Monday, February 19, 2007

ஏலேலோ ஐலசா [1]

என் கேள்விக்கென்ன பதில்?
நமீசின்ஷ்ரேத்ரிஷா!
முதல் காதல் தோல்வி

எக்ஸ்ட்ரா தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

பெங்களூரில் சுமார் இரண்டாண்டு காலம் நாங்கள் நடத்தி வந்த புதுப்புனல் இதழின் கேள்வி-பதில் பகுதி நிரம்ப வரவேற்பைப் பெற்றிருந்தது. வலைப்பதிவுகளில் இந்த மாதிரி கேள்வி-பதில் ஆரம்பித்தால் என்ன என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் ஒரு கேள்வியை [!] முன் வைத்தார்கள். எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்கிற ஐயத்தில் பதில் சொல்ல சில விநாடிகள் யோசித்தேன்.

உறுப்பினர்கள் யோசிக்காமல் உடனே கேள்விகளைத் துண்டு சீட்டில் கிறுக்கிக் கொடுத்தனர். அவற்றில் சில கேள்விகளுக்கு என் பதில்களுடன் ஆரம்பித்து விட்டேன் - ஏலேலோ ஐலசா!

வலைப் பதிவுகளில் உங்களை மிகக் கவர்ந்த வலைப் பதிவு எது? [ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும்!]

[பாவிகளா எவ்வளவு நாளா என்னை மாட்டி விடணும்னு காத்திருக்கிறீர்கள்?!]
வலைப் பதிவுகளில் கவர்ந்த வலைப் பதிவுகள் ஏராளம். குழந்தை மாதிரி ஒன்றோடு எல்லாம் நிறுத்திக் கொள்ள முடியாது!
என்னை மிக மிக மிகக் கவர்ந்த வலைப் பதிவு: சுபமூகா பக்கங்கள்!

நாய், எலி, கரப்பான் பூச்சி எதற்கு பயப் படுவீர்கள்?

தெருவில் நடக்கும் போது நாய். கழிப்பறையில் கரப்பான் பூச்சி. இரவு தூங்கும் போது எலி![காலையில் முதல் வேலையாக சிகை அலங்காரக் கடைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபடி படுத்துக் கொண்டேன். காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்க்க தூக்கி வாரிப் போட்டது. கடைக்கு செல்லாமலேயே என் சிகை அலங்காரம் 'முடி'ந்து விட்டிருந்தது! எங்கள் வீட்டு எலி முடியைக் கூட விட்டு வைக்காது!]

உங்கள் முதல் காதல் தோல்வியைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

பச்சைக் கிளி போல் பச்சை கலர் தாவணி போட்டு சிக்கென்று இருந்தாள் அவள். அவளைப் பார்த்ததுமே ஒரு கிக்! பார்த்த இடம்: மருத்துவ மனை! மனசுக்குள்ளேயே அவளுடன் ஒரு நடனம் ஆடி, கடலோரம் வாங்கிய காற்று என்று ஒரு பாட்டும் பாடி.. எம்.ஜி.ஆர் பாணியில் கிழிந்த தாவணியைக் கொண்டு வந்து தாவணி சுற்றாத அவள் மார்பின் மீது அதைப் போர்த்தி விடாதது ஒன்று தான் பாக்கி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, முடியாமல், அவளை நோக்கி ஒரு கண் சிமிட்டினேன்! அவ்வளவு தான். "ஐயோ, இந்தப் பையன் என்னைப் பார்த்து கண்ணடிக்குது!" என்று உரக்கக் கத்தினாளே பார்க்க வேண்டும். பறந்து விட்டேன்! என் பதினோரு வயது ஆட்டோகிராப் இது!

உங்கள் காரில் உங்களுடன் உங்கள் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். காரில் இடம் இல்லை. போகும் வழியில் த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா அனைவரும் ஒரு சேர நின்று லிப்ட் கேட்டால் யாரை இறக்கி விட்டு விட்டு யாருக்கு லிப்ட் கொடுப்பீர்கள்?

த்ரிஷாவை எனக்குப் பிடிக்கும் என்பதை விட என் மனைவி, மகளுக்குப் பிடிக்கும் என்பதால், வேண்டுமானால் என்னையே இறக்கிவிட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள்.
அசின் - அவருக்கு லிப்ட் கொடுக்கவில்லை என்றால் it is a sin!
ஷ்ரேயா - இவருக்குக் கொடுக்கவில்லை என்றால் பெய்யும் 'மழை'யும் நின்று விடாதா?
நமீதா - யார் தான் கொடுக்க மாட்டார்கள்?! நான் கொடுக்கவில்லை எனில், கடவுளின் சாபம் 'நம் மீதா' இல்லையா சொல்லுங்கள்.

