான்! எங்களுக்கெல்லாம் உள்ளங்காலில் வியர்த்து
சாக்ஸ் நனைய ஆரம்பித்து விட்டிருந்தது. ராம் மோகன் தலையை உயர்த்தக் கூட இல்லை.
பாண்டுரங்கன் தன் அறைக்குள் புகுந்து கொள்ள...

நாங்கள் வேகவேகமாக ராம் மோகனை நெருங்கினோம். "மோசம் போனாயே மோகன்!" என்று
கவிதை பாடினோம். "நான் பார்க்கவே இல்லைடா. இங்க ஒரு ரூபா இருபது காசு டாலி ஆகாம
ஆட்டம் காண்பிச்சுகிட்டு இருந்ததா? அந்த வேலை மும்முரத்துலே கவனிக்கவே இல்லைடா
மச்சி! திட்டுவாராடா?" என்றான் பாவமாக.

"சீட்டு கிழிச்சிருக்கார் ஒருத்தனுக்கு!" என்று சீதாராமன் கதையை சொல்ல ஆரம்பித்தான் போஸ்.
இரண்டாயிரத்து ஆறாவது தடவையாக அதை ரொம்ப சுவாரசியமாகக் கேட்டோம்!

இன்டர்காம் அலறியது.
"எஸ் சார்!" என்று மோகன் தடுமாறிய போதே தெரிந்தது அந்தப் பக்கம் பாண்டு ரங்கன் என்பது!

"எதுக்கு பயப்படணும்? உண்மையை சொல்வேன்!" என்று கூட ஒரு ஃபைலை 'துணைக்கு'
எடுத்துக் கொண்டான். "நான் உங்க மாதிரி எல்லாம் பயப் பட மாட்டேன்!" என்று கிளம்பினான்.
நாங்கள் எல்லோரும் எங்கள் வேலைகளை ஒத்தி வைத்து விட்டுக் காத்திருந்தோம்.

ஆயிரத்தெட்டு பேய் அடித்தது போல் திரும்ப வந்தான் ராம் மோகன். அவன் கொண்டு சென்ற
ஒரு ஃபைல் ஆறு ஃபைல்களாக மாறியிருந்தது!

"குட் மார்னிங் கூட சொல்லாம என்ன மேன் பண்ணிகிட்டிருந்தே?" என்று அவர் கேட்ட போது
இவன் அந்த ஃபைலைக் காட்ட அதைப் பிடுங்கி முகத்தில் விட்டெறிந்திருக்கிறார்! ஒன்று
ஆறு ஆகி விட்டது!

"என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி ஆக்ட் கொடுக்கிறியா? இந்த மாதிரி ஆளுங்களை
எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன்?" என்று உரக்க கத்தி விட்டு,

"பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்காத ஆளுங்க என் ஆபீசில் தேவையில்லை! கெட் அவுட்!"
என்று கதவைக் காட்டி விட்டாராம்!

காலில் விழாத குறையாக தப்பி விட்டான். "இனி இது மாதிரி பண்ணக் கூடாது, என்ன?" என்று
புத்தி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

ராம் மோகன் ரொம்ப நேரத்துக்கு வியர்வையைத் துடைத்தபடி இருந்தான்.

மதிய உணவு வேளை முடிந்தது. பாண்டுரங்கன் வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு இதோ இன்னும்
இரண்டு நிமிடத்தில் வந்து விடுவார். நாங்கள் எல்லோரும் வேலையில் மூழ்கும் பாவ்லா காட்ட
ஆரம்பித்தோம்! சரியாக ஒரு நிமிடம் ஐம்பத்தொன்பது விநாடிகள் கழிந்த போது, பாண்டு ரங்கன்
உள்ளே நுழைந்தார். சட்டென்று கூடுதல் அமைதி அலுவலகத்தை நிறைத்தது.

ராம் மோகன் அவசர அவசரமாக எழுந்தான்.
"குட் ஆஃப்டர்நூன் சார்!" என்றான் பவ்யமாக.

"கம் இன்!" என்று விட்டு [கர்ஜித்து விட்டு!] தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

திருதிருவென்று ஒரு வித பாக்யராஜ் பார்வையை எங்கள் மேல் பாய்ச்சி விட்டு அவர் பின்னால்
பலி ஆடு மாதிரி போனான். அரைமணி நேரம் கழித்து தொய்ந்து வந்தான்.

"என்னடா ஆச்சு?"
அவர் மாதிரியே பேசிக் காட்டினான்:
"என்ன கிண்டலா? வாலை ஒட்ட நறுக்கிடுவேன். குட் மார்னிங் சொன்னாப் போதும். அதுவும்
ஒரு தடவை சொன்னா போதும். குட் ஆஃப்டர்நூன், குட் ஈவ்னிங், குட் நைட் எல்லாம்
சொல்லத் தேவையில்லை! என்ன தெரிஞ்சுதா?" என்று ஒரு விநாடி நிறுத்தியவன்..

"சொன்னாலும் தப்பு! சொல்லாட்டியும் தப்பு! என்னடா உலகம் இது?" என்றான் வருத்தத்தோடு!



