Tuesday, October 31, 2006

அந்த விபரீத ஆசை

புல்லில் பனித் துளி
துளி 7

எனக்கு எப்போது அந்த விபரீத ஆசை மனதில் உதித்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!

தயவு செய்து நாக்கை உள்ளே இழுத்துக் கொள்ளவும். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் விவாதிக்கப் போகிற கட்டுரை இது அல்ல. நூறு சதவிகிதம் சைவக் கட்டுரை!

என்னுடைய பெயர் பத்திரிக்கையில் வர வேண்டும் என்கிற விபரீத ஆசை எப்போது எனக்கு ஏற்பட்டது? அதுவும் படு விபரீதமாக எல்லா பத்திரிக்கைகளிலும் என் பெயர் வர வேண்டும் என்று தான் நான் ஆசைப் பட்டேன்/ படுகிறேன்/ படுவேன். எதிரில் வருகிறவர்கள் கைகளில் என் கதை வந்த பத்திரிக்கை இருப்பது போலவும் அவர்கள் ரொம்ப சுவாரசியமாக அதைப் படிப்பது போலவும் கற்பனை செய்து கொள்வேன்.

எழுத்தாளராக ஆசைப் படுகிற அனைவருக்குமே இந்த எண்ணம் வரத் தான் வேண்டும். அது இல்லையெனில் அவர் எழுத்தாளராக முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. கனவு காண்பதற்கு யார் அனுமதி வேண்டும்? காசா? பணமா? கனவு காணுங்கள். அந்த கனவு இல்லையெனில் நிச்சயம் நனவு இல்லை.

என் கனவு முதலில் இப்படி இருந்தது. திருச்சி, சென்னை, இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒரு நிமிடத்துக்கு ஒரு தடவை வர வேண்டும் என்று. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேனா என்றால் அது தானில்லை. என் பெயர் வருகிற நேரம் நான் வானொலியைக் கேட்பேனோ மாட்டேனோ என்று நினைத்து பயந்து எந்தக் கடிதமும் அனுப்பவில்லை!

மூன்று முறை சிறுவர் நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒலிபரப்பானது. நிகழ்ச்சி பற்றி கருத்து அனுப்பி வைத்தேன். கடிதத்தைப் படித்து விட்டு, எழுதியனுப்பிய தம்பி கண்ணுக்குடி மேற்கைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்று சொன்னார்கள்.

என் பெயரைக் கேட்பதற்காக ஒரு மணி நேரம் வானொலி முன் தவமிருந்தது இப்போது கூட சிலிர்ப்பை என்னுள் ஏற்படுத்துகிறது. கடிதங்களைக் கடைசியில் தான் படிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும் எனக்கு பொறுமை இல்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் சத்தம் போடக் கூடாது என்று உத்தரவு போட்டு விட்டு, வானொலியின் ஒலியைக் கூட்டி வைத்து, ஒரு வேளை கரண்ட் போய் விடுமோ என்று கூடுதலாக பயந்து... அட, அட!

அடுத்த நாள் ரொம்பத் திமிராக நடை போட்டேன். வகுப்பில் இருந்த எல்லோரையும் அமைதிப் படுத்தி விட்டு, என் பெயர் சென்னை வானொலியில் வந்த விஷயத்தை சொன்னேன். 'அப்படியா?' 'நிஜமாவாடா?' இப்படியெல்லாம் சிலர் கேட்க, சிலர் அசுவாரசியமாக இருக்க, யாரும் அந்த நிகழ்ச்சியைக் கேட்காதது என் மனதில் மிக ஆற்றாமையை உண்டாக்கியது. அதற்கப்புறம் தான் பத்திரிக்கையில் பெயர் வர வேண்டும் என்று என் ஆசை மாறிப் போனது.

"அன்புடையீர், வணக்கம். தங்கள் 28.10.1977 தேதியிட்ட இதழில் வந்த 'பூட்டு' கதையை
கிட்டத் தட்ட பத்து முறை திரும்பத் திரும்பப் படித்தேன். [அப்பவும் புரியலையா?] அவ்வளவு அருமையாக இருந்தது கதை. இந்தக் கதையை அடுத்த இதழிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதை எழுதிய திருச்சி ராஜனுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவும். அவரது முகவரியை தயவு செய்து அனுப்பி வைக்கவும்' என்றெல்லாம் கடிதம் அனுப்ப ஆரம்பித்தேன்.