அது சரி, என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? குடும்பத்தினரில் ஒருவரை இறக்கிவிட்டு, யாரையாவது ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு நான் இறங்கி விட மாட்டேன். குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்!
நீங்களும் சுவாரசியமான கேள்விகளை அனுப்பலாம். பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

Thursday, February 15, 2007

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!

எழுத்தாளர் ராஜேஷ் குமார் எப்படி வீடு கட்டினார்?
இன்று ஓடுங்கள் - நாளை புன்னகை புரியுங்கள்!
மாற்றான் தோட்டத்து மாங்கனிக்குத் தான் அதீத சுவை!

இணைப்பு தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

புல்லில் பனித் துளி

துளி: 13

கைக்கு எட்டுகிற தூரத்தில் மாங்கனி இருந்தால் பறித்துத் தின்னும் போது அவ்வளவு சுவை இருக்காது. அது மிக உயரத்தில் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், மாற்றான் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் இருக்க வேண்டும். குறி வைத்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும் பழத்துக்கு மிக அருகாமையில் சென்று விட்டு, பழத்தை வீழ்த்தாமல் திரும்ப வேண்டும். ஐந்தாறு முறை விடாமல் முயற்சித்து வெற்றியில் முடிய வேண்டும். அப்போது கைகளில் விழுகிற கனிக்கு இருக்கும் சுவையே அலாதி!

அப்படித்தான் வாழ்க்கையின் அதி அற்புத கனிகள் எல்லாம் கைக்குள் விழாமல் வேடிக்கை காட்டுகின்றன. விடாமுயற்சியும் அடிக்க தோதான கற்களும் இருந்தால் போதும். முக்கியமாக 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்கிற வாக்கியம் மனதிற்குள் புகாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்தத் துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணிச் சில பேர் தான் அதி அற்புத உயரத்துக்கு வருகிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் விரைந்து செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடித் தொற்றிக் கொள்ள இயலாமல் கைவிட்டு விடுகிறார்கள். இன்னும் சிலர் கைப்பிடி கிடைக்கும் உன்னதத் தருணத்தில் ஓடும் வேகம் குறைத்து கீழே விழுந்து காயப் படுகிறார்கள். காயம் படுவது மட்டுமல்ல, திரும்ப ஓடி வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களால் இயலாமல் போய்விடுகிறது.

பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் சிலர் மென்னகை புரிகிறார்கள். அவர்கள் இந்த மாதிரி அடித்துப்பிடித்துக் கொண்டு எல்லாம் ஓடி வந்து ஏறவில்லை. நிதானமாக நடந்து வந்து பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது ஏறி, தங்களுக்கென்று ஒரு இருக்கையையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு பொறாமை வேண்டாம். அவர்களது திட்டமிடும் திறமை தான் அந்த இருக்கையை அவர்களுக்கு அளித்திருக்கிறது.

பேருந்துக்குள் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதிக் கொண்டு, காற்று புகாத இடைவெளியோடு நின்று, பேருந்தின் ஆட்டங்களுக்கு ஈடு கொடுத்துத் தள்ளாடிக் கொண்டிருப்பவர்களையும் பாருங்கள். அவர்கள் எத்தகைய இன்னல்களுக்கு ஆளானாலும் கூட, சரியான நேரத்துக்கு போக வேண்டிய இடத்தை அடையக்கூடிய வாய்ப்பை இழப்பதில்லை.

இது சுழற்சி முறையில் நடக்கிற கூத்து! நாளை இதே பேருந்தில் உங்களுக்கு அருமையான ஒரு இருக்கை கிடைக்கக் கூடும். இன்று உட்கார்ந்து கொண்டு உங்களைப் பார்த்து நகைத்த கண்ணியவான் நாளை பேருந்தைத் தவற விடக் கூட வாய்ப்பு இருக்கிறது. அல்லது, சட்டைமுழுக்கக் கசங்கி இடிபாடுகளில் நின்றபடி உங்களைப் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்!

இதை சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை அமிர்தம் தான்!