[தொடரும்]


நன்றி: http://tamil.sify.com

புல்லில் பனித் துளி - அறிமுகம்

னி நனைக்கும் விடியற் காலை-

சூரியன் வைத்த அலாரமாய் குயில் கூவிக் கொண்டிருக்கிறது. 'இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்!' என்று
தூக்கத்தை நீட்டித்து, மலையிலிருந்து வெளிவர மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்
சூரியன்!

இந்த தொந்தி எங்கிருந்து வந்து இணைந்து கொண்டது என்பது இன்னும் புரிபடாமல்
நடந்து கொண்டு, விரைந்து நடந்து கொண்டு, ஓடிக் கொண்டு.. மனிதர்கள். அதற்கெல்லாம்
எங்கே நேரம் என்று தொழிலகம் நோக்கி விரைந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கம்.
அந்த அதிகாலைப் பொழுதிலேயே நட்பு வட்டத்தை விடாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட
பறவைகள்!

யாருமே இந்த புல்வெளிப் பக்கம் வரவில்லை. ஒவ்வொரு புல் மேலும் மகுடம் சூட்டப்
பட்டிருக்கிறதா? இல்லை, ஒவ்வொரு புல்லும் புதிதாக மூக்குத்தி வாங்கி மாட்டிக்
கொண்டிருக்கிறதா?

சோம்பேறி சூரியனின் கதிர்கள் அந்த புல்வெளிப் பனித்துளிகளின் மேல் பட்டவுடன், எல்லா
மூக்குத்திகளும் ஒருசேர மின்னுகின்றன. வந்த வெள்ளைக் கதிரைப் பிரித்துப் போட்டு,
வானவில் வர்ணங்களை வழங்குகின்றன.

சூரியனைப் பார்த்து எத்தனை மகிழ்ச்சி அந்த பனித்துளிகளுக்கு? அந்த சூரியனால் தான்
தாங்கள் புல்லிலிருந்து உதிர்ந்து காணாமல் போகப் போகிறோம் என்பது புரியாமலே
விளையாட்டுத் தனமாய் வர்ண வேடிக்கை காண்பிக்கின்றன.

நமது வாழ்க்கையிலும் இத்தகைய எத்தனையோ புல் பனித் துளிகள்! அந்த நேரத்தில்
வர்ணங்களை வாரி இறைத்து பின் மறைந்து போகும் நிகழ்வுகள். அந்த வர்ண விளையாட்டு
மாத்திரம் மறப்பதில்லை.

எனது புல்வெளிக்கு நீங்களும் வாருங்கள். உதிர்ந்து போன பனித்துளி ஒவ்வொன்றையும்
புல்லுக்கு திலகம் வைப்பது போல் அதன் மீது ஒட்டி வைத்து அன்று பார்த்த அதே வர்ண
ஜாலத்தை இன்றும் காண நினைக்கிறேன். அந்த வர்ணங்கள் சிலிர்க்க வைக்கும்.. சிரிக்க
வைக்கும்.. ஏங்க வைக்கும்.. அடடா என வருத்தப் படவும் வைக்கும்..

தட்டிக் கொடுத்து இன்னும் கேளுங்கள்..
உங்கள் ஞாபகத்துக்குள் புதிதாக வந்து சேர்ந்த உங்கள் வீட்டு பனித்துளிகளையும்
மறக்காமல் அறிமுகப்படுத்துங்கள்.

தங்களைக் கண்டு கொண்டதற்காக அந்தப் பனித் துளிகள் துள்ளிக் குதிக்கின்றன!

[தொடரும்]


நன்றி: http://tamil.sify.com/

Tuesday, August 29, 2006

பொண்ணுங்களைக் கண்டா பயமா?


பாபு அந்தப் பக்கம் போகிற வரை காத்திருந்த சார்லஸ் என் முதுகைத் தட்டினார்.

"ஏன் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்கு பயமா?" என்று பகபகவென்று சிரித்தார்.

"என்ன வயசு உனக்கு?" என்றார் சிகரெட்டைப் பற்ற வைத்து.

"இருபத்தி ஒண்ணு" என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அவனவன் நூத்தம்பது ரூபா கொடுத்துட்டு வர்றானுங்க. ஃப்ரீயா கொடுத்தாக் கூட வேணாங்கிறியே? அம்மா திட்டுவாங்களா?" என்று சொல்லி விட்டு திரும்ப பகபகபக!



மேலும்.....

Tuesday, August 22, 2006

என் முதல் இதழ் அனுபவம்



அன்புடையீர், வணக்கம். தங்கள் 28.10.1977 தேதியிட்ட இதழில் வந்த 'பூட்டு' கதையை
கிட்டத் தட்ட பத்து முறை திரும்பத் திரும்பப் படித்தேன். [அப்பவும் புரியலையா?] அவ்வளவு அருமையாக இருந்தது கதை. இந்தக் கதையை அடுத்த இதழிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதை எழுதிய திருச்சி ராஜனுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவும். அவரது முகவரியை தயவு செய்து அனுப்பி வைக்கவும்.


படித்து விட்டீர்களா?
புல்லில் பனித்துளியின் துளி 7

- - - End of Advertisement ;-)) - - - - - - - - - -

Wednesday, August 09, 2006

மறந்தே போயிட்டீங்களா?