'கடிதம் வெளியானால் அதை நண்பர்களிடம் காண்பித்து காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப நம் பெயரைப் பார்க்க முடியும்' என்றெல்லாம் எனக்குள் சொல்லிக் கொள்வேன். கடிதம் தான் வரும் வழியைக் காணோம்.

இந்தப் பத்திரிக்கைகள் யாவும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை - ஒரே வழி நாம் பத்திரிக்கை தொடங்குவது தான் என்று முடிவு செய்தேன். ஆரம்பித்து விட்டேன். மல்லிகை - கையெழுத்து பத்திரிக்கை. ஆசிரியர் - கணேச மூர்த்தி என்று எழுதும் போது இதயம் பெருமிதத்தில் விம்மியது.

நான்கு பக்கங்கள் வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி ஒப்பேற்றி விட்டேன். முதல் இதழ் தயார்!
ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணங்கள் சேர்த்தேன். வகுப்பிற்கு ஆசிரியர் வரும் முன்னர் கிடைக்கும் நிமிடங்களைப் பயன் படுத்திக் கொண்டேன். இதையெல்லாம் வீட்டில் செய்தால் உதை விழும் என்பது நான் அறிந்ததே.

மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் [அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்லவன்!] டெஸ்க்குக்கு கீழ் மறைத்து வைத்து என் பத்திரிக்கையைப் படித்தார்கள். அவர்கள் மறைத்து வைத்துப் படிப்பதை தெரியாத மாதிரி நான் பார்த்து மனம் மகிழ்வேன்.

என் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதி முக்கிய இடம் வகித்தது. குமுதம் அரசு பதில்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். மாய்ந்து மாய்ந்து படிப்பேன். அதனால் என் பத்திரிக்கையில் நான் முதலில் சேர்த்தது கேள்வி-பதில் பகுதியைத் தான்.

முதல் இதழுக்கு கேள்வியும் நானே, பதிலும் நானே! அடுத்த இதழ் முதல் கேள்விகள் வந்து குவிந்தன. துண்டு சீட்டுகளில் கேள்விகள். கேள்வியைக் கொடுத்ததும் பதில் கேட்பார்கள். 'அடுத்த இதழைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வைப்பேன்.

இரண்டு இதழ்கள் வெளியானதும் எல்லோருக்கும் நான் பத்திரிக்கையை அனுப்பவில்லை. சந்தா தாரர்கள் மட்டும் தான் என் இதழைப் படிக்க முடியும். சந்தா எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெள்ளைத் தாள்கள் நான்கு பக்கங்கள். அது தான் சந்தா! என்னுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து தொடர்ந்து எல்லா இதழ்களுக்கும் கிழித்துக் கொண்டிருந்தால் வீட்டில் கிழித்து விடுவார்கள் என்பதால் இந்த வழியைக் கடைபிடிக்க வேண்டியதாயிற்று.

சந்தா கேட்டவுடன் யாரும் 'உன் பத்திரிக்கையே வேண்டாம்!' என்றெல்லாம் சொல்லவில்லை. தமிழ் வாத்தியார், கணக்கு வாத்தியார் அறுவையிலிருந்து தப்பிக்க இது அவர்களுக்கு தேவையாக இருந்தது போலும். தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எந்த ஆசிரியருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த என் பத்திரிக்கை ஒரு நாள் மாட்டிக் கொண்டது. தமிழாசிரியர் ஏதோ கேள்வி கேட்க - என் இதழில் கேள்வி-பதிலில் மூழ்கியிருந்த இளவழகன் அதை கவனிக்கவில்லை.

'என்ன அது?' என்று விரைந்து வந்து பிடுங்கிக் கொண்டார். பார்த்தவுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். கையெழுத்து காட்டிக் கொடுத்து விட்டது. இளவழகனை முறைத்து விட்டு பத்திரிக்கையை எடுத்து தன் புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டார். எனக்கு திக்கென்றது. எனது அப்பாவிடம் வத்தி வைத்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்பா தான் அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்!

வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா 'நில்லு!' என்று சொல்வார் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டே போனேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இரவு சாப்பாட்டின் போது அப்பா மெல்ல ஆரம்பித்தார்.

