Thursday, January 05, 2006

சென்னை 2007

புத்தாண்டை வரவேற்பதற்காக சிறப்பு பல்சுவை நிகழ்ச்சி ஒன்றை அறிவித்திருந்தது எமது அலுவலகம். ஒவ்வொரு பிரிவுக்கும் பதினைந்து நிமிட அவகாசம் என்றும் அருமையான நிகழ்ச்சி ஒன்றுக்கு பரிசு என்றும் சொல்லியிருந்தார்கள்.

நான் பணி புரியும் Motorola குழு சார்பாக என்ன நிகழ்ச்சியை அளிக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நான் எனது படைப்பைப் பற்றி சொல்லி, நன்றாக இருந்தால் ஓரங்க நாடகம் போல் வழங்கலாம் என்றேன்.

படித்த போதே எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க, அதையே வழங்குவது என்று முடிவும் செய்யப்பட்டது. தொலைபேசி குரலுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவர் குரலைப் பதிவு செய்தோம். மேடையில் ஒருவர் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு, அந்த கம்ப்யூட்டர் குரலுக்கு பதில் சொல்கிற மாதிரி காட்சியை அமைத்து.. மிக அருமையாக வந்தது நிகழ்ச்சி.

சென்னை 2007 என்று பெயரை மற்றும் மாற்றம் செய்தேன்.

நிரம்ப நாட்களுக்குப் பிறகு தமிழ்.. நாடகம்.. மேடை.. இளம் நடிகர்கள்.. பார்வையாளர்கள் என்று எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த நாடகம் அரங்கேறும் நாளை நான் இருந்து காண முடியவில்லை. வார இறுதியில் நான் பெங்களூர் பயணிக்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் பயணிக்க முடியாதாகையால், மிக வருத்தமாகத் தான் பெங்களூர் போனேன்.

திரும்ப வந்ததும் வராததுமாக நிகழ்ச்சி எப்படி வந்தது என்று கேட்க, மிக நன்றாக வந்தது என்று சொன்னார்கள். ஆனால்.. கூடவே இன்னொன்றும் சொன்னார்கள்.

ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் பகுதியிலிருந்து நிரம்ப கூச்சல் இருந்ததாம். எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் படபடவென கை தட்டல்களும், விசில்களும், உற்சாகக் கூக்குரல்களும் இருந்ததாம்! மேடையில் என்ன நடக்கிறது, என்ன வசனம் பேசப்படுகிறது என்று கண்டு கொள்ள முடியாத படி வெறித்தனமாக கத்திக் கொண்டிருந்ததாம் ஒரு குழு!

நல்ல வேளையாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, எங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்ததால், கொஞ்சம் அமைதி காத்தார்களாம்!

ஏன் இந்த மூர்க்கத்தனம்? கல்லூரி வளாகத்திலிருந்தே இந்தக் காட்டுக் கூச்சல் அநாகரீகம் ஆரம்பமாகி விடுகிறது. நான் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த போது, அனைத்துக் கல்லூரிகளுக்கும் இடையே நடக்கும் போட்டிகளின் போது, இந்த மாதிரி கண்ணராவி காட்சிகளைப் பார்த்து நொந்திருக்கிறேன்.

இந்த மூர்க்கத்தனம் புரிகிறவர்கள் மேடையேறி ஒரு இரண்டு நிமிடம் பேச முடியாதவர்கள் தான். தங்களால் எது இயலவில்லையோ அது மற்றவர்களால் கூட இயலாமல் போக வேண்டும் என்று குறுக்கு வழியில் நினைக்கிறவர்கள் இந்த காட்டுமிராண்டிகள்! அத்தகைய மனம் உள்ளவர்கள் ஏன் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும்? பேசாமல் டிவி முன் உட்கார்ந்து தனக்கு பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டியது தானே? வேண்டுமானால் அப்போது காட்டுக் கூச்சல் போட்டு தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே?!

அழகான இளம் செடிகள் எத்தனையோ தடங்கல்களைத் தாண்டி மேடையேறி தங்கள் வளர்ச்சியைக் காட்டத் துடிக்கின்றன. அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டாலும், வெந்நீர் ஊற்றி சிதைக்க வேண்டாமே!

0 பின்னூட்டங்கள்: