Tuesday, September 19, 2006



ஒரு நிமிடம் யோசித்தேன்.
உதவி செய்வதில் என்ன தவறு?
அதுவும் ஒரு பெண்ணுக்கு!!

மேலும்..

Monday, September 18, 2006

தலை மேல் பலன்

புல்லில் பனித்துளி
துளி: 5

ரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்.

இடி விழுந்திருந்தால் கூட அவ்வளவாக குழம்பிப் போய் இருக்க மாட்டேன்.

விழுந்தது பல்லி!

எங்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் பல்லிகள் இருந்தாலும் கூட, கழிப்பிடத்தில் எக்கச்சக்கமாக குவிந்திருக்கும். எப்போதும் உள்ளே நுழையும் போதே, இடது பக்க, வலது பக்க சுவர்களில் பலமாக தட்டி விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. எதற்கு வம்பு? அது எங்காவது விழுந்து வைக்கும். அப்புறம் பஞ்சாங்கத்தை எடுத்து அதற்கு பலன் பார்க்க வேண்டியிருக்கும்.

பலன் பார்க்கிற வரைக்கும் அம்மா விட மாட்டார்கள். அது நல்ல பலனாக இருந்து விட்டால் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் அதற்கு தலை மீது கை வைத்து உட்கார்ந்து விடுவார்கள். கோபிச்செட்டிப் பாளையம் பக்கம் இருக்கும் ஒரு கோவிலுக்கு நேர்ந்து கொண்டு ஒரு இருபத்தைந்து காசு மஞ்சள் துணியில் கட்டி வைத்து விடுவார்கள்.

காலில் விழுந்தது என்றால் நோண்டி நோண்டி கேள்வி கேட்பார்கள். வலது காலா இடது காலா என்று அடுத்த கேள்வி. வலது கால் என்றால் முழங்காலுக்கு மேலா இல்லை கீழா என்பார்கள். 'போமா நீ' என்று அலுத்துக் கொண்டால், பலன் சரியானதாக இருக்க வேண்டும் இல்லையா என்று கடிந்து கொள்வார்கள்.

இந்த குழப்பங்களே வேண்டாம் என்று நான் அந்த முடிவுக்கு வந்தேன். கழிப்பறைக்குள் நுழையும் முன்னர் ஏதாவது பல்லி கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். ஏதாவது இளைப்பாறிக் கொண்டிருந்தால் அதன் பக்கத்தில் தட்டி விரட்டப் பார்ப்பேன். சில பல்லிகள் உடனே போய் விடும். சில 'அட போடா' என்கிற மாதிரி கொஞ்ச தூரம் நகர்ந்து விட்டு அங்கேயே 'அக்கடா' என்று இருக்கும். அதை விரட்டத் தட்டித் தட்டி, பல்லி போய் விடும். ஆனால் 'வந்து கொண்டிருந்தது'
நின்று போய் விடும்!

ஒரு நாள் வீறு கொண்டு எழுந்தேன். இருக்கிற ஒவ்வொரு பல்லியாகத் தேடி விளக்குமாற்றால் தள்ளித் தள்ளி வெளியேற்றினேன். அம்மா வீட்டில் இல்லை. ஒரு பல்லி கீழே விழும் போது, அதன் வால் துண்டிக்கப் பட்டு விட, அந்த வால் மட்டும் தனியே துடித்துத் துடித்து அடங்கிப் போனது. அதைப் பார்க்க கொஞ்சம் மனசு என்னவோ செய்தது. அடுத்த பிறப்பில் தப்பித் தவறி கூட பல்லியாகப் பிறந்து விடக்கூடாது என்று கடவுளிடம் சிறப்பு வேண்டுதல் செய்து கொண்டேன். ஏனெனில், இந்த பல்லி நிச்சயம் மனிதனாகப் பிறந்து பழி தீர்க்க வாய்ப்பிருக்கிறது.

மாலை அம்மா கண்டு பிடித்து விட்டார்கள். ஒரு பல்லி கூட இல்லையே என்று துருவித் துருவிக் கேட்க ஒப்புக் கொண்டு விட்டேன். அம்மா கூட அம்மம்மாவும் [பாட்டி!] அய்யய்யய்யய்யோ... என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். 'பல்லியை யாராவது வீட்டை விட்டு தள்ளுவார்களோ, அதுவும் விளக்குமாற்றால்?' என்று கடுங் கோபத்தில் திட்டினார்கள். உடனே அவசர அவசரமாக குளித்து விட்டு வந்து, நனைந்த உடையுடனேயே பூஜையறைக்குள் நுழைந்து, மஞ்சள் துணி எடுத்து இரண்டு இருபத்தைந்து காசுகளை முடிந்து வைத்தார்கள். என்னை மன்னித்து விடும் படி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். கழிப்பறையில் திரும்ப பல்லிகள் அதிகரித்து விட்டன. நான் வெளியே அனுப்பிய பல்லிகள் தான் திரும்ப வந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அங்கிருந்த ஒரு பல்லிக்கு வால் இல்லை! அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பக் பக் என்றது.

என் நண்பன் ஒருவன் மயிலிறகு இருந்தால் பல்லி பக்கம் கூட வராது என்றான். எல்லோரும் நோட்டு புத்தகத்தில் மயிலிறகு வைத்து குட்டி போடுகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, நான் மயிலிறகை கழிப்பறையில் ஒரு இருட்டு சந்தில் மறைத்து வைத்திருந்தேன். பல்லி ஒன்று கூட குறையவில்லை. மாறாக ஒரு பல்லி அந்த மயிலிறகு மேலேயே படுத்திருந்ததைக் காண முடிந்தது.

வருடங்கள் உருண்டோடி விட்டன. ஊர் விட்டு ஊர் வந்து திருமணம் முடித்து புதிய வீட்டுக்கு வந்தாயிற்று. வீட்டில் அங்கே இங்கே என சில பல்லிகள் இருந்தன. பல்லிகள் குறைவாக இருக்கும் போதே விரட்டி விட்டால் நல்லது என்று தோன்றியது. மனைவியிடம் கேட்டேன். 'பாவங்க, அது பாட்டுக்கும் இருந்துட்டுப் போகட்டும்!' என்றாள்.

நான் கழிப்பறைக்குள் நுழையாமல் உள்ளே ஏதாவது பல்லிகள் தெரிகிறதா என்று உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'என்ன சரியா தண்ணி ஊத்தலையா?' என்று பின்னால் இருந்து மனைவியின் குரல். 'இல்லை, எனக்கு பல்லி என்றால் ஒருவித அலர்ஜி!' என்றேன். இடது பக்க, வலது பக்க சுவர்களில் தட்டி விட்டு உள்ளே நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

ஒரு முறை என் மனைவியும் அவளது நண்பியும் பேசிக் கொண்டிருந்தது காதில் லேசாக விழுந்தது.

'என்னது, அப்படி சத்தம்? டொப் டொப்னு யாரோ சுவத்துலே அடிக்கிற மாதிரி?'
'என்னோட கணவர் தான். டாய்லெட்லே இருக்கார். அவருக்கு அந்த மாதிரி தட்டினா தான் வரும்!'

சிலருக்கு சிகரெட், சிலருக்கு பீடி, எனக்கு இப்படி என்று அந்தத் தோழி நினைத்திருக்கக் கூடும். அன்று அவர் வீட்டை விட்டுப் போகும் வரை நான் கழிப்பறையை விட்டு வெளியே வரவில்லை!

நான் எதை நினைத்து பயந்திருந்தேனோ அது நடந்தே விட்டது. பல்லி ஒன்று சரியாக என் தலையில் விழுந்தே விட்டது. வேறு எந்த பாகமும் அதன் கண்களில் விழவில்லையா? சரியாக தலையிலா விழ வேண்டும்?

ஏற்கனவே நான் பஞ்சாங்கத்தில் எக்கச்சக்க தடவை பார்த்திருந்ததால் அது மனப்பாடமாகவே ஆகி விட்டிருந்தது. அதுவும் தலையில் விழுந்தால் மரணம் என்பது நன்றாக ஞாபகம் இருந்தது.

இருந்தாலும் மனது கேட்கவில்லை. 'அப்படியே' கழிவறையிலிருந்து வெளியேறி, வேகவேகமாக அறைக்கு வந்து, பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து, பல்லி விழுந்தால் பலன்கள் பக்கத்தைப் புரட்டினேன். ஆமாம், மரணம் தான்! கை கால்கள் செயலிழந்தது போல் தோன்ற, சட்டென்று மூச்சு விடவே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

'என்னங்க..'

சட்டென்று பஞ்சாங்கத்தை பரண் மீது எறிந்தேன். கணவனின் மரணத்தை எந்தப் பெண் தான் சகித்துக் கொள்வாள்? அவளுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருப்பதே நல்லது என்று முடிவெடுத்தேன். அறைக்குள் நுழைந்த அவளைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தேன்.

'டாய்லெட்டுக்கு போனா தண்ணி கூட ஊத்தாம வர்றீங்க. ஏங்க இப்படி பண்றீங்க?' என்றாள்.

தண்ணி கூட ஊத்தாம என்றவுடன் தான் அது ஞாபகத்துக்கு வந்தது. 'ஃபோன் அடிச்சதுன்னு வந்தேன். அவசரத்துலே கவனிக்கலை, சாரிம்மா!' என்று சொல்லி விட்டு காலை அகலப் போட்டு நடந்தேன்.

'இதென்ன ஸ்டைல்?' என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

டாய்லெட்டுக்குள் நுழைந்ததும் திரும்ப மரணபயம் மனதில் வந்தமர்ந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அந்த பல்லி கண்ணில் படுகிறதா என்று தேடிப் பார்த்தேன். வலது பக்க சுவரின் மீது தான் இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. 'இன்னைக்கு நீ செத்தே!' என்று சொல்கிற மாதிரி தோன்றியது.

இறந்தவுடன் என்ன ஆகும்? சட்டென்று ஒரு இருட்டு குகைக்குள் அதள பாதாளத்தில் விழுகிற மாதிரி தோன்றுமோ? பிடித்துக் கொள்வதற்குக் கையில் எதுவும் கிடைக்காமல் கீழே.. கீழே என்று கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்க.. எப்போது சித்ரகுப்தன் எதிரே வருவார்? நான் செய்த குற்றங்கள் எல்லாம் அவருடைய கம்ப்யூட்டரில் இருக்கும். 'கணக்கிடு' பொத்தானைத் தட்ட எல்லா குற்றங்களுக்கும் நான் செய்த சில நல்ல காரியங்களுக்கும் மதிப்பீடு செய்து சொர்க்கமா இல்லை நரகமா என்று தேர்ந்தெடுத்து அங்கிருக்கும் ப்ரிண்ட்டரில் ப்ரிண்ட் செய்து கொடுத்து விடும். குற்றங்கள் பகுதியில் 'ஒரு பல்லியின் வாலைத் துண்டித்து விட்டான்' என்று நிச்சயம் இருக்கும்!

'என்னங்க? இன்னும் வரலையா? ரெண்டாவது ஆட்டமா?' என்று வெளியே மனைவி 'க்ளுக்' என சிரிக்க, 'சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

*** *** ***

அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக மேனேஜர் என்னைத் தேடி வந்தார்.

'அந்த மன்த்லி ரிப்போர்ட்..' என்று இழுத்தார்.

'எஸ் சார், மதியத்துக்குள்ளே ரெடி பண்ணித் தந்திடுறேன்!' என்றேன். 'மதியம் வரைக்கும் நீ இருந்தா' என்று மனது சொன்ன மாதிரி இருந்தது.

'அடுத்த மாசத்தில் இருந்து கரெக்டா நான்காம் தேதிக்குள்ளே இந்த ரிப்போர்ட் ரெடியா இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. ஓகே?' என்றார்.

'அடுத்த மாசம் நான் இருந்தாத் தானே?' என்றேன். நான் கொஞ்சம் உரக்க சொல்லி விட்டேனோ?
'வாட்?' என்றார். 'உள்ளே வாங்க' என்று சொல்லி அறையில் புகுந்து கொண்டார்.

நான் உள்ளே நுழையக் காத்திருந்தவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்து, 'உங்க ஆதங்கம் புரியுது. நான் உங்களுக்காக கிட்டத்தட்ட சண்டையே போட்டிருக்கிறேன். உங்களை ப்ரொமோட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு மதியம் உங்களுக்கு லெட்டர் கிடைக்கும். ஆர் யூ ஹாப்பி?' என்று சொல்லி கையைப் பிடித்து குலுக்கினார். 'அணைந்து போகும் மெழுகுத் திரி தான் நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது.


*** *** ***

மதியம் மூர்த்தி என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்தமர்ந்து கொண்டான்.

'எனி ப்ராப்ளம்? வீட்டிலே ஏதாவது சண்டையா? காலையில் இருந்து ஒரு மாதிரியே இருக்கியே?' என்றான்.

'சரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்................... சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்' வரைக்கும் சொல்லி முடித்தேன். 'அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக..... நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது' மாத்திரம் சொல்லவில்லை!

'இதையெல்லாம் நீ நம்புறியா என்ன?' என்றான் மூர்த்தி. மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
'எனி ஹவ், உன் தலையில் பல்லி விழுந்திருக்கு. பார்க்கலாம், உனக்கு ஏதாவது ஆகுதா இல்லையான்னு. இப்ப தெரிஞ்சு போயிடும். பல்லி விழுந்தால் பலன்கள் உண்மையா இல்லையான்னு!' என்று சொல்லி விட்டுப் போனான்.
அடப் பாவி!

*** *** ***


மாலை நான் கொடுத்த பதவி உயர்வு கடிதத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் நடனமே ஆடி விட்டாள் மனைவி. பட்ஜெட்டில் விழுந்த துண்டுகள் இனி இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னாள். 'இன்னைக்கு படத்துக்குப் போறோம். படம் முடிச்சுட்டு அப்படியே ஹோட்டலுக்கு போறோம்! ஓகே?' என்றாள் உரத்த குரலில்.