"அங்க்கிள், அங்க்கிள், ப்ரஷாந்தை ஞாபகம் இருக்கா அங்க்கிள்?"

பாவி, உன்னையே எனக்கு ஞாபகம் இல்லை. யார் ப்ரஷாந்த்? முகம் தெரியாத அந்த ரமேஷ் மேல் கோபம் வந்தது. யார் ரமேஷ் என்பது போய் யார் ப்ரஷாந்த் என்று மனதைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்தேன்.

"அங்க்கிள் மறந்தே போயிட்டீங்களா எங்களை?" இப்போது அந்த குரலில் இனம் புரியாத சோகத்தைக் காண முடிந்தது.



புல்லில் பனித்துளி தொடரின் துளி - 6.

மறக்காமல் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'

Friday, August 04, 2006

தலை மேல் பலன்!

அது என்ன தலை மேல் பலன்?

விபரமறிய - படியுங்கள்.

எனது கட்டுரைத் தொடர் புல்லில் பனித்துளியின் ஐந்தாவது துளி இது.

தொடரைப் படியுங்கள். தங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'

Wednesday, May 31, 2006

சுபமூகாவைப் பற்றி..

மதுமிதா 'சுபமூகாவின் ஆட்டோகிராப்'
அப்படின்னு ஒரு புத்தகம் எழுதப் போறதா
கேள்விப் பட்டேன்! அவங்களுக்கு
உதவியா இருக்கட்டுமேன்னு இந்தக் குறிப்பு ;-))

---------------------------------------------------------


வலைப்பதிவர் பெயர்: கணேச மூர்த்தி [புனைப் பெயர்: சுபமூகா]

வலைப்பூ பெயர் : சுபமூகா பக்கங்கள்

சுட்டி(உர்ல்) : http://puthupunal.blogspot.com

ஊர்: பெங்களூர்

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
நிறைய பேர் எழுதிக் கொண்டிருக்க எனக்கும் ஆசை வந்தது!

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 21 Aug 2004
இது எத்தனையாவது பதிவு: 32


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
நான் எழுதுவதை யாராவது படித்தாக வேண்டும் என்று தான்!

சந்தித்த அனுபவங்கள்:
நான் 1984இல் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். கல்கி, சாவி, குமுதம், விகடன், இதயம் பேசுகிறது, குங்குமம் என எல்லா பத்திரிக்கைகளிலும் கதைகள் வந்துள்ளன.

விகடன் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, கல்கி நகைச்சுவை கதைப் போட்டியில் பரிசு, குமுதம் சிறுகதைப் போட்டியில் பரிசு, அமுதசுரபி அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை கதை போட்டியில் இரண்டாம் பரிசு, அமரர் சாவி அவர்களின் பாராட்டு என்று எல்லாவற்றையும் இப்போது அசை போடும் போதும் இனிக்கிறது!



பெற்ற நண்பர்கள்:
நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத அவர்கள் என்னவோ ரொம்ப நாட்கள் பழகியது போல் பேசும் போது இந்த இணைய உலகத்தின் இணையில்லாப் பெருமை புரிபடுகிறது!

கற்றவை:
இன்னும் நிறைய கற்க வேண்டும் என்பதே!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
'தாங்கள் அனுப்பிய கதை/கட்டுரை/கவிதை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்கிற துண்டு சீட்டு இங்கு இல்லை! ;-)

இனி செய்ய நினைப்பவை:
நிறைய இருக்கின்றன. சோம்பேறித் தனம் முதலில் இருக்கிறது!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
அலுவலகத்தில் Oracle உடன் காதல் கொண்ட ஒரு Project Leader. பெங்களூரில் பணி. தற்காலிகமாக சென்னை! ஒன்பது மாதங்கள் லண்டனில் இருந்த அந்த நாட்கள் மறக்க இயலாத நாட்கள். நிறைய எழுத நினைத்தாலும் அலுவலகப் பணி கட்டிப் போட்டு விடுகிறது.



இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

Sunday, May 14, 2006

சுஜாதா - தங்க வேட்டை - சுபமூகா

சுஜாதா 'சன்' தொலைக் காட்சியின் பிரசித்தி பெற்ற தங்க வேட்டை நிகழ்ச்சியில் தோன்றப் போகிறார்.

அந்த நிகழ்ச்சியில் இடம் பெறும் இன்னொரு நபர் சுபமூகா!

இப்படியெல்லாம் வீண் கற்பனை வேண்டாம். உங்களை உள்ளே இழுத்து வர இது! ;-)

சுஜாதா - கணேஷ் - வசந்த் கூட்டணி திரும்ப விகடனில்!

சுஜாதா எழுதிய கதையைப் படிக்க யாருக்கு தான் கசக்கும்?! அதுவும் கணேஷ் வசந்த் இருந்தால் கேட்கவே வேண்டாம். முதல் பகுதியில் தங்க வேட்டை பற்றி போகிற போக்கில் புன்னகை புரிய வைக்கிற கருத்தைக் கொடுத்திருக்கிறார். (இதைப் பற்றி நான் எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்தது!)

