Friday, December 22, 2006

ஆற்றில் இறங்கிய பிறகு..

புல்லில் பனித்துளி
துளி - 9

[அழகிகள் உலகில் - தொடர்ச்சி..]

நட்ட நடுவில் இருந்த மேடையில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் அந்த பெண் நின்றிருந்தாள். அழகென்றால் அவ்வளவு அழகு! அந்த அழகை மறைக்க விரும்பவில்லையோ என்னவோ சிக்கனமாக இரண்டே இரண்டு இடங்களை மட்டும் 'போனால் போகிறதென்று' மறைத்திருந்தாள்.

ஒயிலாக நடந்து வந்து, தூணில் சாய்ந்து நின்று தன் வலது காலால் இடது காலில் மேலிருந்து கீழாகத் தடவ, என்னவோ பெரிய சாதனை செய்தது போல் முழுக் கூட்டமும் விசிலடித்து ஆர்ப்பரித்தது.

இப்போது மெல்ல மேடையிலிருந்து இறங்கி ஒவ்வொரு மேசையாக செல்கிறாள். அந்த அறையின் பல பகுதிகளிலிருந்தும் 'இங்கே. இங்கே..' என்று குரல்கள் எழுகின்றன.

மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்க, அவரருகே சென்று அந்தக் கிண்ணத்தைப் பிடுங்கி கிடுகிடுவென்று ஒரே மடக்கில் குடிக்க, கூட்டம் ஹோவென்று ஆர்ப்பரிக்கிறது. மைக்கில் 'நோ கிக் யா!" என்று அவள் சொல்ல, திரும்ப 'ஹோ!'

அவள் செல்லுமிடமெல்லாம் ஒளி வெள்ளம் தொடர்ந்து வருகிறது. கதவருகில் இருட்டைத் துணையாக வைத்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.

இப்போது அந்த பெண் எனக்கு நேர் எதிரே இருந்த வரிசை நோக்கி வர ஆரம்பிக்க, ஒளி வெள்ளம் என்னைத் தாண்டிச் சென்றது.

என்னைக் கடந்து சென்ற அந்தப் பெண் ஒரு விநாடி தயங்கி நின்று, என்னைத் திரும்பிப் பார்த்தாள். ஒரு விநாடி தான். சட்டென்று தோள்களைக் குலுக்கியபடி நடக்க ஆரம்பிக்க, ஒளி வட்டம் அவளை விழுங்குவது போல் தொடர்ந்தது.

அவளுக்கு முன்னமேயே என்னைத் தெரிந்திருக்குமா என்ன? சார்லஸ் சொன்ன ஸ்டெல்லாவாக இருக்குமோ? நான் இண்டியன் செஷனில் வாசிக்கும் போது என்னைப் பார்த்திருக்க வேண்டும். நான் மிக நல்லவன் என்று நினைத்திருந்ததற்கு மாறாக இப்போது கேபரே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டிருப்பாளோ என்றெல்லாம் மனதில் மாய்ந்து போனேன்.

அல்லது, இந்த மாதிரி வயதில் இளையவர்களின் முன் இப்படி நிற்க வேண்டியிருக்கிறதே என்று கூட வருத்தப் பட்டிருக்கலாம். எனக்கு உடுக்கை இழந்து போன தடுமாற்றம் ஒரு விநாடி ஏற்பட்டது.

அடுத்த காட்சி தொடங்கும் நேரம் ரொம்ப நல்ல பிள்ளை போல், காங்கோ ட்ரம் பக்கம் போன நான், யாரோ என்னையே உற்று நோக்குவது போல் தோன்றத் திரும்பினேன். பாபு மாஸ்டர் தான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"வணக்கம் சார்" என்றார்.

நான் தடுமாறினேன்.

"கேபரே பார்க்கிறீங்களா சார்? வர்றேன் சார். உங்க சித்தப்பா கிட்டே சொல்றேன் சார்" என்றார்.

நான் தலை குனிய, என் முதுகில் ஒங்கித் தட்டி விட்டு, சிரித்தார். நான் தப்பிவிட்ட மகிழ்ச்சியில் மெல்ல புன்னகைத்தேன்.

