Friday, October 15, 2004

ராசா....

லண்டன்
காலை 6:45

ஒரு தடிமனான ஜெர்க்கினைப் போட்டுக் கொண்டு,
கையில் ஒரு குடை வைத்துக்கொண்டு
வாக்கிங் போவது ஒரு புதுமையான அனுபவம்.

குளிர் கொஞ்சம் படுத்துகிற,
இருள் விலக தயங்கிக் கொண்டிருந்த அதிகாலை!
சூரியன்இங்கு கொஞ்சம் சோம்பேறி தான். வருவதா வேண்டாமா
என்று முடிவெடுக்கவே ஏழு மணியாகி விடுகிறது!

அருமையான சாலைகள்.
விரைந்து கொண்டிருக்கிற எக்கச்சக்க கார்கள்.. கார்கள்.. கார்கள்..
அப்போதைக்கப்போது, புகையைக் கக்கிக் கொண்டு எதிர்ப்படும் காரிகைகள்.
ஒரு மணி நேர நடையை 'நடை கட்டி விட்டுத்' திரும்பும் போது..

அந்த பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன்.

'நான் breadக்கு மாறிட்டேனே!' அதுக்கு JAM வேண்டியிருந்தது!
கடையில் இருந்த பொருள்களில், அட.. காஞ்சிபுரம் கைக்குத்தல் அரிசி,

ரசப் பொடி.. இப்படியெல்லாம் தமிழ் எழுத்துகள் தெரிந்தன.
அப்போது தான், திடீரென்று அந்தப் பாடல் ஒலித்தது...

மன்மத ராசா, மன்மத ராசா!

ஒரு ஆட்டம் ஆடி விடலாமா என்று கூட யோசித்து விட்டேன்.
15 நாட்கள் கழித்து தமிழ் வார்த்தைகள் காதில் விழுகின்றன.

[அதுவும் முதல் வார்த்தையே மன்மத ராசா!]

இந்தப் பாட்டை சில நாட்களுக்கு முன் என் நண்பர்களிடம் விவாதத்தின் போது கிண்டலடித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது யோசிக்கையில்..
பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது!!


சிரித்துக் கொண்டே,
'சுபமூகா'

Thursday, October 07, 2004

சம்பவத்தை மாற்ற நான் ரெடியா?

உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள் ?

வில்லங்கமான கேள்வி. நான் என் தர்மப்பத்தினியின் கழுத்தில் தட்டுத் தடுமாறி மூன்று முடிச்சுகள்போட்ட அந்தத் தருணம் என்று நான் சொல்லி அகப்பட்டுக் கொள்வேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அப்படி சொன்னாலும் கூட, தட்டுத் தடுமாறாமல் முடிச்சுகள் போட அந்த சம்பவத்தை மாற்றுவேன் என்று மாற்றி விடுவேன்! இதே கேள்வியை என் 'வெகுமதி' இடம் கேட்டிருந்தால், 'சம்பவம் மாத்திரம் மாத்தணுமா? ஆளை மாத்த சான்ஸ் இல்லியா?' என்றிருப்பார்! அவரவருக்கு ஒரு சோகக் கதை!

ம்ம்.. எதை மாற்றலாம்? பிறந்த அந்தத் தருணத்தையே மாற்றியிருந்தால் இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் [இது எப்படி இருக்கு?!] பதில் சொல்ல வேண்டியிருக்காது!


கம்ப்யூட்டர் கனவுகள் பலிக்காமல் ஒரு Travel Agency இல் ஒரு சாதாரண தொழிலாளி ஆன அந்த நேரத்தை சொல்லலாமா? கிடைக்காத விஷயத்தை நினைத்துக் கொண்டு, கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை ஏன் நழுவ விடுவதுஎன்று அருமையான முடிவு எடுத்த தருணம் அல்லவா அது!

இலண்டனில் ஒரு அருமையான அலுவலகத்தில் இருந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு Telephone Operator ஆக என் பயணம் தொடங்கியது. தொடர்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த உழைப்பில் இன்று கணினி உலகில் உலாவிக் கொண்டிருக்கிறேன். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் இதே மாதிரி ஒரு காட்சிவரும். என் கண்கள் கலங்கிப் போகும்.

சம்பவங்களை எதற்கு நாம் மாற்ற ஆசைப் பட வேண்டும்? அது பாட்டுக்கும் அது நடக்கட்டும். அது நம்மை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்கட்டும்! நம் தொடர்ந்த விடா முயற்சி இருக்கிற வரை நமக்கு என்றும் நல்லதே நடக்கும். இது என் வாழ்வு எனக்களித்த அருமையான தீர்ப்பு!

சரி தானே அன்பர்களே!!

[தமிழோவியம் 07/10/2004]