இந்த வார விகடனைப் படித்தாரா? இல்லை என் பதிவைப் பார்த்தாரா தெரியவில்லை, ரம்யா இந்த வாரம் 'மின்னாடி' உபயோகப் படுத்தவில்லை. [ரொம்பத் தான் ஓவர் எதிர்பார்ப்பு!]

ஆனால் மின்னாடி என்கிற வார்த்தையில் என்னை அறியாமலேயே ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்து விட்டது! 'கண்ணாடி மின்னாடி' என்றெல்லாம் வார்த்தைகள் உபயோகித்து புதுக் கவிதை எழுதத் தோன்றுகிறது!

இந்த வாரம் தங்க வேட்டையில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் HIV+ கொண்டவர்கள். அந்த சின்னக் குழந்தைகளைப் பார்த்தபோது மனது கனத்தது.

அப்புறம்..
திரும்ப சுஜாதா..

இந்த வாரம், கதையின் கடைசி ஒரு பத்திக்காக முழுப் பகுதியையும் படிக்க வைத்திருக்கிறார்.

அது தான் சுஜாதா!!

Monday, April 10, 2006

நான் காத்திருக்கிறேன்! நீங்கள்??

ஞாயிறு தோறும் நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் சங்கமம். இந்த வாரம் எஸ்.பி.பி. என்றால் கேட்க வேண்டுமா?! மிக மிக மகிழ்ச்சி அளித்து விட்ட நிகழ்ச்சி என்று நிச்சயம் சொல்லலாம். இன்னும் ஒரு வாரம் காத்திருந்து அடுத்த பகுதியும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னவோ பக்கத்து வீட்டு நண்பருடன் பேசுகிற மாதிரி அதி அற்புதமாக ஆத்மார்த்தமாக எஸ்.பி.பி. பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கூடுதல் போனஸாக அவரது அப்போதைய அருமையான பாடல்களை அவர் மெருகேற்றிப் பாடும் போது.. பரம சுகம்!!

எம்ஜிஆருக்கு பாட வந்த தன்னை அந்த காலத்து இசையுலகம் எப்படி கவனித்தது என்பதை சொன்னார். (ஒரு சின்ன கோல்ட்டி பையன்!)

கண்ணதாசனுக்கு கொடுக்கப் பட்ட சரணத்துக்கு (லா ல லால லால லா..) கண்ணதாசன் 'என்னய்யா மலையாளத்தான், இந்த மாதிரி எல்லாம் பாட்டு எழுத வைக்கிறே?' என்று சொல்ல, விஸ்வநாதன் 'ஓய் செட்டியார், நீ எழுத முடிஞ்சா எழுது, இல்லைன்னா இன்னொரு ஆளை எழுத வைக்கிறேன்' என்று சவால் விட, எழுதப் பட்ட அந்த அருமை பாடல்.. 'வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா!'

இந்த பாடலில் 'பாதர் இன் லா' 'மதர் இன் லா' 'ப்ரதர் இன் லா' 'சிஸ்டர் இன் லா' தவிர மற்ற எல்லா லாவையும் பயன் படுத்தி இருக்கிறார் கண்ணதாசன் என்று சொல்லி சிரித்தார் எஸ்.பி.பி.

சங்கமத்துக்கு ஒரு மணி மகுடம்!

Tuesday, April 04, 2006

அருமையான நேரம்

மே மாதம் நான்காம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு..

நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் எழுந்து அமருங்கள்.
தூங்காமல் விழித்திருந்தால் இன்னும் நன்று!

காத்திருங்கள் அந்தத் தருணத்துக்கு!

இரண்டு நிமிடங்கள் கழியட்டும்.
இன்னும் மூன்று விநாடிகள் ஓடிப் போய் விடட்டும்!

அந்த நேரம்..
உங்கள் வாழ்நாளில் இன்னொரு தடவை காணவே முடியாத தருணம்!

ஆமாம்!

அந்த நேரம்.......

01:02:03 04/05/06

[தகவலுக்கு நன்றி திரு சுரேஷ் விஸ்வேஸ்வரன்]

Thursday, February 23, 2006

கோழி பற.. பற..

Tuesday, January 17, 2006

என்னை நோகடிக்க வருவாளோ?

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக தேவாவின் நேர்காணலை சன் டிவி வழங்கியது. தேவா சொன்ன இந்த நிகழ்வு என்னை சிரிக்க வைத்ததோடல்லாமல் நிரம்ப சிந்திக்க வைத்து விட்டது.

சென்னையில் நடந்த ஒரு பெரிய விழாவில் தேவா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இருந்த போது, ஒரு விஐபி பேச்சாளர் பேச ஆரம்பித்தார். எல்லோருக்கும் நல்வரவு சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெருந்தகை தேவாவைப் பற்றி பேச்சை ஆரம்பித்தபோது -

'தேவாவைப் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர் இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் அரிய ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். அவர் பாடல்களை எல்லாம் கேட்கும் போது எப்படி தான் இவர் இந்த மாதிரி பாடல்கள் அமைக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன். ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் அடக்கமாக இருப்பவர். உதாரணத்திற்கு ஒரு பாடலை சொல்ல வேண்டும்.