'நீ பார்க்கிற கடைசிப் படம்!' என்று மனசுக்குள் இருந்து பல்லி சொன்னது.

படம் எனக்கு ரொம்ப போரடித்தது. ஹோட்டலில் எதைப் பார்த்தாலும் வாந்தி வருகிற மாதிரி தோன்றியது. 'சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்!' என்றேன். 'ஏங்க, உடம்பு சரியில்லையா? வரும் போதே ஒரு மாதிரி இருந்தீங்க. ரொம்ப வேலையா? சொல்லியிருந்தா இன்னொரு நாள் படத்துக்கு வந்திருக்கலாம்!' என்றாள். இந்த அழகான அன்பான மனைவியை விட்டு இன்று நான் பிரியப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டேன்.

படுக்கையில் விழுந்ததும் உறங்கிப் போனேன். தலை மேல் மிருதுவான கரம் அமிர்தாஞ்சன் தடவியது. சொர்க்கம் என்று தோன்றியது. அப்படி என்றால் நான் நரகத்துக்கு வரவில்லை என்று சொல்லிக் கொண்டேன்.

திரைப் படம் ஓடிக் கொண்டிருக்க 'எனக்கு படம் பிடிக்கவில்லை' என்று எழுந்து நடக்க, சில்க் ஸ்மிதா நடனமாடிக் கொண்டு எதிர்க்க வர, 'ஓ, நீங்களும் சொர்க்கமா?' என்று நான் சொல்ல, படம் முடிந்து லைட் போட்டு விட்டார்கள். கண்கள் கூச எழுந்தேன். சூரிய வெளிச்சம் அறை முழுக்க ஜம்மென்று பரவியிருந்தது.

'இன்னைக்கு வேணா ஆபீசுக்கு லீவ் போட்டுடுங்க.' மனைவி சொல்ல மறுத்து விட்டு எழுந்தேன்.

கழிப்பறையில் நுழையும் முன் இடது பக்க, வலது பக்க சுவரை நான் இன்று ஏனோ தட்டவில்லை.

நன்றி: http://tamil.sify.com

Wednesday, September 13, 2006

உப்பு ஏரி நகரத்திலே...

புல்லில் பனித் துளி

துளி: 4

கடந்த வாரம் கண்ட (கண்ட) கனவுகளில் அமெரிக்கக் கனவைப் பற்றி எழுதி விட்டு கண்களை மூடித் திறப்பதற்குள் அமெரிக்காவுக்கு வர வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் பற்றி இப்போது கனவு காணலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த வாரக் கட்டுரையை அமெரிக்காவின் அதி அற்புத, அதி நவீன, அதி அழகு, அதி.. அதி.. அதிகமாகக் கையைக் கடிக்கும் தங்குமிடத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வந்த இரண்டு நாட்களுக்குள் மனைவி, மகள் மீது அன்பு கூடி இருக்கிறது. 'செலவு பற்றி யோசிக்க வேண்டாம். இன்னும் பேசு!' என்று சொல்லித் திரும்பத் திரும்ப அதே 'எப்படி இருக்கிறாய்?' 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'

என்னவோ ஒரு இருபது நாட்கள் ஓடிப் போனது போல் தடுமாற்றம். புரிந்து கொள்ளவே முடியாத இயற்கை இங்கும் விளையாட்டைக் காண்பிக்கிறது. இரவு ஒன்பது மணியானாலும் சூரியன் மறையாமல் அடம் பிடிக்கிறது.

'டிபன் சாப்பிட்டாச்சா?' என்று மனைவி கேட்க, 'இங்கே ராத்திரி. சாப்பாடே ஆயிடுச்சி!' என்று சொல்ல, 'ஐயோ, மறந்தே போயிடுது!' என்று சின்னச் சின்னக் குழப்பங்கள்.

சான்ஃப்ரான்சிஸ்கோ விமான நிலையத்தில் சோதனை செய்யும் பகுதியில், போட்டிருக்கும் ஜெர்க்கினைக் கழற்ற சொன்னார்கள். கழற்றி அதை கன்வேயரில் போட்டேன். 'செல் ஃபோன்?' என்றார்கள். எடுத்து அதையும் வைத்தேன். 'பெல்ட்டைக் கழற்றுங்கள்' என்றார்கள். அடுத்து பேண்ட்டோ என்று யோசித்துக் கொண்டே அதையும் கழற்றி வைத்தேன். 'ஷூவைக் கழற்றுங்கள்' என்றார்கள். 'ஷூ??' என்று ஒரு முறைக்கு இருமுறை நான் கேட்க, 'ஆமாம்' என்று ஒரு முறைக்கு இரு முறை அவரும் கூறி, 'நாம் அருமையான அமெரிக்க தேசத்தில் இருக்கிறோம்!' என்று சொல்லிச் சிரித்தார். திருப்பதி கோவிலுக்குள் போகிற மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்!

சால்ட் லேக் சிடி விமான நிலையத்தில் இருந்து காரில் முப்பது நிமிடப் பயணம். கார் வழுக்கிக் கொண்டு போகிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான பிரதேசம். அருமையான சாலைகள். ஒவ்வொரு சாலையிலும் ஆங்காங்கே பிரிந்து போகும் கிளை சாலைகள். எங்கு பார்த்தாலும் விநாடிக்கு ஒரு தடவை நம்மை கடக்கும் கார்கள். கார்கள். கார்கள்! மிகக் குறைந்த பேர் தான் பேருந்துக்காகக் காத்திருப்பதைக் காண முடிகிறது. நான் அலுவலகத்துக்கு செல்கிற குளிரூட்டப் பட்ட பேருந்தில் மொத்தம் பத்து பேர் தான் இருக்கிறார்கள். மிகச் சிறிய ஊர் என்று ஒதுக்கி வைக்கப் படாமல் எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் மக்களைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது. எல்லாம் இருந்தும் என்னவோ ஒன்று குறைவது போல் தான் எனக்குத் தோன்றுகிறது. உயிரில்லாத வாழ்க்கை! ஒருவேளை, எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதோ? அது தெரியவில்லை!

ஊருக்கு வந்து சேர்ந்த உடனேயே எக்கச்சக்க அறிவுரைகள் கொடுக்கப் பட்டு விட்டன. 'இரவு சூரியன் இருக்கிறது என்பதற்காக ஒன்பது மணிக்கு வெளியே போக வேண்டாம். அதுவும் தனியாக செல்வது மிக மிக ஆபத்து. வழிப்பறிக் கொள்ளைகள் அதிகம் நடக்கும் ஊர். கையில் பத்து டாலருக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டாம். ஜாக்கிரதை' என்று நண்பர் எச்சரிக்கை செய்து விட்டு கொஞ்ச தூரம் நடந்தவர் நின்று, திரும்பி வந்து, 'அப்படி யாராவது வழி மறித்துக் கேட்டால், எதுவும் பேசாமல் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ஒரு டாலருக்காகக் கூட கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்!' என்று டய்ய்ய்ங்ங்ங்க்க்க்க்க்.... என்று இசை சேர்க்காத குறையாக வசனம் உதிர்த்து விட்டுப் போனார்.