"வேலை பண்ண வந்திருக்கோம். நம்ம வேலை உண்டு, நாம உண்டு அப்படின்னு இருக்கணும். புரியுதா?" என்றார்.

புரியவில்லை என்றாலும் தலையாட்டினேன்.

"நான் இப்ப தான் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னே வந்தேன்!" என்றேன்.

"ரெண்டு நிமிஷமானா என்ன? ஒரு மணியானா என்ன? எல்லாம் ஒண்ணு தான்!" என்றார் சார்லஸ் சிரித்து விட்டு.

என்னவோ ஒரு பெரிய தவறு செய்து விட்டது போல் அன்று என்னால் ஒன்றி வாசிக்க முடியவில்லை.

அடுத்த நாள் இண்டியன் செஷன் முடிந்த பிறகு, நான் வெளியே போகவில்லை. கதவருகே போடப் பட்டிருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.

'ஆற்றில் இறங்கியாகி விட்டது. சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?' என்று எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

இது ஒரு காரணம் என்றால், இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது. அந்த வயதிற்கேயுரிய சொல்ல முடியாத ஒரு எதிர்பார்ப்பு மனதில் இருந்தது.

கேபரே என்றால் நான் என்னவோ ஏதோ என்று நினைத்திருந்தேன். சிற்றாடைகள் இரண்டு தரித்து சுற்றி சுற்றி வருவது தான் கேபரேயா என்ன? ஒரு வேளை, நான் வருவதற்கு முன் முக்கிய காட்சி முடிந்திருக்குமோ என்று ஐயம் ஏற்பட இன்றைக்கு தவற விடாமல் முதலிலிருந்து கடைசி வரை பார்த்து விடுவது என்று முடிவு செய்து அங்கேயே இருந்து விட்டேன்.

ஐந்து பெண்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஐந்தைந்து நிமிடங்கள் ஒவ்வொரு வகையாக நேர்த்தியாக நடனமாடிச் சென்றார்கள். நான் நினைத்த மாதிரி எல்லாம் எதுவும் ஏடாகூடமாக ஆகவில்லை. எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றமாக இருந்தாலும், நான் இன்னும் நல்லவன் தான் என்று மனசுக்குள் மகிழ்ச்சியடைந்தேன்.

டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

புது வருடத்தை வரவேற்க எல்லோரும் காத்திருந்தனர். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் மது வெள்ளத்தில் மூழ்கி நீந்திக் கொண்டிருக்க முயன்று கொண்டிருந்தனர். அப்போது தான் அது நடந்தது.

இரண்டு பேர் ஏதோ ஒரு உப்புசப்பில்லா காரணத்துக்கு வாக்குவாதத்தில் இறங்கப் போக, அதில் ஒருவர் பக்கத்திலிருந்த பாட்டிலை எடுத்து மேசையில் உடைத்து வீசும் வரை போனது. சிலீர் என்று கண்ணாடிச் சிதறல்கள் அறையெங்கும் பரவ, 'வீல்' என்று அலறியபடி கேபரே ஆடிக் கொண்டிருந்த பெண் உள்ளே ஓடி விட்டாள்.

பயந்து போன அந்த பெண் அதிர்ச்சி மிகுதியில் மயங்கிச் சாய, சார்லஸ் சட்டென்று அந்தப் பெண்ணைப் பிடித்து, கைத்தாங்கலாக மெள்ளப் படுக்க வைத்தார்.

"தண்ணி கொண்டாங்கப்பா!" என்று சார்லஸ் சொல்ல, நான் ஓடினேன். நான் கொண்டு வந்த தண்ணீரைத் தெளித்தவுடன், அந்த பெண் மெல்ல கண் திறந்து எழுந்து உட்கார்ந்தாள்.

தண்ணீரைக் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், சார்லஸைப் பார்த்து "பயந்தே போயிட்டேன் அண்ணே!" என்றாள்.