'என்னைத் தாலாட்ட வருவாளோ!' என்றாராம்.

தேவா உடனே வேகவேகமாக கையசைத்து 'ஐயோ, அது நான் இசையமைத்ததில்லை! இளையராஜா!' என்று அபிநயத்தாலே சொல்லிப் பார்த்தாராம். 'தேவா, நீங்கள் என்றைக்கும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்!' என்று சொல்லி விட்டு, 'அப்புறம்.. இந்தப் பாடலைப் பாருங்கள் -

இன்னிசை பாடிவரும்... ' என்றாராம்!!!

'அடடா, அது எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தது!' என்று கொஞ்சம் உரக்கவே 'எஸ்..' என்று ஆரம்பிக்க 'எஸ் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்!' என்று அடுத்த பாடலுக்கு தாவி விட்டாராம்.

'அன்றைக்கு அவர் சொன்ன பாடல்களில் ஒன்று கூட என்னுடையதில்லை என்று வருந்தினேன்!' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தேவா.

உடனே சமயோசிதமாக 'கவலைப் படாதே சகோதரா!' இசைத் துணுக்கை ஒளிபரப்பினார்கள்.

லட்சோப லட்சம் பேரை சென்றடையும் ஒரு பேட்டியில் மனதார ஒரு கருத்தை இப்படி சொல்ல எல்லோராலும் முடியாது என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது.

தமிழ் எங்கே? இங்கே!

பொங்கல் திருநாள். மதுரை மாநகரில் பொங்கல் திருநாள் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம் என்று சென்றிருந்தேன்.

வீதியெங்கும் வீதியை மறைத்து வைத்ததைப் போல், வண்ணக் கோலங்கள்! ஒவ்வொரு கோலத்திற்கும் பக்கத்தில்..

WELCOME TO HAPPY PONGAL !


[இங்கேயே முடித்து விட்டால் இது ஒரு அருமையான புதுக் கவிதைக்குக் கருவாக அமையும்!]

ஒரு வீட்டின் கதவைத் தட்டினேன். ஒரு பெண் கதவைத் திறந்தாள்.

'யாராவது அமெரிக்காவிலிருந்து வருகிறார்களா?' என்றேன்.

'இல்லை! எனது அப்பா தான் ஆட்டையாம்பட்டியிலிருந்து வருகிறார்!' என்றது அந்தப் பெண்!

'எனக்கு ஒரு சந்தேகம். தமிழர் திருநாளில் எங்கு பார்த்தாலும் HAPPY PONGAL என்று ஆங்கிலம் ஏன்?' என்று கேட்டே விட்டேன்.

'நீங்கள் வீட்டின் முகப்பைப் பார்க்கவில்லை போலிருக்கிறது!' என்றாள் அவள்.

வீட்டின் முகப்பைப் பார்க்க அங்கு -
'இனிய பொங்கல் திருநாளுக்கு நல்வரவு!'
என்று எழுதியிருந்தது.

'தமிழை வீட்டின் முகப்பில் ஏற்றி விட்டோம். ஆங்கிலத்தை வீதியில் வீசி எறிந்து விட்டோம்!' என்றாள் அவள் பெருமிதத்தோடு!

ரசித்து கைதட்ட வைத்து விட்டார் பேராசிரியர் அப்துல் காதர். சென்னையில் 29வது புத்தகக் கண்காட்சியில் மனதைக் கவர்ந்த கவியரங்கத்தில்!

Wednesday, January 11, 2006

[கல் என நகைக்க வைத்த] கல்

விஞ்ஞானம் எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறது!

மழை, வெயில், பனி, காற்று, நிலநடுக்கம் இதையெல்லாம் ஒரு கல்லை வைத்தே
கண்டுபிடிக்க முடிகிறது இப்போது!

என்னை சிலிர்க்க வைத்த செய்தியை இதோ பகிர்ந்துகொண்டு விட்டேன்.






Tuesday, January 10, 2006

1234உம் ஒரு துப்பட்டாவும்

1234உம் ஒரு துப்பட்டாவும் [அல்லது]
92 + 64 = 1234 [அல்லது]
1234 - 1 [அல்லது]
அவன் பார்க்கிறான்.. பார்க்கிறான் [அல்லது]
பார்வைகள்



துப்பட்டாவை சரி செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த 1234 சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

'சே, என்ன மடத் தனம்?' என்று மனசுக்குள் தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி மானசீகமாக தலையில் நங்கென்று ஒரு குட்டும் வைத்தாள்.

காலையில் தான் அம்மா படித்துப் படித்து சொன்னாள். அவள் சொல்கிற மாதிரியே தான் நானும் ஏதாவது செய்து விடுகிறேன்!

92 எப்போதும் அப்படித் தான். காலையில் எழுந்ததும் பல் விளக்க மறந்தாலும், தன் மகளின் அருமையான ஒளி மயமான எதிர் காலத்துக்கு அறிவுரைகள் சொல்ல மட்டும் மறக்க மாட்டாள். எங்கே தான் மறைத்து வைத்திருப்பாளோ அத்தனை அறிவுரைகளையும்? ஒவ்வொன்றாக எடுத்து விடுவாள்.