நன்றி: http://tamil.sify.com

Tuesday, September 12, 2006

இரண்டு மணி நேரத் திட்டங்கள்


எஸ்-2 பெட்டியில் ஏறி, பக்கத்து பயணியைப் பார்த்து விட்டு, தன் கடிகாரத்தையும் பார்த்து விட்டு, 'எட்டு மணிக்கு ஃப்ளைட்!" என்றிருக்கிறார்.

"நீங்க போன மாதிரி தான்!" என்று அந்த பக்கத்து சீட்டு வழுக்கைத் தலை ஆசாமி சொல்லி விட, மீசையை முறுக்கிக் கொண்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார்.


மேலும்..

Thursday, September 07, 2006

ஜி போஸ்ட் செய்த மாயம்!

ஜி போஸ்ட் கௌதம் ஒரு பதிவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் 124 பின்னூட்டங்களைப் பெற்று அசத்தியிருக்கிறார். வாழ்த்துகள்!

இந்த மாதிரி போட்டி கீட்டி என்று சொன்னால் தான் நம் மக்கள் பின்னூட்டப் பெட்டி பக்கம் எட்டிப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது ;-)

உண்மையாகவே எல்லோரும் அசத்தியிருந்தார்கள்.

நாவல் எழுதுவது எளிது. ஒரு சிறுகதை எழுதுவது கொஞ்சம் கடினம். நான்கு வரிகளுக்குள் ஒரு சிரிப்புத் துணுக்கு எழுதுவது மிக மிகக் கடினம். அப்படியானால் ஒரு வரிக்குள் ஒரு கதை/கவிதை சொல்வது என்பது எவ்வளவு கடினம் என்பதை சொல்லத் தேவையில்லை.

என்னைக் கவர்ந்த சில வரிகள்..


நிலவு நண்பன்
எந்த திருவள்ளுவனின் படைப்பு நீ?

மதுமிதா
கேமராவுக்கே போதையா?

luckylook
பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்.....


துளசி கோபால்
ஐய்யோ ரெண்டு


Vignesh
பார்வை ஒன்றே போதுமே !!!!

luckylook
ஐ ஐ லவ் லவ் யூ யூ

விழியன்
"பெண் என்றாலே தலைவலி தானோ?"

ஜெஸிலா
தலைவலி மருந்தே தலைவலியானால்?

- - - - - - - - - - - - - - -

இது கூட நன்றாக இருந்தது.

>>
மின்னுது மின்னல்
Error 404!
>>

ஆனால் 'Too many rows' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
404: The page cannot be found!
- - - - - - - - - - - - - - -


புன்னகைக்க வைத்த இன்னொரு வரி:


Dev
வேணாம் தலைவலிக்குது அழுதுருவேன்...அவ்வ்வ்வ்வ்வ்

- - - - - - - - - - - - - - -

வெற்றி வாய்ப்பை தவற விட்டாரா? தெரியவில்லை.. இதுவும் நன்று..

Dubukku
"நல்லவேளை மூக்குத்தி ஒன்னு வாங்கினா போதும்..."
- - - - - - - - - - - - - - -

முத்தாய்ப்பாக ..

ஜி கௌதம்
ஆஆஆஆட்டம் முடிஞ்சது!!!!!!

ஓ, இது போட்டிக்கு அனுப்பப் பட்டதில்லையா? போட்டி முடிந்தது என்று கொடுக்கப் பட்ட அறிவிப்பா? :-))

நிரம்ப ரசிக்க வைத்த போட்டி. அனைவருக்கும் பாராட்டுகள்.

Wednesday, September 06, 2006

ஆற்றில் இறங்கிய பிறகு..

மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்க, அவரருகே சென்று அந்தக் கிண்ணத்தைப் பிடுங்கி கிடுகிடுவென்று ஒரே மடக்கில் குடிக்க, கூட்டம் ஹோவென்று ஆர்ப்பரிக்கிறது. மைக்கில் 'நோ கிக் யா!" என்று அவள் சொல்ல, திரும்ப 'ஹோ!'


மேலும்..

Tuesday, September 05, 2006

கண்ட [கண்ட] கனவுகள்

புல்லில் பனித்துளி
துளி: 3


பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாண்டமான ஒரு கட்டிடம். தலையை உய்ர்த்தி பார்த்துவிட்டு. பேண்ட்
பாக்கெட்டில் இருந்து அமிர்தாஞ்சன் பாட்டிலை எடுத்து விரல் பதித்து கழுத்தில் தடவிக்
கொள்கிறேன். கொஞ்சம் தலை சுற்றுகிற மாதிரி தோன்றுகிறது.

உள்ளே அழகான ஒரு ரிசப்ஷனிஸ்ட் நுனி நாக்கில் ஆங்கிலத்தை நடனமாட வைத்துக்
கொண்டிருக்க அவளை நெருங்கி ஏதோ கேட்கிறேன். அவள் கம்ப்யூட்டரைக் கேட்டு விட்டு,
'105ஆவது மாடி' என்கிறாள். லிஃப்ட் நோக்கி விரல் காட்டுகிறாள்.

என்னுடன் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் லிஃப்டுக்குள் புகுந்து கொள்கிறார்கள். நான் '105' என்று
பதிவு செய்ய, மற்றவர்களும் பதிவு செய்கிறார்கள். '25', '38', '62', '178' .....

லிஃப்ட் புறப்படவே ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகிவிட எல்லோரும் 'ச்' 'ச்' 'ச்' என்று வெறுப்பைப்
பறிமாறிக் கொள்கிறார்கள். விர்ரென்று புறப்படுகிற லிஃப்ட் பத்து பத்து மாடிகளையும்
அநாயாச வேகத்தில் சிற்சில விநாடிகளில் கடக்கிறது. தலைக்குள் பத்து புறாக்கள் பறக்கிற
மாதிரி தோன்றுகிறது.

105ஆவது மாடியில் இறங்கும் போதே அங்கு நிலவிய கூச்சல் குழப்பங்களைப் பார்த்து நெற்றியை
சுருக்கினேன். 'சீக்கிரம்.. சீக்கிரம்..' என்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நான்
வரவேற்பில் பார்த்த அதே ரிசப்ஷனிஸ்ட் எதிரில் ஓடி வருகிறாள். அவளது முகத்தில்
முழுக்க பயம் நிரம்பியிருந்தாலும், அவள் ஓடி வரும் போது லயத்துடன் நடனமாடும் முன்
அழகுகளைத் தான் நான் பார்த்தேன்!

'மிஸ்டர் கணேஷ், உங்களைத் தான் தேடி வந்தேன். ஒரு விமானம் இந்த கட்டிடத்தைத்
தகர்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் தப்பி ஓடுங்கள்' என்று சொல்லி விட்டு
என் பதிலைக் கூட எதிர்பாராமல் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள்.