'என்னவோ பத்திரிக்கை எல்லாம் நடத்தறியாமே?'

கேட்டதும் 'ஆ,,மா!' என்று சாதத்தோடு வார்த்தைகளையும் மென்று விழுங்கினேன்.

'ரொம்ப நல்லா இருக்குன்னு மீனாட்சி சுந்தரம் பாராட்டிகிட்டே இருந்தார். கேள்வி பதில் பகுதிக்கு நீ தான் பதில் எழுதறியா?'

'ம்..'

'நல்லா இருந்ததுன்னு சொன்னார்.'

'முழு பத்திரிக்கையும் நான் தான் எழுதறேன்ப்பா!' என்றேன் மகிழ்ச்சி தாளாமல்.

'இதெல்லாம் இப்ப வேண்டாம். ஒழுங்கா படிச்சு உருப்படறதைப் பாரு. எஸ்.எஸ்.எல்.சி. முடிச்ச பிறகு இதையெல்லாம் வச்சுக்கோ!' என்று சொல்லி விட்டு 'ரசம் இன்னும் கொஞ்சம்' என்றார் அம்மாவிடம்.

என் பத்திரிக்கை நின்று போனது. எல்லோருக்கும் இரண்டு பக்கங்கள் சந்தாவைத் திரும்பக் கொடுத்து விட்டேன்!

[நன்றி: http://tamil.sify.com]

Thursday, October 19, 2006

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!



அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு
அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க
வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.


மேலும்..

Friday, October 06, 2006

இந்த மீனு போதுமா?



"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்.

"சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.

இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.


மேலும்..

Thursday, October 05, 2006

மறந்த முகங்கள்

புல்லில் பனித்துளி
துளி - 6



லுவலகத்தில் மிக முக்கியமான ஒரு கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் இருக்கும் போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத செய்தி அந்த அழைப்பில் இருந்தது.

நான் சொல்லப் போகும் முடிவுக்காக என் எதிர்க்க என் குழுவினர் காத்திருந்தனர். மிக முக்கியமான முடிவு. கூடுதல் இரண்டு மணி நேரம் எல்லோரும் ஒத்துழைத்தால் இந்தப் பணியை செவ்வனே முடித்து விடலாம். இந்த இக்கட்டான கட்டத்தைத் தாண்டி விட்டால், இன்னும் அருமையான பணிகள் தேடி வரும். எல்லோருமே கொஞ்சம் சோர்ந்திருந்தார்கள். அவர்களை உற்சாகப் படுத்தி இன்றைய பொழுதை நன்றாகக் கொண்டு சென்றாக வேண்டும். யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று குறித்து விட்டு அதைச் சொல்ல நிமிரும் போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு.

என் மொபைலை எடுத்து யார் என்று பார்த்தேன். புதிய எண். யாராக இருக்கும் என்று நெற்றி சுருக்கி விட்டு 'எக்ஸ்க்யூஸ் மீ' சொல்லி விட்டு 'ஹலோ' என்றேன்.

"அங்க்கிள், நல்லா இருக்கீங்களா?" என்றது மறுமுனை.

அங்க்கிள்.. புரிபடாத குரல். எங்கேயோ கேட்ட குரல் தான். ஆனால் சட்டென்று ஞாபகத்துக்கு வர மறுத்த குரல். யார் யார் என்னை அங்க்கிள் என்று அழைப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் அயற்சியாக இருந்தது. நான் ஐந்து விநாடிகளுக்கு மேல் மௌனம் காத்து விட்டேனோ?

"அங்க்கிள், யார்னு தெரியலை இல்லியா? நான் தான் ரமேஷ். நான் உங்க கிட்டே இதுக்கு முன் ஃபோன்ல பேசினதே இல்லியே, அதனால உங்களாலே அடையாளம் கண்டு பிடிக்க முடியலை. இப்ப ஞாபகம் வந்ததா?"

"ர..மேஷ்? ஓ, நல்லா இருக்கியா?"

இன்னும் அந்த ரமேஷின் முகம் என் மூளைத் திரைக்கு வர தயங்கிக் கொண்டிருந்தது. யார் இந்த ரமேஷ்?! அந்த வார்த்தைகள்.. அதில் இருந்த வேகம்.. இதெல்லாம் எனக்கு பரிச்சயமான ஒன்றாகத் தான் தெரிகிறது. ஆனால் மறந்து விட்டிருக்கிறேன்.