ஆனால் 64 அப்படியெல்லாம் இல்லை. மகள் எப்போதும் அப்பா செல்லம் தான். 'சின்ன பொண்ணு! அப்படித் தான் இருப்பா. உன் மாதிரி அவ என்ன எருமை மாடா? இப்ப தான் கன்னுக் குட்டி!' என்று சொல்லி பகபகவென்று சிரிப்பார்.

'நீங்க தான் உங்க பொண்ணை மெச்சிக்கணும்!' என்று 92 கழுத்தை நொடித்துவிட்டு போவாள்.

அம்மா அப்படி எடுத்து எடுத்து சொன்னாலும் நான் ஏன் இப்படி மறந்து போகிறேன்? வயதாகி விட்டதோ எனக்கு? நினைத்து விட்டு க்ளுக்கென்று சிரித்தாள் 1234.

92இன் அடுத்த அறிவுரை ஞாபகத்துக்கு வந்தது. 'கண்ட கண்ட இடத்திலே நின்னுகிட்டு உனக்கு நீயே சிரிச்சுக்கறது - இதென்ன கெட்ட பழக்கம்?'

ஓ, அம்மா, நான் நின்னுகிட்டு சிரிக்கலை, நடந்துகிட்டே சிரிக்கிறேன்! நினைத்தவள் ஓவென்று வாய்விட்டே சிரித்து விட்டாளோ? பக்கத்து பஸ் ஸ்டாப்பில் நான்கு இளைஞர்கள் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.

அவர்கள் கண்களைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது 1234க்கு.
வேண்டாம்! இப்படியே காலேஜ் போனால் வகுப்பிலிருக்கும் 1180 உம், 1028 உம், அதாவது பரவாயில்லை.. அந்த லெக்சரர் 996உம் 'ஈ..' என்று இளித்து நொள்ளைப் பார்வை பார்ப்பார்கள். பேசாமல் வீட்டுக்கு திரும்பிப் போய் விடலாம். போய் துப்பட்டா அணிந்து கொண்டு திரும்ப வரலாம் என்று நினைத்தபடி பஸ்ஸைப் பிடிக்கக் கிளம்பினாள் 1234.

[இதென்ன 2100 ஆம் வருடத்துக்கான விஞ்ஞானக் கதையா என்றெல்லாம் கேட்க வேண்டாம். வேலியில் ஓடுகிற 121 ஐ எதற்கு வேட்டியில் விட்டுக் கொள்ள வேண்டும்? யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத வகையில் கதை எழுத நினைப்பவர்கள் இந்த உத்தியைக் கடைபிடிக்கலாம். இதிலும் ஏதாவது தவறு கண்டுபிடிக்கிறவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன் - அதற்கு காரணம், இந்தக் கதையை எழுத எனக்கு உதவிய எனது 'பேய்' எழுத்தாளர்கள் தான்!]

Monday, January 09, 2006

தக தக தக ... தக்க!

ப்பு சப்பேயில்லாத கேள்விகள் என்றாலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது தங்க வேட்டை.
[சன் டிவி, சனி ஞாயிறு இரவு 9 மணி]

தகதகவென்று நிஜமாகவே மின்னுகிற தேவதை மாதிரி ரம்யா கிருஷ்ணன். சேலையில் என்ன மாதிரி ஜரிகை, என்னென்ன வகை நகைகள் என்றெல்லாம் குட்டி லெக்சர் கொடுக்கும் ரம்யா தன் இளமை கட்டுக்கோப்பு ரகசியத்தை மட்டும் இன்னும் சொல்லவில்லை.

இந்த வாரம் யாராவது கவனித்தீர்களா? போட்டியாளர்கள் அறிமுகப் பகுதியில் பழைய 'கோடீஸ்வரன்' இசைத் துணுக்கை சேர்த்திருந்தார்கள்.

ரம்யா அப்போதைக்கப்போது வார்த்தைகளில் சிறிது திணறினாலும் அருமையாகவே நிகழ்ச்சியை எடுத்து செல்கிறார். 'அதுக்கும் மின்னாடி..' அவ்வப்போது தலைகாட்டுகிறது. (மின்னாடி - தூய தமிழ் வார்த்தை என்று யாரோ சொல்கிறாற்போல் கேட்கிறது!)


'ந்த வயசிலே இதெல்லாம் உனக்கு தேவையா?' என்று கிண்டல்களை எல்லாம் தூரப் போட்டு விட்டு ஒரு பாட்டி இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்ல வேண்டும். 'வயது முக்கியமில்லை சாதனை படைக்க' என்று எடுத்துச் சொன்னது நிகழ்ச்சி. பாட்டி அருமையாக ஒரு பாட்டு சுந்தராம்பாள் ஸ்டைலில் நடுங்கிக் கொண்டே பாடி ஒரு விநாடி கண்களில் அருவியைத் தேக்க வைத்தார். ரம்யா கிருஷ்ணனுக்கு திருஷ்டி வேறு கழித்து, ஆசி வழங்கினார். ஒரு தவறான விடையும் சொன்னார்!