அந்த வெண்மையான கரம்.. அதன் மென்மை என்னைக் கிரங்கடிக்கிறது. கண் மண் தெரியாமல்
ஓடுகிறேன். எங்கே படிகள் என்று தேடுகிறோம். 'படிகளுக்கு செல்லும் வழி' என்கிற பலகை
கண்களில் படுகிறது. ஆனால் அது கீழே விழுந்து கிடக்கிறது! 'ஐயோ!' என்று கத்தி விட்டு
நாங்களே ஒவ்வொரு பக்கமும் ஓடித் தேடுகிறோம். 'ஆ, அதோ, படிகள்..' என்று குதூகலித்து
படிகளில் இறங்க ஆரம்பிக்கிறோம்.

சட்டென்று எல்லா விளக்குகளும் அணைந்து விட, இருட்டு! முன்னே என்ன இருக்கிறது என்றே
தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. முழுக்க மௌனம்.. 'எங்கே போனார்கள் இங்கு
இருந்தவர்கள்?' என்று நான் கேட்க, 'எல்லோரும் இறந்து விட்டார்கள். நாம் இருவர் தான்
இங்கிருந்து தப்பி இருக்கிறோம்' என்று உரக்கக் கூவுகிறாள்.

படிகள் முடியாமல் போய்க் கொண்டேயிருக்கின்றன. 104, 103, 102, 101, 100.. என
அறிவிப்புப் பலகைகளைப் பார்த்த போது ஆயாசமாக இருந்தது. இன்னும் 99 மாடிகள்
இறங்க வேண்டுமா?

மேலே பார்த்த போது உறைந்து போனேன். இடிந்து போன கட்டிடம் ஒரு பெரிய சிமெண்ட்
குவியலாக என்னைக் குறிபார்த்து வந்து கொண்டிருக்க, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
அந்த ரிசப்ஷனிஸ்ட் திடீரென்று வீல் என்று கத்த, 'என்ன? என்ன?' என்றேன். என் கையிலிருந்து
அவளது கை வேகமாக விலகி போனது. நான் அடுத்த அடி எடுத்து வைக்க காலை எடுக்கும்
போது தான் கவனித்தேன். அடுத்த படியே இல்லை. ஆனால் நான் மிக தாமதமாகத் தான்
அதை கவனித்தேன். என் கால் அடுத்த படி எங்கே என்று தேடி நகர..கீழே.. கீழே.. என்று
இலக்கேயில்லாமல் என் உடல் பறக்க ஆரம்பிக்க..

திடுக்கிட்டு கண் விழிக்கிறேன்.

இது அடிக்கடி நான் காண்கிற கனவு! அமெரிக்காவில் நடந்த அந்தத் தாக்குதலுக்கு முன்னரே
எனக்கு இந்த கனவு வந்திருக்கிறது என்று சொன்னால் 'ஓவர் அலட்டல்!' என்று நீங்கள் சொல்ல
வாய்ப்பிருக்கிறது. மாதம் ஒருமுறையோ இல்லை இரு முறையோ ஒரு பத்திரிகை மாதிரி இந்தக்
கனவு எனக்கு வரும். ரிசப்ஷனிஸ்ட் முகம் மற்றும் 'அங்க' அடையாளங்கள் சிறிது மாறியிருக்கும்.
அவ்வளவே! மற்றபடி அதே 98வது மாடியில் தான் படி இல்லாமல் கீழே விழ ஆரம்பிப்பேன்.

'சும்மா படுக்க மாட்டீங்களே, காலாலே படுக்கையை உதை உதைன்னு உதைச்சு என்
தூக்கத்தையும் கெடுத்துகிட்டு, சே!' என்று அதே ரிசப்ஷனிஸ்ட் குரல் கேட்கும். எழுந்து
உட்கார்ந்தால் மனைவி! 'நீயா? சாரி!' என்று சொல்லிவிட்டு ஒரு முறை படுத்து விட அடுத்த
நாள் வீடு இரண்டு பட்டது!

தேர்வறை! விடைத் தாளில் பெயர் மற்றும் பதிவு எண் எழுதி விட்டுக் காத்திருக்க, கேள்வித்
தாள் கொடுக்கப் படுகிறது. முதல் கேள்வியைப் படிக்க திக்! ஐயோ! இரண்டாவது கேள்வியைப்
படிக்க ஐயையோ! மூன்றாவது கேள்விக்கும் பதில் தெரியவில்லை. கடவுளே,
உனக்கே இது நியாயமாக இருக்கிறதா? என்று மேல் நோக்கி கை நீட்ட, கண்காணிப்பாளர்
கிட்டே வந்து 'என்ன? அதுக்குள்ளே அடிஷனல் ஷீட் வேணுமா?' என்று கேட்பார்.
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து விழிப்பேன். கல்லூரி முடித்து இத்தனை வருடங்கள்
ஆனாலும் இந்தக் கனவு மட்டும் என்றும் மார்க்கண்டேயனாக வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கனவு தந்த பயத்தால் தான் நான் மேல் படிப்புக்கே போகவில்லை!

அதிகாலைப் பொழுதில் வரக்கூடிய பிரசித்தமான கனவு - இயற்கை அழைப்பை உடனடியாக
ஏற்க முடியாமல் அங்கு இங்கு என்று இடம் தேடி அலையும் கனவு. நான் சிறு வயதில்
தஞ்சை மாவட்டத்தின் இண்டு இடுக்கு கிராமங்களில் இருந்த போது காலைக் கடன்களை
முடிக்க ஆற்றங்கரைகளை நாட வேண்டியிருந்தது. ஆற்றின் இருபுறமும் பெரிய பெரிய செடிகள்
நிழல்களுடன் காத்திருக்கும். குளுகுளு வசதி செய்யப்பட்ட இயற்கையான கழிவிடங்கள்!
அதுவும் இலவசமாக! ஒரே ஒரு குறை.. அடிக்கடி பெண்கள் வந்து விடுவார்கள். அப்போது
மாத்திரம் எழுந்து நின்று பக்கத்து செடியில் இருக்கும் இலையைப் பறித்து மிஸ்டர் பீன் மாதிரி
அதை ஆராய வேண்டியிருக்கும். அந்த பசுமை நினைவுகள் விலகாமல் இன்னும் என் மனதில்
இருப்பதால் தான் அந்த கனவு அடிக்கடி வருகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