அருமையாக திட்டமிட்டு பேருந்தில் ஏறி தனக்கென்று இருக்கையையும் சம்பாதித்துக் கொள்ளும் பெருந்தகை, நாளை பேருந்தைத் தவற விடுவதாவது என்று வியக்க வேண்டாம். அது மிக சாதாரணமாக நடந்தேறி வரும் நிகழ்வு தான்.

சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது, "இப்போதெல்லாம் உங்களது படைப்புகளைக் காண முடிவதில்லையே? எழுதுவதில்லையா?" என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கதைகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. மிக நேர்த்தியான வார்த்தைப் பிரயோகங்களால் மிக அருமையாக ஈர்த்து விடுகிற கதைகள்! பழைய கள் என்றாலும் புதிய மொந்தையில் அதை மறைத்துக் கொடுக்கிறவிதம் தெரிந்தவர்கள் தானே நல்ல எழுத்தாளன் ஆக முடியும்?! அப்படி தூள் கிளப்புகிற பல எழுத்தாளர்களும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விடுவது ஏன்?

"முன்னே மாதிரி எழுத முடியவில்லை. குடும்பம் குழந்தைகள் என்று புதிய வட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட பிறகு நேரம் கிடைப்பதில்லை" என்று வருத்தப் பட்டுக் கொண்டார்.

இது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்கிற மாதிரியான முடிவு இல்லை. 'பழம் இனிக்கும்' என்கிற உண்மை மறையாமல் மாறாமல் மனதிற்குள் இருந்தாலும், ஒரு வித இயலாமையை நாமே நமக்குள் உருவாக்கிக் கொண்டு உழல்கிறோம். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரத்தை அள்ளிக் கொடுத்திருந்தாலும் கூட, ஒரு மணி நேரத்தை அதிலிருந்து திருடிக் கொள்ள ஆசைப்படுவதில்லை!

"வானம் தொட்டு விடும் உயரம் தான்" என்கிற தலைப்பில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் ஒரு தொடரை எழுதியிருந்தார். ஒவ்வொரு எழுத்தாளனும் தவறாமல் படிக்க வேண்டிய தொடர் அது. ஒவ்வொரு நாளும் புகைவண்டிப் பயணம் செய்தாக வேண்டிய வேலையை அவர் செய்து கொண்டிருந்த தருணம். நானாக இருந்தால், களைப்பில் எப்போது ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் என்று துடித்திருப்பேன். அவர் புகை வண்டியில் ஏறி அமர்ந்தவுடன், பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு, வெள்ளைத் தாளை எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்து விடுவாராம்! சக பயணிகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்களாம். அப்படி அவர் விடா முயற்சி செய்ததால் தான் அவரால் நிறையஎழுத முடிந்தது. கதை எழுதி வந்த பணத்தை வைத்து தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள முடிந்தது.

அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.

நம்மால் முடியும் என்கிற சந்தேகமற்ற நம்பிக்கை - அது முக்கியம். அது இருந்தால் தான் கல் கிடைக்கும் போது இலக்கு பிசகாமல் உயர இருக்கிற மாங்கனியை வீழ்த்தி கைக்குள் கொண்டு வர முடியும்!

நன்றி: http://tamil.sify.com

Monday, February 12, 2007

தேன்கூட்டை உருவாக்கிய தேனி இன்று இல்லை!

கல்யாண் மரணச் செய்தி அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுக்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

வருத்தத்துடன்,
சுபமூகா

Tuesday, February 06, 2007

திரைப் பட வசனகர்த்தாக்கள் / எழுத்தாளர்கள் கவனிக்க




"ரயில்வே கேட் போட்டிருந்தா பஸ்ஸா இருந்தாலும் சரி, காரா இருந்தாலும் சரி, ரயில் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணித் தான் தீரணும். ஆனா, இந்த ரயில் இருக்கே, எந்த பஸ்ஸுக்காகவும் காருக்காகவும் வெயிட் பண்ண வேண்டியதில்லைம்மா.
வெயிட் பண்ண வேண்டியதில்லை!"


இப்படி எல்லாம் வசனம் எழுத வேண்டாம் என்று சொல்ல இந்தப் பதிவு!

[தலைப்பு உபயம் / படம் காட்ட ஐடியா : சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]

Tuesday, January 30, 2007

உண்மையில் அது போலி

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு - இன்னொரு கிளையின் அமோக ஆரம்பம்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
நான் அவனில்லை!
இந்து முஸ்லீம் கிறித்தவர்கள் - இவர்களுக்கும் எனக்கும் இருக்கும் தூரம்!

தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு


வணக்கம் நண்பரே! [நண்பியே! ;-) ]

நான் அதிகமாக யாருக்கும் பின்னூட்டம் இடுவது கிடையாது. 'அட!' என்று என் மனதைக் கவரும் பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் இடுவேன். [அதுவும் வருடத்துக்கு ஒன்று இரண்டு!]

இந்து முஸ்லீம் கிறித்தவர் என்று வார்த்தை கண்ணில் பட்டால் மேற்கொண்டு படிக்கக் கூட மாட்டேன்!

கெட்ட வார்த்தைகள் - 'அப்படீன்னா?' என்று கேட்கக் கூடிய அபூர்வப் பிறவி. அந்த வார்த்தைகளுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்.

சரி, சரி, எதுக்கு இவ்வளவு முன்னோட்டம்?

உங்கள் பதிவுகளில் இனி என் பெயரில் ஏதாகிலும் பின்னூட்டம் வந்தால் அதில் எக்கச்சக்கச்சக்க கெட்ட வார்த்தைகள் இருந்தால் தயவு செய்து வெளியிட வேண்டாம். அது நானில்லை, மண்டபத்தில் யாரோ வேலை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிக!

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவுக்கு போட்டியாக 'சுபமூகா' என்கிற பெயருக்கு விளம்பரம் கொடுக்கும் அந்தப் புண்ணியவான் நீடூழி வாழ்க! ;-)

Thursday, January 25, 2007

ரகசிய மெயில்

ரகசியமாய் ஒரு ஈமெயில் - அனுப்ப முடியுமா?


டோண்டு ராகவனுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி?


தேன்கூட்டில் தமிழ் மணத்தில் பதிவுகள் மாயம்!

[தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]

கசியமாய்.. ரகசியமாய்..

ஏதாவது செய்தி அனுப்ப வேண்டுமா? வந்து விட்டது புதிய ஈமெயில் வசதி!


நீங்கள் அனுப்ப வேண்டிய ரகசிய செய்தியை தட்டச்சி ஈமெயில் முகவரி கொடுத்து அனுப்பு என்று சொன்னால் போதும். பெறுநர் அந்த செய்தியைப் படித்து முடித்ததும் அந்த ஈமெயில் வந்த சுவடு தெரியாமல் அழிக்கப் பட்டு விடும். அங்கு மாத்திரம் அல்ல, அனுப்புநரிடம் கூட அந்த ஈமெயில் இருக்காது.


மக்கள் என்னென்ன மாதிரி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!!


நினைத்துப் பாருங்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் என்னென்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் வரக் கூடும்?!!

  1. அன்பு காதலன் தான் தேர்ந்தெடுத்த புதிய காதலிக்கு [ ;-) ] காதல் கடிதம் எழுதி தைரியமாக அவளிடம் கொடுக்கிறான். அவள் கோபமாக வாங்கி படிக்கிறாள். படித்து முடிக்கும் போது அவள் கையில் கடிதம் இருக்காது!
  2. அலுவலகத்தில் ஊதிய உயர்வு கடிதம் கைக்கு கிடைக்கிறது. தொகையைப் பார்த்து விட்டு, இப்போது வாங்கும் சம்பளத்தை விட இது எவ்வளவு அதிகம் என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொண்டே கண்களை மூடி ஒரு விநாடி சிந்தித்து விட்டு கண்களைத் திறப்பதற்குள் கடிதம் மாயம்!
  3. வங்கியில் காசோலை கொடுத்து டோக்கன் வாங்கி, டோக்கன் கொடுத்து பணம் வாங்கி எண்ணி முடிக்கும் போது, காசோலை காணலை [காணவில்லை]!
  4. தமிழ் மணமோ, தேன் கூடோ எங்கோ ஓரிடத்தில் இந்து மதம், இந்த மதம், அந்த மதம் என்று ஒரு பதிவைப் படித்து முடித்ததும் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்ய்க்க்க்க்.. பதிவு எங்கோ ஓடி ஒளி[ழி]ந்து விட்டது.
  5. டோண்டு ராகவன் பதிவுக்கு தைரியமாக பின்னூட்டம் இடலாம். வாசகர் பின்னூட்டத்தைப் படித்து முடித்ததும் அது மறைந்து விடும்!