மக்களை நன்றாக சென்றடைய வேண்டும் என்பது தான் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் என்பது நன்றாக தெரிகிறது. இரண்டு பேர் அழைக்கப் படுகிறார்கள். ஒருவர் கார்ட் தேர்ந்தெடுக்க, க்ளூ கார்ட் இன்னொருவருக்கு கொடுக்கப் படுகிறது. 'உதவி' என்று சொல்லும் போது மட்டும், விடை தெரிந்திருந்தால் இன்னொருவர் க்ளூ சொல்வார். அந்த க்ளூ கூட தவறாக சொல்லப் படும் போது அவசர அவசரமாக ரம்யா 'அது தவறு' என்று சொல்வதுமில்லாமல், அவரே சரியான க்ளூவைக் கொடுக்கிறார். நேயர் புதையலுக்கு இன்னும் மூன்று கிராம் தங்கம் கிடைப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள்.

மூன்றாவது ரவுண்ட் மட்டும் கொஞ்சம் குழப்பும் ரவுண்ட். இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்தைக் கூட்டும் இடம் இது தான் என்று சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஒரு நிமிடத்துக்குள் நேயர்களை எது சரியான விடை என்று ஊகிக்க விடாமல் காமிரா கோணங்கள் செய்து விடுகின்றன. நிகழ்ச்சியைக் காண்பவர்களுக்காக ஒரு பத்து விநாடிகள் பொருத்த வேண்டிய வார்த்தைகள் இருக்கும் அந்த பலகையைக் காண்பித்தால் நலம்.

இந்த ரவுண்டுக்காக மெனக்கெடும் கேள்வி தயாரிப்பாளருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

இதெல்லாம் சரி, தங்கம் கிடைத்து விட்டது என்பதற்காக இப்படியா குண்டக்க மண்டக்க என்று டான்ஸ் ஆட வேண்டும்?! 'வீல்ல்ல்ல்ல்ல்..' என்று பூதத்தையே நிஜமாக பார்த்த மாதிரி கத்தல் வேறு!

இந்த விளம்பர யுகத்தில் இதெல்லாம் தேவையே தானோ? இல்லாவிட்டால், இந்தப் பதிவு வந்திருக்குமா என்ன?!


சன் டிவி பாணியில் முடித்து விடவா?
மொத்தத்தில் தக தக தங்க வேட்டை ..

தக்க!

Friday, January 06, 2006

Happy நாய் Year!




வருகிற ஜனவரி 29 ஆம் தேதி நாய் வருடம் தொடங்குகிறதாம்! சுழற்சி முறையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்த நாய் வருடம் வருகிறது. 12 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கினத்தைக் குறிக்கிற விதத்தில் அமையும். அப்படி, 2006 ஆம் வருடம் நா.....ய் வ....ருடம்!

(சே, சன் டிவி பார்த்துகிட்டே எழுதிகிட்டிருக்கேன்!)

இந்த லூனார் காலண்டர் முறை சீனா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. [செய்தி: Hindu 05/01/2006]

சீனாவைச் சேர்ந்த ஒரு அலுவலகத்தில் நாய் வருடத்தில் பிறந்தவர்களை மட்டும் விண்ணப்பிக்கக் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கிறதாம்! அந்த வருடத்தில் பிறந்தவர்கள் மட்டும் சொன்னதைக் கேட்டு நடக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம். அந்த அலுவலகத்துக்கு அது மிக முக்கிய தேவை ஆகையால் 'நாய்' மனிதர்களை மட்டும் அழைத்திருக்கிறது!

நான் பணிபுரிந்த அலுவலகத்தில் சில சமயம் இதை விட அருமையான கூத்து நடந்தேறியிருக்கிறது.

யூனியன் பிரிவில் இருக்கும் ஒரு நபரை பதவி உயர்வு கொடுத்து சூப்பர்வைசர் ஆக மாற்ற நிர்வாகம் முடிவெடுக்கும். அந்த குறிப்பிட்ட நபரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அது முடிகிற காரியமா என்ன? அதே தகுதியைக் கொண்ட பத்து பதினைந்து நபர்கள் இலை எப்போது விழும் என்று நாய் (அட! இங்கேயும் நாய்!!) மாதிரி காத்திருப்பார்கள். அவர்களை ஓரம் கட்டுவது என்பது லேசு பட்ட விஷயமா?

நோட்டிஸ் போர்டில் ஒரு விளம்பரம் வந்தமரும்.

Imports பிரிவில் சூப்பர்வைசராக பணிபுரிய ஆள் தேவை. A1 பிரிவில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். (A2இல் இருக்கும் பத்து பேர் அவுட்!)

A1 பிரிவில் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் பணிபுரிந்தவராக இருந்தால் நலம். ( இப்போது மூன்று பேர் தகுதி பெறுகிறார்கள்)

ஆனால், நான்கு வருடங்களுக்கு மேல் பணி புரிந்திருக்கக் கூடாது! (அடி சக்கை, அந்த இரண்டு பேர் அவுட்!!!)