சில சமயம் இந்த கனவு நீடிக்கப் பட்டு விடும். அந்த சமயம் எல்லாம் நான் ஒரு மணி நேரம்
தாமதமாக எழ வேண்டியிருக்கும். இடம் தேடி அலையும் கனவு நிரம்ப சுவாரசியமாக
இரண்டாம் பாகத்துக்கு முன்னேறும். தேடித் தேடி இடம் கிடைக்காமல் பெரிய ஒரு
காட்டுக்கு நான் வந்து விடுவேன். அடர்ந்த காடு. எக்கச்சக்க மரங்கள் கூடி நின்று
சூரிய வெளிச்சமே உள்ளே வரவிடாதபடி இருள வைத்திருக்கும். கடனே என்று கடனை
முடித்து விட்டு எழும் போது, எதிர்க்க இரண்டு கண்கள். பளிச்சென்று மின்னலடிக்கும்
கண்கள். அந்த கண்கள் உறுமும் போது தான் அது புலி என்று தெரிந்து தலை தெறிக்க
ஓட ஆரம்பிப்பேன். நேராக ஓடினால் பிடித்து விடும் என்று கோணல் மாணலாக எல்லாம்
ஓடுவேன். திரும்பிப் பார்த்தால் சிங்கம் வந்து கொண்டிருக்கும். இன்னும் விரைவாக
ஓடுவேன். பூமி அதிர்கிற மாதிரி தெரிய திரும்பிப் பார்த்தால் யானை வந்து கொண்டிருக்கும்.
அதற்குள் சிங்கார சென்னைக்குள் வந்து விட்டிருப்பேன். இப்போது திரும்பிப் பார்த்தால்
ஒரு எருமை துரத்திக் கொண்டு வரும். இதோ எங்கள் தெரு வந்து விட்டது. திரும்பிப்
பார்த்தால் ஒரு நாய் துரத்திக் கொண்டிருக்கும். ஆனால் அது வெற்றி பெற்று விடும். என்
கிட்டே வந்து விட்ட அந்த நாய் என் மீது பாய்ந்து என் கழுத்தைக் குறி வைத்துக் கடிக்க ..

திடுக்கிட்டு எழுந்து கழுத்தில் இருந்து அந்த நாயைத் தள்ளி விட, ஒரு எறும்பு வீல் வீல்
என்று கத்திக் கொண்டு கழுத்திலிருந்து விழும்!

கிழக்கே போகும் ரயில் படம் திரையிட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. பெரிய க்யூ! இன்று
எப்படியும் படம் பார்த்தே விட வேண்டும் என்று இருக்கிற கடவுள்களை எல்லாம்
வேண்டியபடி காத்திருந்தோம். க்யூவில் எத்தனை பேர் நம் முன் இருக்கிறார்கள் என்று
கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்து டிக்கெட் கிடைக்குமா இல்லையா என்று விவாதித்துக்
கொண்டிருந்தோம். க்யூ நகர்ந்தது. எங்களுக்கு பின்னால் ஒரு நூறு பேராவது இருப்பார்கள்.
அதில் ஒரு விபரீத திருப்தி!

கவுண்ட்டரை நெருங்க நெருங்க மாரடைப்பே வந்து விடுமோ என்கிற மாதிரி டென்ஷன்!
இதோ இன்னும் ஐந்தே பேர் தான்! நான்கு தான். மூன்று, அட, இரண்டு, ஆ, ஒன்று. நான்
டிக்கெட்டுக்காக பணத்தை நீட்ட கவுண்ட்டர் மூடப்பட்டது! எப்படி இருக்கும்?! கண்களில்
கண்ணீர் திரண்டு விட்டது. நண்பர்கள் தான் சமாதானப் படுத்தி கூட்டி வந்தார்கள்.

'நான் படம் பார்த்தே ஆக வேண்டும்' என்று நிரம்பப் பிடிவாதம் பிடித்தேன். அது தான் அந்த நாளின்
கடைசி காட்சி. இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டும் - சனி, ஞாயிறு வர! மற்ற நாட்களில்
கல்லூரிக்கு மட்டம் தட்டி எல்லாம் படம் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை! ப்ளாக்கில்
வாங்கலாம் என்று நண்பர்கள் திட்டம் தீட்டினார்கள். யானை விலை குதிரை விலை
சொன்னதால் நண்பர்கள் தயங்கினார்கள். ஓரிரு விநாடிகள் தயக்கத்துக்கு பின் பர்ஸை
எடுத்து விட்டார்கள். 'இன்னும் ஒருவாரம் காத்திருக்க முடியாதுடா' என்று சமாதானம்
சொன்னார்கள். அவன் நீட்டிய அந்த டிக்கெட்டைப் பார்த்தேன். நட்ட நடுவில் அப்பாவின்
முகம் கறுப்பு வெள்ளையில் தெரிந்தது! மறுத்து விட்டு நடந்தேன். பின்னால் வந்த நண்பர்கள்
திட்டிக் கொண்டே வந்தார்கள்.

இரவு படுக்கப் போகும் போது திரும்ப கிழக்கே போகும் ரயில் 'கூ..' என்றது. வருத்தத்துடன்
போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.

ஐந்து நிமிடங்கள் சென்றது. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.... என்று மணியடித்தது. வெண்திரையில்
கோடுகள் அங்கும் இங்கும் தோன்றி மறைய.. தூரத்து மலையில் சூரியன் உதித்துக்
கொண்டிருந்தது. அப்படியே காட்சி நகர.. இருப்புப் பாதை ஓட ஆரம்பித்தது. வேகம்
மெல்ல குறைந்து, அங்கே எதிர்க்க ஒரு ரயிலைக் காண முடிந்தது.

இஞ்சினில் தொடங்கி ஒவ்வொரு பெட்டியாக காண முடிகிறது. கட்டித் தொங்க விடப்பட்ட
தண்டவாளத் துண்டு.. டங் டங் டங் என்று அதில் அடிக்கவும்.. 'கூ..' என்று கூவிப் புறப்படுகிறது
ரயில். கிழக்கு நோக்கி புறப்படுகிறது ரயில்! சட்டென்று காட்சி உறைந்து போக..
'கிழக்கே போகும் ரயில்' என்று டைட்டில் கார்டு போடப் படுகிறது. நான் என்னை மறந்து
கை தட்டுகிறேன்.

ஒவ்வொரு பேராக போடப் பட்டு கடைசியில் பாரதிராஜா பெயர் வரும் போது விசில் அடிக்கிறேன்.
ஒவ்வொரு காட்சியாக படம் அழகாக நகர்கிறது. சிரிப்பு காட்சிகளில் விழுந்து விழுந்து
சிரிக்கிறேன். நாயகன் நாயகி பிரிகிற காட்சிகளில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல்
தடுமாறுகிறேன்.

படத்தில் இடைவேளை கார்டு வந்த போது, எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து திரும்பப்
படுத்துக் கொண்டேன். படம் தொடர்ந்தது! கடைசி காட்சியில் படம் முடிகிற போது கொடுக்கும்
அதே இசை ஒலிக்க 'வணக்கம்' கார்டும் பார்க்கிறேன்.

காலை எழுந்ததும் மனது முழுக்க ரம்மியமாக இருந்தது. ஒரு காசு செலவில்லாமல் முழுப்
படமும் பார்த்து விட்டேன். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று துடித்தேன்.

இளவழகன் பல் துலக்கிக் கொண்டிருந்தவன் வாயைக் கொப்பளித்து விட்டு 'என்னடா, ராத்திரி
முழுக்க சிரிச்சுகிட்டே இருந்தே? ஏதாவது கனவா?' என்றான். ஆகா!

ஆத்மராம் 'என்ன உன் முகத்திலே கறை? அழுதியா என்ன?' என்றான். ஆகா, ஆகா!

கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் அழகாக அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
நண்பர்களுக்கு அதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, நான் பார்த்த காட்சிகளை
திரும்ப நினைத்துப் பார்த்தேன். அநியாயத்துக்கு ஒரு காட்சி கூட ஞாபகத்துக்கு வரவில்லை!