நான் திடுக்கிட்டேன். இதே பெண் சில நிமிடங்களுக்கு முன் அந்த மேடையில் என்னவெல்லாம் செய்தாள்! சார்லஸ் அதி வேகத்துடன் கிடார் வாசிக்க அதே வேகத்துக்கு ஈடு கொடுத்து அவர் முன் நின்று ஆடிய அந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. சார்லஸை சுற்றி வந்து அவர் முதுகில் தன் முதுகு வைத்து ஆட, சார்லஸ் குனிந்து அவளை இன்னும் அழகாக அனுமதித்தது எல்லாம் மனசுக்குள் காட்சிகளாக ஓடின.

"அந்த பாட்டில் எனக்கு பக்கத்தில் வந்து விழுந்ததும் ஒரு நிமிஷத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அண்ணே!" என்றாள். தோள்களைக் குலுக்கி அழகாக பயப்பட்டாள்.

தம்ளரை என்னிடம் திரும்பக் கொடுத்து விட்டு, "தேங்க்ஸ் பிரதர்!" என்றாள். நான் புன்னகைத்து விட்டு நடந்தேன்.

'வேலை பண்ண வந்திருக்கோம். நம்ம வேலை உண்டு, நாம உண்டு அப்படின்னு இருக்கணும்' என்று பாபு மாஸ்டர் சொன்னதற்கு அர்த்தம் இப்போது புரிகிற மாதிரி இருந்தது.

[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, November 08, 2006

அழகிகள் உலகில்..

புல்லில் பனித் துளி
துளி - 8



பெங்களூருக்கு வந்த புதிதில் அந்த மாதிரி இக்கட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சும்மாவா? பதினைந்து நாட்கள்! தொடர்ந்து பதினைந்து நாட்கள்!

பெங்களூரின் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கும் அந்த பிரபலமான இரவு விடுதியில் பதினைந்து நாட்கள் தொடர்ந்து கேபரே பார்க்கும் இக்கட்டு தான் அது.

'இக்கட்டா?' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது. 'அருமையான உடற்கட்டைப் பார்த்து விட்டு வெளியே இக்கட்டு என்று சொல்கிறான் பார்' என்று ஒருவர் கேலி செய்வதும் கேட்கத் தான் செய்கிறது. இட்டுக் கட்டுதல் என்று நீங்கள் நினைத்தாலும் அது எனக்கு இக்கட்டு தான்.

கல்லூரி படிப்பை முடித்து விட்டு பெங்களூரில் அருமையான ஒரு அலுவலகத்தில் காலாட்டிக் கொண்டே செய்யும் ஒரு வேலையில் சேர்ந்து கை நிறைய நோட்டுகளைப் பார்க்கப் போகிறேன் என்று கண்களை மூடிக் கொண்டு வந்தவனுக்கு 'வேலை செய்து அனுபவம் பெற்று வா' என்று அலுவலகங்கள் எல்லாம் கையை விரித்து அனுப்பிய காலம் -

கல்லூரி நாட்களில் இசைக் குழுவில் இருந்த அனுபவத்தில் ஒரு பிரபல இசைக் குழுவில் சேர்ந்திருந்தேன். அங்கு இருந்த இசை தாதாக்கள் முன்னர் நான் கடுகு மாதிரி தான் தெரிந்தேன். ஆனாலும் என்னை ஊக்குவித்தார்கள். தாள லயம் எனக்கு அருமையாகத் தெரிகிறது என்று பாராட்டி இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வாய்ப்பு தந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் பற்பல ஊர்களுக்கும் செல்கிற வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மனம் வருமா என்ன? உதவித் தொகை மாதிரி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் தந்தார்கள். மூன்று மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க காங்கோ ட்ரம் வாசித்து விட்டு அதை வாங்கும் போது மனது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டதென்னவோ உண்மை தான். ஆனாலும் வேலை இல்லாமல் இருந்த இந்த பட்டதாரிக்கு அந்தத் தொகையே பெரிதாகத் தெரிந்தது.