"ஆண்ட்டி எப்படி இருக்காங்க அங்க்கிள்? அப்புறம் ராஜி?"

"ம்ம். எல்லோரும் சௌக்கியம். அ..து.. ரமேஷ், நான் ரொம்ப முக்கியமான மீட்டிங்லே இருக்கேன். நான் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போன் பண்ணட்டுமா?"

இந்த அழைப்பிற்கான நேரம் இதுவல்ல! இதை எப்படியாவது தட்டிக் கழித்தாக வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது.

"வச்சுடாதீங்க அங்க்கிள்" அவசர அவசரமாக சொன்னான் ரமேஷ். "நான் பப்ளிக் பூத்ல இருந்து பேசுறேன். நீங்க திரும்ப போன் பண்ண முடியாது."

"ஓ! சாரி! சொல்லு ரமேஷ்."

நான் கடிகாரத்தைப் பார்த்தபடி கூறினேன். இந்த அழைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று என்னை நானே திட்டிக் கொண்டேன். என் குழுவினருக்கு கொஞ்சம் காத்திருக்கும் படி சைகையிலேயே சொன்னேன்.

"அங்க்கிள், அங்க்கிள், ப்ரஷாந்தை ஞாபகம் இருக்கா அங்க்கிள்?"

பாவி, உன்னையே எனக்கு ஞாபகம் இல்லை. யார் ப்ரஷாந்த்? முகம் தெரியாத அந்த ரமேஷ் மேல் கோபம் வந்தது. யார் ரமேஷ் என்பது போய் யார் ப்ரஷாந்த் என்று மனதைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்தேன்.

"அங்க்கிள் மறந்தே போயிட்டீங்களா எங்களை?" இப்போது அந்த குரலில் இனம் புரியாத சோகத்தைக் காண முடிந்தது.

"உங்க எதிர் வீட்டில் இருந்தோமே? அப்புறம் நாங்க மைசூர் பேங்க் காலனிக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்துட்டோம். நான், ப்ரஷாந்த், ராம், சுதாகர், பிரேமா.. மறந்துட்டீங்களா அங்க்கிள்?"

சே! இவர்களை எப்படி மறந்தேன்? ரமேஷ்! வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்கு வந்ததும் கண்களைக் கொஞ்சம் பழக்கப் படுத்திக் கொண்ட பின்னர் மெல்ல தெரிய ஆரம்பிக்கிற உருவம் போல் ரமேஷ் என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தான்.

"ரொம்ப நாள் ஆச்சு இல்லியா பேசி. உடனே கண்டுபிடிக்க முடியலை. அப்புறம் எனக்கு ஒரு அஞ்சாறு பேர் ரமேஷ் தெரியும். குழம்பிட்டேன். சொல்லு. அப்பா அம்மா எப்படி இருக்காங்க? ப்ரேமா இப்ப ஒன்பதாவது இல்லையா? சுதாகர் ராம் ரெண்டு பேரும் நல்லா படிக்கிறாங்களா? இல்லை இப்பவும் சண்டை போட்டுகிட்டிருக்காங்களா? அப்புறம் குட்டி ப்ரஷாந்த் எப்படி இருக்கான்?" மூச்சு விடாமல் பேசினேன். என்னவோ என் உறவினர்களை நிரம்ப நாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி என் வார்த்தைகளில் தெரிந்தது.

"ப்ரஷாந்த் இப்ப இல்லை அங்க்கிள்." அவன் குரல் உடைந்தது.

"செ.. செ.. செத்துப் போயிட்டான் அங்க்கிள்"

"என்ன?"

"பஸ் மேலே ஏறிடுச்சு அங்க்கிள்."

"ஐயோ! எப்படி ஆச்சு? ரோட் க்ராஸ் பண்ணும் போதா?"

"இல்லை அங்க்கிள், அப்பாவோட பஸ்ஸில் தான். இவன் பின்னால் இருக்கிறது தெரியாமல் ரிவர்ஸ் எடுக்கப் போய், அடிபட்டு செத்துப் போயிட்டான் அங்க்கிள். ஒரு மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருந்தோம். இப்ப தான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாலே போயிட்டான்."