ஆனாலும் ஒரு அருமையான திரைக் கதையுடன் கூடிய ஒரு படத்தைப் பார்த்த திருப்தி
கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு குறை - கதை, திரைக்கதை, வசனம்,
இசை, இயக்கம் - சுபமூகா என்று ஒரு கூடுதல் கார்ட் போட்டிருக்கலாம்!

நன்றி: http://tamil.sify.com

Friday, September 01, 2006

முதல் வாசகி

புல்லில் பனித்துளி
துளி: 2

"ப்ச்" என்று சொல்லிவிட்டு கதையைத் திருப்பிக் கொடுத்தார் உஷா.

'தேறாது!' என்று அதற்கு அர்த்தம்.

கடவுளே என்று என் மனது உரக்கக் கூவியது உங்களுக்குக் கேட்டிருக்கலாம். எவ்வளவு
கஷ்டப்பட்டு இந்தக் கதையை எழுதினேன்! நேற்று இரவு இதை எழுதி முடிக்கையில் மணி
இரண்டைத் தாண்டியிருந்தது. தூக்கம் கண்களில் சிவப்பு பூசியிருந்தாலும் கூட, அதையும்
மீறிய ஒரு ஆத்ம திருப்தி மனதை நிறைத்திருந்தது.

நான் ஒவ்வொரு கதையை எழுதும் போதும் இதே மாதிரி தோன்றுவதுண்டு தான். ஆனாலும், இந்தக்
கதையில் எனக்கே தெரியாமல் ஒருவித அதிகப் படியான ஈர்ப்பு இருப்பதாகத் தோன்றியது.
ஒரு பெண்ணின் மனதில் தோன்றிய புரட்சிகரமான எண்ணத்தைப் பற்றிய கதை. கதையை
ஆரம்பிக்கும்போது இதை எப்படி முடிக்கப் போகிறேன் என்பதே மனதில் புரிபடாமல் இருந்தது.
எழுத ஆரம்பித்த பிறகு, கிடுகிடுவென்று பக்கங்கள் போன மாயம் தெரியவிலை!
என மனதில் ஒரு தேவதை வந்தமர்ந்து என் கைக்கு கட்டளை இட்டுக் கொண்டிருப்பது போல் வார்த்தைகள் தானாக தாளில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அப்படிப் பட்ட அருமையான கதையை ஒரே ஒரு 'ப்ச்' தூக்கி எறிந்து காயப் படுத்தி விட்டது
போல் உணர்ந்தேன். 'அவசர அவசரமாக படித்து விட்டு முடிவை எடுத்து விட்டாரோ!' என்று
கூட நினைத்துக் கொண்டேன்.

என் முகத்தில் என் ஏமாற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டேனோ என்னவோ..உஷா
"சாரி" என்றார்.

"என்னங்க கதை நல்லா இல்லியா?" என்றேன். எனது குரலின் மீது எனக்கே பரிதாபமாக
இருந்தது. 'கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க' என்று ஒருவித வியாபாரத் தனம் அதில்
எட்டிப் பார்த்தது.

உஷா தான் எனக்கு முதல் வாசகி. [பெயர் மாற்றப் பட்டிருக்கிறது, காரணம் - இந்தக்
கட்டுரையைப் படித்து முடிக்கும் போது தெரிய வரலாம்!]

எனது கதைகள் பத்திரிகைகளில் பவனி வர ஆரம்பித்திருக்கையில் கிடைத்த அரிய நட்பு
இது! என் கதை பத்திரிகையில் வருவதற்கு முன் படிக்கக் கூடிய அருமையான வாய்ப்பு
என்கிற மாதிரி மனதில் நிரம்ப உன்னதமாக நினைத்தபடி என் கதையை அனுப்பும் முன்னர்
அவருக்குக் கொடுத்தேன். அபரிமிதமான இறுமாப்பு மனதில் இருந்ததை ஒப்புக் கொள்ளத்
தான் வேண்டும்.

'ஐயோ, நான் தான் உங்க கதையை முதலில் படிக்கப் போகிறேனா?
அடடா, என் வீட்டில் இதை சொல்லியே ஆகணும்' என்றெல்லாம் வியாக்கியானம் செய்து
படிக்கப் போகிறார் என்று நினைக்கப் போக, அவர் அப்படியெல்லாம் செய்யவே இல்லை.

"நான் கதை ஒழுங்கா இருந்தாலே ரொம்ப விமர்சனம் செய்ற பேர்வழி. என் கிட்டே கதையைக்
கொடுக்காதீங்க. வெறுத்துப் போயிடுவீங்க!" என்று சிரித்த போது நொந்து போனேன்.

அப்புறம் தான் தெரிந்தது. உஷா கல்லூரியில் படிக்கும் போது சிறுகதைகள் எழுதியவர் என்பது.
கல்லூரி நடத்திய மாத இதழில் இவரது கதைகள் நிறைய வந்திருக்கிறதாம்.

"அதுக்கப்புறம் எழுதவில்லையா?" என்று கேட்க, "கல்யாணம் ஆயிடுச்சி, அப்புறம் குடும்பப்
பத்திரிகை நடத்திகிட்டிருக்கேன்!" என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்.

விகடன், கல்கியில் கூட கதை வந்து விடும், இவரிடம் ஒரு கதைக்கு பாராட்டு என்பது மட்டும்
கிடைப்பது மிக அரிது என்றே சொல்ல வேண்டும். கதையைப் படித்து விட்டு அலசு அலசு என்று
அலசி விடுவார். ரொம்ப நுணுக்கமாக ஆய்ந்து சொன்னதாக அந்த கருத்துகள் இருக்கும்.
நான் கதை எழுதுவதை ரொம்ப நேசிக்க ஆரம்பித்தேன். இந்தக் கதைக்கு உஷா நல்ல மாதிரி
கருத்து சொல்ல வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து என் மூளையை வருத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.
சொல்லப் போனால் உஷாவுடன் ஒரு விவாதத்தைத் ் தொடங்கினால் அது அடுத்த கதைக்கு ஒரு
நல்ல கருவைக் கொடுத்து விடும்.

மதிய உணவு இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்து என் கதைப் பிரதியைக்
கொடுப்பேன். ஒரு ஸ்பூன் உணவு, ஒரு பாரா கதை, திரும்ப ஒரு ஸ்பூன் உணவு என்று என்
கதைக்கு உணவைத் தொட்டுக் கொள்வார். என்னுடைய ஒரே ஒரு கதைக்கு மட்டும் தான்
உணவை தூர வைத்து விட்டு முழுக் கதையையும் படித்து முடித்தார். "வாவ்!" என்று சொல்லி
விட்டு தலையை உதறிக் கொண்டார். இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் எனக்கு அது
இனிமையாகத் தெரிந்தது. அது ஒரு மர்மக் கதை! அந்த கதை நினைத்த மாதிரியே மிக
வரவேற்பைப் பெற்றது. அதற்கப்புறம் அந்த மாதிரி முழுக் கதையையும் ஒரே மூச்சில் படிக்க
வைக்க முடியவில்லை! அதில் எனக்கு வருத்தமே!