அந்த மாதிரி பெரிய இசைக் குழுவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய அதிர்ஷ்டம். ஊர் ஊராக சுற்றும் வாய்ப்பு. எனக்குப் பிடித்த இசையுடன் உறவு. மாதத்தில் பதினைந்து நாட்களாவது இசை நிகழ்ச்சிகள். இவையெல்லாம் சேர்ந்து என்னை மௌனமாக அந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள வைத்தன.

90 சதவிகிதம் கன்னடப் படப் பாடல்கள் தான் நிகழ்ச்சியில் இருக்கும். .மற்றவை இந்தி பாடல்கள். போனால் போகிறதென்று இரண்டு மூன்று தமிழ் தெலுங்கு படப் பாடல்களும் இருக்கும். முதல் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் ரொம்பத் திணறிப் போனேன். எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த பாபு மாஸ்டர் தான் ரொம்ப உதவினார். கன்னடப் பட கேஸட்டுகள் கொடுத்துக் கேட்கச் செய்தார். ஓரிரு வாரங்களில் தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டேன்.

கல்யாணக் கச்சேரிகள் என்றால் தமிழ்ப் பாடல்கள் நிச்சயம் பாடுவார்கள். அதுவும் நிச்சயம் 'இளைய நிலா பொழியும்'. தமிழ் என்றால் கொஞ்சம் உற்சாகம் கூட்டி வாசிப்பதாக எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். தமிழ்ப் படப் பாடல் என்று தொகுப்பாளர் அறிவிக்கும் போது எல்லோரும் ஒரு சேர என்னைப் பார்ப்பார்கள். 'கணேஷன ஹாடு பந்த்தப்பா' (கணேஷுடைய பாடல் வந்து விட்டது} என்று கிண்டலடிப்பார்கள்.

இந்தக் குழுவில் இருந்ததால் பெங்களூரில் நடக்கும் மிக முக்கியமான ரெக்கார்டிங் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இளையராஜா ரெக்கார்டிங் நிகழ்ச்சியில் ஒரு முறையாவது பங்கேற்று விட வேண்டும் என்றெல்லாம் ஆசைப் பட ஆரம்பித்தேன்.

ஒரு முறை எங்கள் குழுவின் பிரதான அங்கத்தினரான பாலி ஒரு துண்டு சீட்டில் ஒரு தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தார். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் இடைப் பட்ட நேரத்தில் தான் அதைச் செய்தார்.

"இது ஹாலிடே இன் நம்பர். ரூம் நம்பர் 105. பாலு வந்திருக்காரான்னு கேட்டுட்டு வந்துடு" என்றார். நான் தலையாட்டி விட்டு அசிரத்தையாகக் கிளம்ப, திரும்பக் கூப்பிட்டார்.

" யார் தெரியும் தானே? எஸ்.பி. பாலசுப்ரமணியன்!" என்றார்.

எனக்கு அப்போதே கை நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நா..ன் எஸ்பிபி.யுடன் பேசப் போகிறேனா?!' என்று குதூகலித்தேன். ஏறக்குறைய ஓட ஆரம்பித்தேன்.

"கேன் ஐ ஸ்பீக் டூ மிஸ்டர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் ரூம் நம்பர் ஒன் நாட் ஃபைவ்" என்று கேட்டுவிட்டு என் இதயத் துடிப்பைக் கேட்டபடி காத்திருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

"சாரி சார், நோ ரெஸ்பான்ஸ் ஃப்ரம் த ரூம், எனி மெஸ்ஸேஜ்?"

'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி விடுங்கள்' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு இணைப்பைத் துண்டித்தேன்.

இந்த மாதிரி எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள், எப்போதும் மறக்கவே கூடாத நண்பர்கள், என் வாழ்க்கையில் நான் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்த முக்கிய காலகட்டத்தில் நான் சோர்ந்து போகாமல் காத்தவர்கள்.

அந்த அனுபவங்களில் முக்கியமானது எப்போதுமே என் உதட்டில் ஒரு புன்முறுவலைத் தேக்கி வைக்கும் அந்த நிகழ்வு.

