Friday, January 28, 2005

ஒன்பது புராணம்

[ஒன்பதுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு - பாகம் 2]

கொஞ்சம் இருங்கள். ஒரு கோட் மாட்டிக் கொண்டு ஒரு தொப்பி வைத்துக் கொண்டு வந்து விடுகிறேன். கதை கட்டுரை கவிதை எழுதுவதை விட இந்த மாதிரி எழுதுவது கொஞ்சம் ஜாலியாக இருக்கிறது. :-))
- - - - - - - - - - - - - -
உங்க நண்பரிடம் பெரிய எண் ஒன்றை சொல்லச் சொல்லுங்கள். எத்தனை இலக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

உங்க நண்பர் சொன்ன எண்: 32564 என்று வைத்துக் கொள்வோமா?
அந்த எண்ணிலிருந்து 2ஐக் கழித்துக் கொள்ளுங்கள்.

32562

2 என்கிற எண்ணை முன் இணையுங்கள்.

232562

வானத்தைப் பார்த்து 'ரம்பா' என்று உரக்கக் கூறி, 'சொல் ஒரு எண்' என்று சொல்லி விட்டு, ஏதோ வானத்திலிருந்து பதில் வந்தது போல் ஒரு சின்ன காகிதம் எடுத்துக் கொண்டு இந்த எண்ணை எழுதி, நான்கு முறை மடித்து அதை நண்பரின் சட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்துங்கள். [நண்பியாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்யவும்!]

இப்போது நண்பரை இன்னொரு எண்ணை சொல்லச் சொல்லுங்கள்.
அவர் சொன்ன எண்: 48609

வானத்தைப் பார்த்து 'ஊர்வசி' என்று உரக்கக் கூறி, 'சொல் ஒரு எண்' என்று சொல்லி விட்டு, ஏதோ வானத்திலிருந்து பதில் வந்தது போல் நண்பர் சொன்ன எண்ணின் இலக்கம் ஒவ்வொன்றையும் 9 இல் இருந்து கழித்து, ஒரு எண் உருவாக்கி எழுதுங்கள்.

நீங்கள் உருவாக்கிய எண்: 51390

இப்போது நண்பரை இன்னொரு எண்ணை சொல்லச் சொல்லுங்கள்.

அவர் சொன்ன எண்: 32481

வானத்தைப் பார்த்து 'மேனகா' என்று உரக்கக் கூறி, 'சொல் ஒரு எண்' என்று சொல்லி விட்டு, ஏதோ வானத்திலிருந்து பதில் வந்தது போல் நண்பர் சொன்ன எண்ணின் இலக்கம் ஒவ்வொன்றையும் 9 இல் இருந்து கழித்து, ஒரு எண் உருவாக்கி எழுதுங்கள்.

நீங்கள் உருவாக்கிய எண்: 67518

இப்போது எல்லா எண்களையும் கூட்டுங்கள்:

32564
48609
51390
32481
67518
--------
232562

'என் உற்ற தோழி ரம்பா கொடுத்த எண்ணைக் கொடு நண்பா' என்று சொல்லுங்கள்.

நண்பர் நிச்சயம் விழிப்பார். அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து, துண்டு சீட்டை எடுத்து, பிரித்துக் காட்டுங்கள்.

Thursday, January 27, 2005

ஒன்பதுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு!

யோசிங்க வலைப் பதிவில் 9 என்கிற எண்ணின் முக்கியத்துவத்தைப் பார்த்து வந்ததும்,
கை பரபரக்கிறது என்பதால்
எனக்கு தெரிந்த பிணக்கு-ஆமணக்கு இங்கே:

உங்கள் நண்பரிடம் 1இல் இருந்து 9க்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். [நண்பர் தேர்ந்தெடுத்தது: 5 என்று கொள்க]

அவர் சொல்கிற எண்ணை 9ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.
[5 x 9 = 45]

12345679 [8 இல்லை!] என்கிற எண்ணை 45 ஆல் பெருக்க சொல்லுங்கள்.

விடையைப் பார்த்ததும் நண்பர் வியப்பார்!


Wednesday, January 26, 2005

'பெரிய' குயில்!

என் அபிமான பாடகி சித்ராவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

சித்ராவை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் உடன் ஒலிக்கும் பாடலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


Tuesday, January 25, 2005

ஹைஸ்ட்ரீட் - ஒரு ஞாயிற்றுக் கிழமை!

ண்டனுக்கு பெருமை சேர்க்கும் ஹைஸ்ட்ரீட்.