இப்படியாக விளம்பரம் தூள் கிளப்பும். நான் கூட அந்த மாதிரி விளம்பரங்களைப் பார்த்து விட்டு விளையாட்டாக சொல்வதுண்டு:

விண்ணப்பதாரர் பெயர் 'க' வில் தொடங்கி 'தி' இல் முடிய வேண்டும்.

இப்படி ஒரு கூடுதல் வரி இருந்து விட்டால் தொல்லையே கிடையாது இல்லையோ!

இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், சம்பந்தப் பட்ட இந்த விளம்பரத்தைப் பார்த்து வேண்டுமென்றே ஒருவர் விண்ணப்பித்தார். எழுத்து தேர்வு முடித்து, பாவம் நேர்முகத் தேர்வில் அவர் தேர்வு பெறவில்லை.

கொடுக்கப்பட்ட காரணம் -
தங்களுக்கு கூடுதல் தகுதி இருப்பதால் தேர்ந்தெடுக்க இயலவில்லை!

வள்..












எதற்காக இந்த புகைப்படம் இங்கே?!

Thursday, January 05, 2006

சென்னை 2007

புத்தாண்டை வரவேற்பதற்காக சிறப்பு பல்சுவை நிகழ்ச்சி ஒன்றை அறிவித்திருந்தது எமது அலுவலகம். ஒவ்வொரு பிரிவுக்கும் பதினைந்து நிமிட அவகாசம் என்றும் அருமையான நிகழ்ச்சி ஒன்றுக்கு பரிசு என்றும் சொல்லியிருந்தார்கள்.

நான் பணி புரியும் Motorola குழு சார்பாக என்ன நிகழ்ச்சியை அளிக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நான் எனது படைப்பைப் பற்றி சொல்லி, நன்றாக இருந்தால் ஓரங்க நாடகம் போல் வழங்கலாம் என்றேன்.

படித்த போதே எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க, அதையே வழங்குவது என்று முடிவும் செய்யப்பட்டது. தொலைபேசி குரலுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவர் குரலைப் பதிவு செய்தோம். மேடையில் ஒருவர் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு, அந்த கம்ப்யூட்டர் குரலுக்கு பதில் சொல்கிற மாதிரி காட்சியை அமைத்து.. மிக அருமையாக வந்தது நிகழ்ச்சி.

சென்னை 2007 என்று பெயரை மற்றும் மாற்றம் செய்தேன்.

நிரம்ப நாட்களுக்குப் பிறகு தமிழ்.. நாடகம்.. மேடை.. இளம் நடிகர்கள்.. பார்வையாளர்கள் என்று எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த நாடகம் அரங்கேறும் நாளை நான் இருந்து காண முடியவில்லை. வார இறுதியில் நான் பெங்களூர் பயணிக்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் பயணிக்க முடியாதாகையால், மிக வருத்தமாகத் தான் பெங்களூர் போனேன்.

திரும்ப வந்ததும் வராததுமாக நிகழ்ச்சி எப்படி வந்தது என்று கேட்க, மிக நன்றாக வந்தது என்று சொன்னார்கள். ஆனால்.. கூடவே இன்னொன்றும் சொன்னார்கள்.

ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் பகுதியிலிருந்து நிரம்ப கூச்சல் இருந்ததாம். எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் படபடவென கை தட்டல்களும், விசில்களும், உற்சாகக் கூக்குரல்களும் இருந்ததாம்! மேடையில் என்ன நடக்கிறது, என்ன வசனம் பேசப்படுகிறது என்று கண்டு கொள்ள முடியாத படி வெறித்தனமாக கத்திக் கொண்டிருந்ததாம் ஒரு குழு!

நல்ல வேளையாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, எங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்ததால், கொஞ்சம் அமைதி காத்தார்களாம்!

ஏன் இந்த மூர்க்கத்தனம்? கல்லூரி வளாகத்திலிருந்தே இந்தக் காட்டுக் கூச்சல் அநாகரீகம் ஆரம்பமாகி விடுகிறது. நான் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த போது, அனைத்துக் கல்லூரிகளுக்கும் இடையே நடக்கும் போட்டிகளின் போது, இந்த மாதிரி கண்ணராவி காட்சிகளைப் பார்த்து நொந்திருக்கிறேன்.

இந்த மூர்க்கத்தனம் புரிகிறவர்கள் மேடையேறி ஒரு இரண்டு நிமிடம் பேச முடியாதவர்கள் தான். தங்களால் எது இயலவில்லையோ அது மற்றவர்களால் கூட இயலாமல் போக வேண்டும் என்று குறுக்கு வழியில் நினைக்கிறவர்கள் இந்த காட்டுமிராண்டிகள்! அத்தகைய மனம் உள்ளவர்கள் ஏன் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும்? பேசாமல் டிவி முன் உட்கார்ந்து தனக்கு பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டியது தானே? வேண்டுமானால் அப்போது காட்டுக் கூச்சல் போட்டு தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே?!

அழகான இளம் செடிகள் எத்தனையோ தடங்கல்களைத் தாண்டி மேடையேறி தங்கள் வளர்ச்சியைக் காட்டத் துடிக்கின்றன. அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டாலும், வெந்நீர் ஊற்றி சிதைக்க வேண்டாமே!