பதினைந்து நாட்கள் - டிசம்பர் 16ஆம் தேதி முதல் புத்தாண்டு வரை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை சிபாரிசு செய்தார் பாபு மாஸ்டர். சுளையாக ஆயிரத்தைநூறு ரூபாய் என்று ஆசை காட்டி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார். கேபரே என்றதும் என் கற்பு பறி போன மாதிரி அலறி வேண்டாம் என்றேன். 'நீ ஒண்ணும் கேபரே ஆட்டத்துக்கு வாசிக்கப் போறதில்லை. அதுக்கு முன் அரை மணி நேரம் இண்டியன் செஷன் இருக்கும். அதுக்கு தான் வாசிக்கப் போறே!' என்றார்.

ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள். அரை மணி நேரம் இண்டியன் செஷன் அதை அடுத்து அரை மணி நேரம் கேபரே. அரை மணி நேர இடைவெளியில் அடுத்த காட்சி. இரண்டு காட்சிகளிலும் முதல் அரை மணி நேரம் இண்டியன் செஷன் என்று இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு பாடல்கள் பாடுவார்கள். யாரும் அதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. எப்படா கேபரே ஆரம்பிக்கும் என்று எல்லோருடைய கண்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்!

ஒரு மணி நேர வாசிப்புக்கு நூறு ரூபாய். ஆஹா, ஒப்புக் கொண்டேன். 'ஆனா, கேபரே...' என்று இழுத்தேன். 'அந்த சமயத்தில் நீ அங்கே இருக்கவே வேண்டாம். மெஜஸ்டிக்கை சுத்திப் பாரு. ஒரு மணி நேரம் கழிச்சு வா. போதும்' என்றார்.

முதல் நாள் இண்டியன் செஷன் முடிந்த அடுத்த விநாடி வெளியே தெருவில் இருந்தேன். எங்கே கேபரே தொடங்கி விடுவார்களோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

நான் இரண்டாவது காட்சிக்கு வந்த போது கிட்டாரிஸ்ட் சார்லஸ் என்னைப் பார்த்து மர்மமாக சிரித்த மாதிரி இருந்தது.

அடுத்த நாளும் நான் நல்ல பிள்ளையாக இரண்டாவது காட்சி தொடங்கும் நேரத்துக்கு உள்ளே நுழைந்தேன். சார்லஸ் அவசரமாக என்னிடம் வந்தார்.

"ஸ்டெல்லா உன்னைத் தேடிகிட்டிருந்தது. போய் பாரு" என்றார்.

"யா...ரு? ஸ்..டெல்லா?" என்றேன்.

பாபு அதற்குள் வந்தார்.

"யா...ரு? ஸ்..டெல்லா?" என்றேன் அவரிடமும். "எதுக்கு என்னைத் தேடணும்?" என்றேன்.

"ஸ்டெல்லா? அது கேபரே ஆர்ட்டிஸ்ட்" என்று சொல்லி விட்டு பாபு சார்லஸைப் பார்க்க, சார்லஸ் கண்ணடித்தார்.

"ஏம்ப்பா அந்த பையனை இப்படி கிண்டல் அடிக்கறீங்க?" என்று கடிந்து கொண்டார் பாபு. என் பக்கம் திரும்பி "சும்மா சொல்றாங்க" என்றார்.

பாபு அந்தப் பக்கம் போகிற வரை காத்திருந்த சார்லஸ் என் முதுகைத் தட்டினார்.

"ஏன் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்கு பயமா?" என்று பகபகவென்று சிரித்தார்.

"என்ன வயசு உனக்கு?" என்றார் சிகரெட்டைப் பற்ற வைத்து.

"இருபத்தி ஒண்ணு" என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அவனவன் நூத்தம்பது ரூபா கொடுத்துட்டு வர்றானுங்க. ஃப்ரீயா கொடுத்தாக் கூட வேணாங்கிறியே? அம்மா திட்டுவாங்களா?" என்று சொல்லி விட்டு திரும்ப பகபகபக!