"என்ன பெரிய புதுமை செஞ்சுட்டதா நினைப்பா?"

நான் மௌனம் காத்தேன்.

"தாலியைக் கழட்டி வச்சுட்டா எல்லாம் முடிஞ்சு போயிடுமா? கண்ட கண்ட சினிமா பார்த்து
இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு. குடும்பம் அப்படீங்கிறது அவ்வளவு
சுலபமான விஷயம் இல்லை. அது ஒரு யாகம். வெறும் மோகம் இலலை. அதை சரியா தெரிஞ்சு
கிட்டா அது ஒரு யோகம்."

சொல்லியவர் எழுந்து கை கழுவ சென்று விட்டார். இது என்ன? யாகம், யோகம், மோகம் என்று!
உஷாவுக்கு திடீரென்று தாடி முளைத்து விட டி.ராஜேந்தர் மாதிரி கற்பனை செய்து பார்த்து
சிரித்துக் கொண்டேன்.

"என்னது? எதுக்கு சிரிச்சீங்க?" சட்டென்று திரும்பியவர் நான் சிரிப்பதை கவனித்து விட்டார்
போல!

"ஒண்ணுமில்லை, கதை தேர்ந்தெடுக்கப் படாததால் சந்தோஷத்தில் சிரிச்சுகிட்டிருக்கேன்!"
என்று சொல்லி சிரித்தேன்.

"எல்லா விஷயத்திலும் குற்றம் கண்டு பிடிக்கும் கணவன். சந்தேகக் கண் கொண்ட கணவன்,
அதுக்கு ஒரே தீர்வு - தாலியைக் கழட்டி வைச்சுட்டு வீட்டை விட்டு வெளியேறி விடு! அது
தானே நீங்க சொல்றது? வந்துட்டாயா அவ. அப்புறம் என்ன ஆகும்? அந்தக் கேள்விக்கு
விடை உங்க கிட்டே இருக்கா? கணவனைப் புறக்கணித்து விட்டு வருகிற ஒரு பெண்ணை
சமுதாயம் எந்த மாதிரி நடத்தும் அப்படீன்னு உங்களுக்கு தெரியுமா? அதை பகுதி இரண்டா
எழுதுவீங்களா?"

படபடவென்று பொரிந்து தள்ளிய அந்த உஷா எனக்கு இன்று தான் பரிச்சயம்!

"என்னோட திக் ஃப்ரண்ட் ஒருத்தி.. இவ்வளவுக்கும் அவங்களது லவ் மேரேஜ். அவங்க மாதிரி
ஜோடியைப் பார்த்ததில்லை அப்படீன்னு நாங்க எல்லோரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசியிருக்கோம்.
அவனை விட்டு இவ இருந்ததில்லை. இவ எங்க போனாலும் பின்னாலேயே நாய் மாதிரி
திரிஞ்சான் அவன். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆன பிறகு என்ன ஆச்சு?"

நான் அவரையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த கதை தயாராகிக்
கொண்டிருக்கிறது!!

"எங்கேயிருந்து வந்ததோ அந்த சந்தேகம்? யார் என்ன சொன்னாங்களோ என்ன எழவோ
அவளைப் பார்க்கிற ஒவ்வொரு பார்வையிலும் ஒரு ஓரத்தில் சந்தேகம்! அவ சிரிச்சாலும்
சந்தேகம். அழுதாலும் சந்தேகம். அட, சும்மா இருந்தாலும் சந்தேகம்! அவ என்ன தாலியைக்
கழட்டி வச்சுட்டுக் கிளம்பிட்டாளா? இரண்டு வருடத்துக்கு முந்தைய கணவனை - அந்தக்
காதலனை மனசில் நினைச்சுகிட்டு மனசை சமாதானப் படுத்திக்கிறா! இவளும்
சாக்கடையில் இறங்கி சண்டை போடவா முடியும்? ஒருத்தன் சாக்கடை சகதியோட
இருக்கிறது போதும்! இல்லையா?"

நான் குறுக்கிட விரும்பவில்லை. மௌனமாக அவரையே பார்த்தபடி இருந்தேன்.

"உங்க கிட்டே சொல்லக்கூடாது தான். இருந்தாலும் சொல்றேன். ஒரு நாள் பஸ் நெரிசலில்
முந்தானை கொஞ்சம் விலகிடுச்சு. அவ அதை கவனிக்கலை. வீட்டு வாசலில் புருஷன்
காத்துகிட்டிருந்தார். இவளை இழுக்காத குறையா உள்ளே கூட்டிட்டு போய் முந்தானையை
சரி பண்ணி விட்டிருக்கார். 'நான் சரியா பார்க்கிறது இல்லையா என்ன? ஏன் இப்படி தொறந்து
போட்டுகிட்டு வர்றே?' அப்படீன்னு கேட்டிருக்கார்"

சொல்லி முடித்த போது அவர் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். அவரது கோபம் அதில்
நன்கு தெரிந்தது.

"அவ என்ன தாலியைக் கழட்டவா முடியும்? ஒவ்வொரு தடவை பஸ்ஸில் இருந்து இறங்கும்
போதும் தன்னிச்சையா அவ கை முந்தானையை சரி பண்ணி விடும். அவ்வளவு தான் அவளால்
செய்ய முடியும்! ஏட்டு சுரைக்காயை அழகா புது மாதிரி காய்க்க எல்லாம் வைக்க முடியும் ஆனா
அது கறிக்கு உதவாது!" என்று சொல்லி புன்னகைத்தார்.

அடுத்த நாள் உஷா ஆபீஸ் வரவில்லை. அதற்கடுத்த நாளும்!

மூன்றாம் நாள் தலையில் கட்டுடன் வந்தார். வலது கண்ணில் வீக்கம்!

"ஐயோ என்ன இது?" என்று பதறிப் போனேன்.

"ஒரு சின்ன ஆக்ஸிடண்ட். ஸ்கூட்டரில் போகும் போது ஒரு நாய் குறுக்க வந்ததுன்னு அவர்
அவாய்ட் பண்ணப் போக கீழே விழுந்து.. நல்ல வேளை கண்ணுக்கு ஒண்ணும் ஆகலை!"
என்றார். சட்டென்று என் கண்களுக்குள் சுடுநீர் உணர்ந்தேன்.

மாலை கிளம்பும் போது நண்பன் சந்துரு வந்து அந்த செய்தியை சொன்னான்.

உஷாவுக்கு நேர்ந்தது விபத்தல்ல. அவளுக்கும் அவளது கணவனுக்கும் இடையே நடந்த
ஒரு வாக்குவாதத்தில் கணவன் கையில் கிடைத்த அரிவாள் மணையை எடுத்து தலையில்
அடிக்கப் போக அதனால் தான் அந்தக் கட்டு!

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

இன்று மாலையும் உஷா பேருந்தில் இருந்து இறங்கும் போது அவரது கை முந்தானையை
சரி செய்து கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன்!

[தொடரும்]

நன்றி: http://tamil.sify.com