"ச்ச்ச்ச்ச்"

"எங்களுக்கு இந்த ஊர்ல யாரைத் தெரியும்? உங்க ஞாபகம் தான் உடனே வந்தது. அதான் உங்களுக்கு போன் பண்ணினேன். ஆண்ட்டிக்கும் சொல்லிடுங்க அங்க்கிள். என்னாலே பேச முடியலை அங்க்கிள். நான் வச்சுடறேன் அங்க்கிள். ப்ரஷாந்த்!" என்று அவன் விக்கி விக்கி அழுவதைக் கேட்க முடிந்தது. சட்டென்று தொடர்பு அறுபட்டது.

அலுவலகத்தில் வேலை அதற்கப்புறம் ஓடவில்லை. அந்த துரு துரு ப்ரஷாந்த் என் மனது முழுக்க ஓடி ஓடி விளையாட ஆரம்பித்தான். என் குழுவினருக்கு சில முக்கியக் குறிப்புகள் கொடுத்து விட்டு நான் கிளம்பினேன்.

'அங்க்கிள், நல்லா இருக்கீங்களா?'

அந்த சோக நேரத்திலும் என் நல விசாரிப்பை செய்த அந்த ரமேஷ் ரொம்ப உயரத்தில் ஏறி நின்றிருப்பதாக உணர்ந்தேன். வீடு.. அலுவலகம்.. திரும்ப வீடு! வாழ்க்கை இப்படி இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்க.. முக்கியமான இந்த மாதிரி மனிதர்களை நாம் மறந்தே போய் விடுகிறோம். சொல்லப் போனால் நம் உற்றார் உறவினரை விட அதிகமாக மதிக்கப் பட வேண்டியவர்கள் இவர்கள் தான் என்று சொல்ல வேண்டும்.

மங்களூரில் இருந்து பிழைப்புக்காக பெங்களூர் வந்த குடும்பம் அது. அப்பா பஸ் டிரைவர். மாதத்தில் பாதி நாட்கள் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் முழுக்கக் குடித்து விட்டு சுருண்டு விடுவார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கேட்ட கேள்விக்கு இரண்டு வார்த்தைகளில் பதில் வரும். அவ்வளவே.

மனைவியும் அந்தக் குழந்தைகளும் நேரெதிர். நிறுத்தவே முடியாத பேச்சு. பேச்சு, சிரிப்பு. சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வறுமை.. சோகம் கலந்த வாழ்க்கை இதை மறைக்க அவர்கள் வெளியே சிரிக்கிறார்களோ என்று சில சமயம் நான் நினைத்திருக்கிறேன்.

புத்தாண்டை வரவேற்க வீடு முழுக்க விளக்குகள் ஏற்றி விட்டு அந்த சிறிய வீட்டில் நடக்க முடியாமல் அடி மேல் அடி வைத்து நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ஹோலி தினத்தன்று காலையில் சீக்கிரமே நான் அலுவலகம் சென்று விட, என்னை வண்ணத்தில் குளிப்பாட்ட திட்டம் போட்டுக் கொண்டு, மாலை நான் அலுவலகத்தில் இருந்து வருவதற்காக காத்திருந்தன அந்த வாண்டுகள். மாலை நான் வீடு திரும்பவும் 'ஓ...' வென்று கூக்குரலிட்டுக் கொண்டு வந்தவர்கள் நின்று சற்று தயங்கினார்கள்.

"பளிச்சுன்னு இப்படியா வெள்ளை சட்டை போட்டுக்கிட்டிருக்கிறது அங்க்கிள்? போங்க, போய் கழட்டிட்டு வாங்க!" என்று சொல்லி பெரிய மனது பண்ணி பனியன் லுங்கிக்கு மாறியவுடன் ஹோலி கொண்டாடிய காட்சி கண்களில் கண்ணீரில் அமிழ்ந்து போனது.

"என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?" என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் மனைவி.

ப்ரஷாந்தைக் கண்டால் மிக மிகப் பிரியம் அவளுக்கு. அதனால் தான் நான் செய்தியை தொலை பேசியில் தெரிவிக்கவில்லை.

இந்த செய்தியை எப்படி அவளிடம் சொல்லப் போகிறேன்?

[நன்றி: http://tamil.sify.com]