அதற்குள் செஷன் ஆரம்பித்து விட, கண்களில் திரண்ட கண்ணீரைக் கட்டுப் படுத்த நிரம்ப சிரமப் பட்ட படி நடந்தேன். அன்றைக்கு எக்கச்சக்க தவறுகள்! இசை நின்ற பிறகும் நான் காங்கோ வாசித்துக் கொண்டே இருந்தேன். பாபு கண்களால் எரித்தார். "சாரி" என்று வார்த்தையில்லாமல் உதட்டசைத்தேன்.

அடுத்த நாள் இண்டியன் செஷன் முடிந்து வெளியே போகும் போது நான் திரும்பி சார்லஸைப் பார்க்க, அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 'வெளியே போகாமல் இருந்து விடலாமா?' என்று யோசித்தேன்.


'இருக்கிறதைப் பத்தி ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. கண்ணை மூடிக் கிட்டு உட்காரு' என்று அப்பா, அம்மா, தாத்தா, பெரிய தாத்தா, சித்தப்பா, மாமா எல்லோரும் எதிரொலிகளுடன் பேச.. வெளியே வந்து விட்டேன்.

அரை மணி நேரம் கழித்து திரும்பினேன். உள்ளே அதிரடியாக கிடாரும் ட்ரம்ஸும் முழங்கிக் கொண்டிருக்க.. மணியைப் பார்த்தேன் குழம்பி.

கவுண்ட்டரில் இருந்தவர் என்னைப் பார்த்து புன்னகைத்து "இன்னைக்கு கொஞ்சம் லேட்! இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்றார்.

நான் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து சாய்ந்து கொண்டேன்.

"இங்க உட்கார வேண்டாம்" என்றார் அவசரமாக. "பாஸ் வர்ற நேரம். பார்த்தா என்னைத் திட்டுவாரு. உள்ளே போயிடு. இல்லை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா" என்றார்.

நான் எழுந்து கதவு நோக்கி நடந்தேன். திறந்தேன்.

கிடாரும் ட்ரம்ஸும் சட்டென்று வெளியேறி என்னைத் தழுவிக் கொண்டன.

[தொடரும்..]

[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, November 01, 2006

இன்னாபா இது?!



இன்னாபா இது?!

Tuesday, October 31, 2006

அந்த விபரீத ஆசை

புல்லில் பனித் துளி
துளி 7

எனக்கு எப்போது அந்த விபரீத ஆசை மனதில் உதித்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!

தயவு செய்து நாக்கை உள்ளே இழுத்துக் கொள்ளவும். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் விவாதிக்கப் போகிற கட்டுரை இது அல்ல. நூறு சதவிகிதம் சைவக் கட்டுரை!

என்னுடைய பெயர் பத்திரிக்கையில் வர வேண்டும் என்கிற விபரீத ஆசை எப்போது எனக்கு ஏற்பட்டது? அதுவும் படு விபரீதமாக எல்லா பத்திரிக்கைகளிலும் என் பெயர் வர வேண்டும் என்று தான் நான் ஆசைப் பட்டேன்/ படுகிறேன்/ படுவேன். எதிரில் வருகிறவர்கள் கைகளில் என் கதை வந்த பத்திரிக்கை இருப்பது போலவும் அவர்கள் ரொம்ப சுவாரசியமாக அதைப் படிப்பது போலவும் கற்பனை செய்து கொள்வேன்.

எழுத்தாளராக ஆசைப் படுகிற அனைவருக்குமே இந்த எண்ணம் வரத் தான் வேண்டும். அது இல்லையெனில் அவர் எழுத்தாளராக முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. கனவு காண்பதற்கு யார் அனுமதி வேண்டும்? காசா? பணமா? கனவு காணுங்கள். அந்த கனவு இல்லையெனில் நிச்சயம் நனவு இல்லை.

என் கனவு முதலில் இப்படி இருந்தது. திருச்சி, சென்னை, இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒரு நிமிடத்துக்கு ஒரு தடவை வர வேண்டும் என்று. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேனா என்றால் அது தானில்லை. என் பெயர் வருகிற நேரம் நான் வானொலியைக் கேட்பேனோ மாட்டேனோ என்று நினைத்து பயந்து எந்தக் கடிதமும் அனுப்பவில்லை!