ஞாயிற்றுக்கிழமை-
மாலை நான்கு முப்பது.

சூரியன் கோபித்துக் கொண்டு கீழ் வானில்
மறைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின்
இரவு எட்டு மணியை நினைவூட்டும் இருள்
கவ்விக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

குளிர் எல்லா எலும்புகளிலும் புகுந்து
உறுத்திக் கொண்டிருக்க, நடக்க முடியாமல்
நடந்து கொண்டிருக்கிறேன்.

கடைகள் எல்லாம் பூட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்கள் மெல்ல தங்கள் தங்கள் வீடுகளுக்குள் பதுங்கிக்
கொள்ள விரைந்து கொண்டிருக்கின்றனர்.

நான் அங்கு போடப் பட்டிருந்த இருக்கை
ஒன்றில் அமர்கிறேன். ச்ச்சில்லென்று குளிர்
பாய்ந்து ஒரே விநாடியில் 'தொடை'
நடுங்கி ஆகி விடுகிறேன்.

அப்போது தான் அவரை கவனிக்கிறேன்.
குளிரிலிருந்து தப்பிக்க வைக்கும் அருமையான
உடையை அணிந்து கொண்டு டிப்-டாப்பாக நடந்து
வந்த அவர் -

அந்த பூட்டப் பட்ட கடையின் முன் ஒரு
போர்வையை விரித்து விட்டு அதன் மீது
அமர்ந்து ஆற அமர ஒரு சிகரெட்டைப் பற்ற
வைக்கிறார். என்னை நோக்கி அருமையான
புன்னகையை வழங்கி விட்டு, 'Happy New Year'
என்கிறார்.

இன்று 23ஆம் தேதி ஆயிற்றே என்று மனதில்
நினைத்துக் கொண்டாலும், 'Thank you, Same
to you' என்கிறேன்.

என்னை முடிக்க விடாமல், 'Can you give me
fifty pence please' என்கிறார்.

அவர் ஒரு பிச்சைக் காரர் என்பதே ஓரிரு விநாடிகள்
ஆன பிறகு தான் என் மரமண்டைக்கு உரைக்கிறது!

அதே மிஸ்டர் பிச்சை அங்கிருந்த டெலிபோன் பூத்தில்
நுழைந்து, நாணயங்கள் போட்டு, கிட்டத் தட்ட
பத்து நிமிடங்கள் யாருடனோ கலகலக்கப் பேசி விட்டு,
வெளியேறியது கூடுதல் செய்தி!

இன்னுமொருவர் செய்தது மேலும் வியக்க வைத்தது.
புகை பிடித்தபடி வந்து கொண்டிருந்த ஒரு
பெண்மணியை நெருங்கி, 'one cigarette please'
என்றார்!


பிச்சைக்காரர்களைப் பற்றி விகடனில் வெளியாகும்
துணுக்குகளைப் படிக்கும் போது 'ரொம்பத் தான்
வாருகிறார்கள்' என்று நினைப்பதுண்டு. [நானும்
ஓரிரண்டு துணுக்குகள் அனுப்பி வெளியாகி
இருக்கின்றன!! :-))]

எந்த நாட்டுக்குப் போனாலும் இதே கதை தான்
போலும்!


Monday, January 17, 2005

ஞாபகம் வருதே?!

எக்கச்சக்கமாக பாடல்கள் வந்தாயிற்று.

பழைய பாடலின் நினைப்பூட்டுதல் இல்லாமல்
புதுப் பாடல் அமைப்பது என்பது கொஞ்சம்
கடினம் தான். இசையமைப்பாளர்கள் இதைத் தவிர்க்க
ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். ஆனால்,
அப்படியும் தப்பி வந்து விடுகின்றன சில பாடல்கள்:

காதலர் தினம் படப்பாடல்
'என்ன விலை அழகே?'
பழைய
'தங்கப் பதக்கத்தின் மேலே..' பாடலை ஞாபகப் படுத்தியது.


பாய்ஸ் படப்பாடல்
எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா
எனக்கு நிரம்பவே பிடித்துப் போன பாடல்.

இதுவும் பழைய பாடலை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததோ
என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.


அட, ஆமாம்!
பால் போலே பதினாறு.. இந்த வரியைப் பாடி விட்டு,
பாசமலரின் இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள்..

மலர்ந்தும் மலராத...

கொஞ்சம் கிட்ட வருகிற மாதிரி இல்லை??