மூன்று முறை சிறுவர் நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒலிபரப்பானது. நிகழ்ச்சி பற்றி கருத்து அனுப்பி வைத்தேன். கடிதத்தைப் படித்து விட்டு, எழுதியனுப்பிய தம்பி கண்ணுக்குடி மேற்கைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்று சொன்னார்கள்.

என் பெயரைக் கேட்பதற்காக ஒரு மணி நேரம் வானொலி முன் தவமிருந்தது இப்போது கூட சிலிர்ப்பை என்னுள் ஏற்படுத்துகிறது. கடிதங்களைக் கடைசியில் தான் படிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும் எனக்கு பொறுமை இல்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் சத்தம் போடக் கூடாது என்று உத்தரவு போட்டு விட்டு, வானொலியின் ஒலியைக் கூட்டி வைத்து, ஒரு வேளை கரண்ட் போய் விடுமோ என்று கூடுதலாக பயந்து... அட, அட!

அடுத்த நாள் ரொம்பத் திமிராக நடை போட்டேன். வகுப்பில் இருந்த எல்லோரையும் அமைதிப் படுத்தி விட்டு, என் பெயர் சென்னை வானொலியில் வந்த விஷயத்தை சொன்னேன். 'அப்படியா?' 'நிஜமாவாடா?' இப்படியெல்லாம் சிலர் கேட்க, சிலர் அசுவாரசியமாக இருக்க, யாரும் அந்த நிகழ்ச்சியைக் கேட்காதது என் மனதில் மிக ஆற்றாமையை உண்டாக்கியது. அதற்கப்புறம் தான் பத்திரிக்கையில் பெயர் வர வேண்டும் என்று என் ஆசை மாறிப் போனது.

"அன்புடையீர், வணக்கம். தங்கள் 28.10.1977 தேதியிட்ட இதழில் வந்த 'பூட்டு' கதையை
கிட்டத் தட்ட பத்து முறை திரும்பத் திரும்பப் படித்தேன். [அப்பவும் புரியலையா?] அவ்வளவு அருமையாக இருந்தது கதை. இந்தக் கதையை அடுத்த இதழிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதை எழுதிய திருச்சி ராஜனுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவும். அவரது முகவரியை தயவு செய்து அனுப்பி வைக்கவும்' என்றெல்லாம் கடிதம் அனுப்ப ஆரம்பித்தேன்.

'கடிதம் வெளியானால் அதை நண்பர்களிடம் காண்பித்து காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப நம் பெயரைப் பார்க்க முடியும்' என்றெல்லாம் எனக்குள் சொல்லிக் கொள்வேன். கடிதம் தான் வரும் வழியைக் காணோம்.

இந்தப் பத்திரிக்கைகள் யாவும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை - ஒரே வழி நாம் பத்திரிக்கை தொடங்குவது தான் என்று முடிவு செய்தேன். ஆரம்பித்து விட்டேன். மல்லிகை - கையெழுத்து பத்திரிக்கை. ஆசிரியர் - கணேச மூர்த்தி என்று எழுதும் போது இதயம் பெருமிதத்தில் விம்மியது.

நான்கு பக்கங்கள் வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி ஒப்பேற்றி விட்டேன். முதல் இதழ் தயார்!
ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணங்கள் சேர்த்தேன். வகுப்பிற்கு ஆசிரியர் வரும் முன்னர் கிடைக்கும் நிமிடங்களைப் பயன் படுத்திக் கொண்டேன். இதையெல்லாம் வீட்டில் செய்தால் உதை விழும் என்பது நான் அறிந்ததே.

மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் [அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்லவன்!] டெஸ்க்குக்கு கீழ் மறைத்து வைத்து என் பத்திரிக்கையைப் படித்தார்கள். அவர்கள் மறைத்து வைத்துப் படிப்பதை தெரியாத மாதிரி நான் பார்த்து மனம் மகிழ்வேன்.

என் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதி முக்கிய இடம் வகித்தது. குமுதம் அரசு பதில்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். மாய்ந்து மாய்ந்து படிப்பேன். அதனால் என் பத்திரிக்கையில் நான் முதலில் சேர்த்தது கேள்வி-பதில் பகுதியைத் தான்.

முதல் இதழுக்கு கேள்வியும் நானே, பதிலும் நானே! அடுத்த இதழ் முதல் கேள்விகள் வந்து குவிந்தன. துண்டு சீட்டுகளில் கேள்விகள். கேள்வியைக் கொடுத்ததும் பதில் கேட்பார்கள். 'அடுத்த இதழைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வைப்பேன்.

இரண்டு இதழ்கள் வெளியானதும் எல்லோருக்கும் நான் பத்திரிக்கையை அனுப்பவில்லை. சந்தா தாரர்கள் மட்டும் தான் என் இதழைப் படிக்க முடியும். சந்தா எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெள்ளைத் தாள்கள் நான்கு பக்கங்கள். அது தான் சந்தா! என்னுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து தொடர்ந்து எல்லா இதழ்களுக்கும் கிழித்துக் கொண்டிருந்தால் வீட்டில் கிழித்து விடுவார்கள் என்பதால் இந்த வழியைக் கடைபிடிக்க வேண்டியதாயிற்று.

சந்தா கேட்டவுடன் யாரும் 'உன் பத்திரிக்கையே வேண்டாம்!' என்றெல்லாம் சொல்லவில்லை. தமிழ் வாத்தியார், கணக்கு வாத்தியார் அறுவையிலிருந்து தப்பிக்க இது அவர்களுக்கு தேவையாக இருந்தது போலும். தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எந்த ஆசிரியருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த என் பத்திரிக்கை ஒரு நாள் மாட்டிக் கொண்டது. தமிழாசிரியர் ஏதோ கேள்வி கேட்க - என் இதழில் கேள்வி-பதிலில் மூழ்கியிருந்த இளவழகன் அதை கவனிக்கவில்லை.

'என்ன அது?' என்று விரைந்து வந்து பிடுங்கிக் கொண்டார். பார்த்தவுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். கையெழுத்து காட்டிக் கொடுத்து விட்டது. இளவழகனை முறைத்து விட்டு பத்திரிக்கையை எடுத்து தன் புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டார். எனக்கு திக்கென்றது. எனது அப்பாவிடம் வத்தி வைத்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்பா தான் அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்!

வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா 'நில்லு!' என்று சொல்வார் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டே போனேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இரவு சாப்பாட்டின் போது அப்பா மெல்ல ஆரம்பித்தார்.

'என்னவோ பத்திரிக்கை எல்லாம் நடத்தறியாமே?'

கேட்டதும் 'ஆ,,மா!' என்று சாதத்தோடு வார்த்தைகளையும் மென்று விழுங்கினேன்.

'ரொம்ப நல்லா இருக்குன்னு மீனாட்சி சுந்தரம் பாராட்டிகிட்டே இருந்தார். கேள்வி பதில் பகுதிக்கு நீ தான் பதில் எழுதறியா?'

'ம்..'

'நல்லா இருந்ததுன்னு சொன்னார்.'

'முழு பத்திரிக்கையும் நான் தான் எழுதறேன்ப்பா!' என்றேன் மகிழ்ச்சி தாளாமல்.

'இதெல்லாம் இப்ப வேண்டாம். ஒழுங்கா படிச்சு உருப்படறதைப் பாரு. எஸ்.எஸ்.எல்.சி. முடிச்ச பிறகு இதையெல்லாம் வச்சுக்கோ!' என்று சொல்லி விட்டு 'ரசம் இன்னும் கொஞ்சம்' என்றார் அம்மாவிடம்.

என் பத்திரிக்கை நின்று போனது. எல்லோருக்கும் இரண்டு பக்கங்கள் சந்தாவைத் திரும்பக் கொடுத்து விட்டேன்!

[நன்றி: http://tamil.sify.com]

Thursday, October 19, 2006

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!



அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு
அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க
வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.


மேலும்..

Friday, October 06, 2006

இந்த மீனு போதுமா?



"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்.

"சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.

இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.


மேலும்..